கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும் முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே.
|
1
|
சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில் ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச் சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே.
|
2
|
காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும் மாமல முஞ்சம யத்துள் மயலுறும் போமதி யாகும் புனிதன் இணையடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.
|
3
|
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர் ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.
|
4
|
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம் வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார் தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார் கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.
|
5
|
Go to top |
மயக்குஞ் சமய மலமன்னும் மூடர் மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார் மயக்குறு மாமாயை மாயையின் வீடும் மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
|
6
|
மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.
|
7
|
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.
|
8
|
சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம் சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம் சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.
|
9
|
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப் பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச் சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே.
|
10
|
Go to top |
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற் றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.1,
|
11
|