பரிவின் தன்மை உருவுகொண் டனையவன் போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன் குருதி புலராச் சுரிகை எஃகம் அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன் தோல்நெடும் பையில் குறுமயிர் திணித்து
வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன் உழுவைக் கூனுகிர்க் கேழல்வெண் மருப்பு மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன் நீலப் பீலி நெற்றி சூழ்ந்த கானக் குஞ்சிக் கவடி புல்லினன் முடுகு நாறு குடிலை யாக்கையன் வேங்கை வென்று வாகை சூடிய சங்கரன் றன்இனத் தலைவன் ஒங்கிய வில்லும் அம்பும் நல்லன ஏந்தி ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கி கணையில் வீழ்த்துக் கருமா அறுத்து கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி நாவில் வைத்த நாட்போ னகமும் தன்தலைச் செருக்கிய தண்பளித் தாமும் வாய்க்கல சத்து மஞ்சன நீரும் கொண்டு கானப் பேருறை கண்ணுதல் முடியிற் பூசை அடியால் நீக்கி நீங்காக் குணத்துக் கோசரிக் கன்றவன் நேசங் காட்ட முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம்
தக்கி ணத்திடை இழிதர அக்கணம் அழுது விழுந்து தொழு தெழுந் தரற்றிப் புன்மருந் தாற்றப் போகா தென்று தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம் பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க அற்ற தென்று மற்றக் கண்ணையும் பகழித் தலையால் அகழ ஆண்டகை ஒருகை யாலும் இருகை பிடித்து ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்
நல்லை நல்லை எனப்பெறும் திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக் கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.
|
1
|