சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.006   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவையாறு - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=t9JFCSZSqkU   Add audio link Add Audio

கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

1
வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான்.

தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.

2
அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத்திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.

கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;
மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;
ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

3
ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமையோடு, பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.

பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார்,
வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

4
பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும், எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன்.

வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,
வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி,
ஆன் அஞ்சு, ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே.

5
கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார்.
Go to top

எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

6
எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத இயல் பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதி சூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.

ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

7
யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள் தாமே அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச்சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேதவடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகி உலகின் முதல்வனாய் விளங்குபவனும் ஆகிய பெருமான் ஐயாறுடைய ஐயனாவான்.

குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே.
பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

8
ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குராமலர்களைக் கொண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப்பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய் எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம்.

உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

9
வேதங்கள் உரைத்த பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலைமலைக்கீழ் அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதி சூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார்.

மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

10
ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால்போலத் திரண்ட அழகிய காம்பினையும் கழல்போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.
Go to top

கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

11
கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத் திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து, நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம் பொருள் எனத்தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக் காத்தருளுவான்.

பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள்,
போய்
மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.

12
பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவையாறு
1.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
1.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
1.130   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.006   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்   (திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
5.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
6.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
6.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
7.077   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000