சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

தென்திருமுல்லைவாயில் - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா ராகத்தில் திருமுறை அருள்தரு கோதையம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=qfep3aaid6U   Add audio link Add Audio

துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.

1
விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும் , நடனமாடும் ஒளி பொருந்திய வடிவின னும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத் தலம் ஆகும் .

பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன், அயனைப்
படைத்த பரமன்,
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க
நின்ற அரன், ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம்
மோத வெருவி,
தெருவத்தில் வந்து, செழு முத்து அலைக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.

2
பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும் , அயனைப்படைத்த பரமனும் , பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படு வோனுமாகிய அரனது ஊர் , உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பி களும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழு மையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயி லாகிய இத்தலமாகும் .

வாராத நாடன், வருவார் தம் வில்லின் உரு மெல்கி
நாளும் உருகில்
ஆராத இன்பன், அகலாத அன்பன், அருள் மேவி நின்ற
அரன், ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை
பிரியாள்
தீராத காதல் நெதி நேர, நீடு திரு முல்லை வாயில்
இதுவே.

3
மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன் , உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும் . இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பம் அருள்பவன் . அகலாத அன்புடையவன் . அத்தகைய அரன் அருள் செய்ய எழுந் தருளியுள்ள ஊர் , நீங்கா ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு
மூன்றொடு ஏழும் உடன் ஆய்,
அன்று இன்றொடு என்றும், அறிவு ஆனவர்க்கும்
அறியாமை நின்ற அரன் ஊர்
குன்று ஒன்றொடு ஒன்று, குலை ஒன்றொடு ஒன்று, கொடி
ஒன்றொடு ஒன்று, குழுமிச்
சென்று, ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு
முல்லைவாயில் இதுவே.

4
ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு . புருடதத்து வம் இருபத்தைந்தாவது தத்துவம் . இவ்விருபத்தைந்து தத்துவங் கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன் . இதனை அறியாதார் இருபத் தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர் . இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர் , குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும் , குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன், விடை
நாளும் ஏறு குழகன்,
நம்பன், எம் அன்பன், மறை நாவன், வானின் மதி ஏறு
சென்னி அரன், ஊர்
அம்பு அன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி
கோபுரங்கள், அழகு ஆர்
செம்பொன்ன செவ்வி தரு மாடம், நீடு திரு முல்லை
வாயில் இதுவே.

5
பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஓரு கூற்றாகக் கொண்டவன் . நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன் . நம் மேல் அன்புடையோன் . மறையோதும் நாவினன் . வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர் , அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர் ஆடும் அரங்குகளும் , அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன் னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும் .
Go to top

ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட
ஒருவன்,
ஆன் ஏறு அது ஏறி, அழகு ஏறும் நீறன், அரவு ஏறு
பூணும் அரன், ஊர்
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து, குயில் ஏறு
சோலை மருவி,
தேன் ஏறு மாவின் வளம் ஏறி, ஆடு திரு முல்லை வாயில்
இதுவே.

6
ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன் . ஆனேற்றின் மிசை ஏறி , அழகுதரும் திருநீற்றை அணிந்தவன் . பாம்பினை அணி கலனாகப் பூண்டவன் . அவ்வரனது ஊர் , மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும் , மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும் , தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற
நிமலன்;
அஞ்சு ஆடு சென்னி, அரவு ஆடு கையன்; அனல் ஆடும்
மேனி அரன்; ஊர்
மஞ்சு ஆரும் மாடமனை தோறும், ஐயம் உளது என்று
வைகி வரினும்,
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.

7
மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன் . ஆனைந்தாடுபவன் . அரவு ஆடும் கையன் . அனல்போன்றமேனியன் . அவ் அரனது ஊர் , மேகங் கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சை யேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திரு முல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும்
இற்று நெரிய,
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன்;
எங்கள் அரன்; ஊர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற
பொன்னி வடபால்,
திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திரு முல்லை
வாயில் இதுவே.

8
கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும் , உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனியனாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரிநூலன்;
வேதமுதல்வன்,
பால் ஆடு மேனி கரியானும், முன்னியவர் தேட நின்ற
பரன்; ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல்
வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள, மல்கு திரு முல்லை
வாயில் இதுவே.

9
திருமேனிமேல் நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன் . வேதமுதல்வன் . பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன் . அவனது ஊர் , காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய் , கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும் .

பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன்; நம் நம்பன்;
அடியே
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர், அமண், மாய
நின்ற அரன்; ஊர்
வனம் மல்கு கைதை, வகுளங்கள் எங்கும், முகுளங்கள்
எங்கும் நெரிய,
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லை
வாயில் இதுவே.

10
பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன் . நம்பால் அன்புடையவன் . தன் திருவடியை நினையாத சமணர் தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன் . அப்பெருமானது ஊர் , வனங்களில் தாழை மரங்கள் , மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும் , அரும்பு களை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திரு முல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .
Go to top

அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்
செய்த எந்தை, மருவார்
திணி கொண்ட மூன்றுபுரம் எய்த வில்லி, திரு
முல்லைவாயில் இதன்மேல்,
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன்
ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர், அகல்வானம்
ஆள்வர், மிகவே.

11
அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த எந்தையாவர் . பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர் . அப்பெருமான் எழுந்தருளிய திரு முல்லை வாயிலாகிய இத்தலத்தின்மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: தென்திருமுல்லைவாயில்
2.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துளி மண்டி உண்டு நிறம்
Tune - பியந்தைக்காந்தாரம்   (தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோதையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000