மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட நின்ற எம் இறை;
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,
அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!
|
1
|
பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும் , தேவர்களும் , இந்திரனும் வழிபட வீற்றிருக் கின்ற எங்கள் இறைவனாய் , வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும் , ஆதியுமாகிய அடிகள் அல்லரோ ?. | |
படை உடை மழுவினர், பாய் புலித்தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்,
விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய,
சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!
|
2
|
இறைவர் மழுவைப் படையாக உடையவர் . பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர் . கோவணத்தை உகந்து அணிந்தவர் . இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர் . திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ ? | |
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய,
ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!
|
3
|
இறைவர் பாலொடு , நெய் , தயிர் மற்றும் பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர் . யானைத்தோலைப் போர்வையாகவும் , புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர் . முப்புரி நூலணிந்த மார்பினர் , சிவஞானிகள் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அறம் உரைத்த எம் தலைவர் அல்லரோ ? | |
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்,
வேழம் அது உரித்த, வெண்காடு மேவிய,
யாழினது இசை உடை, இறைவர் அல்லரே!
|
4
|
புலிநகக் கொன்றையும் , செருந்தியும் , நறுமணமிக்க புன்னை மலர்களும் , தாழையும் , குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் , யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும் , யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ ? | |
பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை,
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய,
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!
|
5
|
எம் இறைவர் , பூதகணங்கள் பல உடைய புனிதர் . புண்ணிய வடிவினர் . தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும் , துன்பங்களையும் தீர்த்தருளுபவர் . அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர் . திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ ? | |
| Go to top |
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ, அல்லல் இல்லையே.
|
6
|
மண்ணுலகத்தோரும் , விண்ணுலகத்தோரும் , மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர் . வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை . | |
நயந்தவர்க்கு அருள் பல நல்கி, இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய,
பயம் தரு மழு உடை, பரமர் அல்லரே!
|
7
|
விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி , இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார் . அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ ? | |
மலை உடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி
தலை உடன் நெரித்து, அருள் செய்த சங்கரர்;
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய,
அலை உடைப் புனல் வைத்த, அடிகள் அல்லரே!
|
8
|
கயிலைமலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்டமுடி , தலை , உடல் ஆகியவற்றை நெரித்து , பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட , அருள் செய்த சங்கரர் , மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர் . அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளும் பெருமான் அவர் அல்லரோ ? | |
ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும் ஆய்த்
தேடவும், தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய,
ஆடலை அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!
|
9
|
பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , திருஅடியையும் காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய் விளங்கியவரும் , பலபல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ ? | |
போதியர், பிண்டியர், பொருத்தம் இ(ல்)லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ, அல்லல் இல்லையே.
|
10
|
புத்தரும் , சமணரும் பொருத்தம் இல்லாதவராய் , இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும் , நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர் . எனவே அவர்களைச் சாராது , வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லையாம் . | |
| Go to top |
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்,
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.
|
11
|
பசுபுண்ணியம் , பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன் , செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும் . | |