மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
|
1
|
உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம் . தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம் . இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . | |
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
|
2
|
பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட , பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து ` யார் தந்த அடிசிலை உண்டனை ?` என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் . அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார் . | |
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!
|
3
|
தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும் , நெற்றியில் ஒரு கண் கொண்டும் , கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . | |
அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே!
நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!
|
4
|
நெஞ்சமே ! வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக . ( இறைவனை வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்பது குறிப்பு ). ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , கயல்மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர்வளமும் , நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . | |
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே!
விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
|
5
|
நெஞ்சமே ! நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக ! இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுது போற்றும்படி , கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய கழுமலம் என்னும் வளநகரில் பெண்அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . | |
| Go to top |
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!
|
6
|
நெஞ்சமே ! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை . நான்கு வேதங்களையும் நன்கு கற்று , கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும் , பெரிய அல்குலும் உடைய , அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு , என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் . | |
குறைவளை வதுமொழி குறைவு ஒழி, நெஞ்சமே!
நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே!
|
7
|
நெஞ்சமே ! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக . நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , இருண்ட சோலைகளையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில் , பிறைச்சந்திரனைச் சடைமுடியில் சூடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் . | |
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட,
நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!
|
8
|
பெருமையுடைய கயிலைமலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார் . பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட , கூர்மையான வாளை அருளினார் . திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகை யாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் . | |
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
|
9
|
நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும் , பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்கி நின்றனன் . நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண்யானையின் நடைபோன்று விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . | |
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்!
கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!
|
10
|
மாலை போன்று , பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும் , புத்தர்களும் , இறையுண்மையை எடுத்துரைக்காது , தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால் , அவற்றை விடுத்து , இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக . பசுமைவாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . | |
| Go to top |
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.
|
11
|
நீர்வளமும் , தேன்வளமும் பெருகிய திருக்கழுமல வளநகரில் , மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவ பெருமானை , அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர் . | |