சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புறவம் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=IBQf-wnI-Qo   Add audio link Add Audio

பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.

1
சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்ட வடிவமுடையவர் . பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு , பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர் . விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது , புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.

2
கொக்கின் இறகோடும் , பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான் . எலும்பு மாலை அணிந்தவர் . பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர் . திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர் . அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.

3
வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும் , வரிகளையுடைய வளையல்களையும் , இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான் . அவர் மழுவோடு , மானையும் கரத்தில் ஏந்தியவர் , இடப வாகனமுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க , அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.

4
பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும்படி செய்தவரும் , பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும்படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.

5
சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர் . பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர் . அவர் வீற்றிருந்தருளும் தலமாவது , வேள்வி வளர்த்து , வேத மந்திரங்கள் ஓதி , பிற வாத்தியங்கள் ஒலிக்க , தீபமேற்றிப் பிரமன் , மலரும் , நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .
Go to top

சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.

6
இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும் , வேதங்கள் கடைப்பிடிக்கும்படிக் கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும் , வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் , வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும் , தம் திருவடிகளைப் போற்றி வழிபட , அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம் , கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது , பொன் முடிப்புப் போன்ற புன்னை யரும்பு , பொதியவிழ்வது போல மலர , அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.

7
சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர் . பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர் . யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையுடையவர் . எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர் . இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.

8
வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும் , ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.

9
உள்ளிடத்தில் தேன் பொருந்திய , இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து , சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கும் பிரமனும் , ஏழுவகையாக அமைந்த வானகம் , மலை , கடல் , நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற் கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!

10
நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும் , துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்றமுடையவர்கள் . பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள் , இவ்விருவகை நீசர்களை விட்டு , சிவபெருமானைத் தியானியுங்கள் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இப்பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .
Go to top

போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.

11
மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி , அந்தணர்களின் தலைவனும் , மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புறவம்
1.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நறவம் நிறை வண்டு அறை
Tune - தக்கேசி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
Tune - குறிஞ்சி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் இயல் உருவினர், பெருகிய
Tune - சாதாரி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000