சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=ZKbm_jU5Dms   Add audio link Add Audio

பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
இடம் கம்பமே.

1
இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தைச் செலுத்துபவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர் . சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர் . ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் நுட்பமான கருத்தாக விளங்குபவர் . ஆலநிழலின் கீழ்த் தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்பொருள் உரைத்த முதல்வர் . போர்புரிய வந்த வில்லையுடைய மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம் . நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் திருக்சச்சியேகம்பமே .

சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம் உடம்பிலும்
வெண்தலைமாலையே;
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே; பரந்து
இலங்கு ஐயில் சூலம் அது என்பதே;
புடை பரப்பன, பூதகணங்களே; போற்று இசைப்பன, பூதகணங்களே
கடைகள்தோறும் இரப்பதும் மிச்சையே; கம்பம் மேவி
இருப்பதும் இச்சையே.

2
சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது வெண்டலை மாலை ஆகும் . உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார் . அழகிய கையில் சூலப்படை ஏந்தி உள்ளவர் . பரந்து விளங்கும் கையைப் படை போன்று கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய அணிகலன் திருமாலின் கண் ஆகும் . பக்கத்தில் சூழ்ந்து விளங்குவனவும் , போற்றிசைப்பனவும் பூதகணங்களே . அப் பெருமான் வாயில்கள் தோறும் சென்று இரப்பது உணவே . அவர் திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் .

வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே; ஏறு முன் செலத்
தும்பை மிலைச்சியே!
அள்ளி நீறு அது பூசுவ தாகமே; ஆன மாசுணம் மூசுவது ஆகமே;
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே; போன, ஊழி, உடுப்பது உகத்துமே;
கள் உலாம் மலர்க் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர்க்
கம்பம் இருப்பு அதே.

3
சிவபெருமான் வெள்ளெருக்கமும் , தும்பையும் சூடியுள்ளவர் . தும்புக் கயிற்றைக் கொண்டு இடபத்தைக் கட்டியுள்ளவர் . திருநீற்றினை உடம்பிலே பூசியுள்ளவர் . உடம்பைப் பாம்புகளால் மூடியுள்ளவர் . புள்ளிகளையுடைய புலித்தோல் , மான்தோல் ஆடைகளை விரும்பி அணிபவர் . ஊழிக்காலத்தில் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுத் தம்முள் ஒடுக்கிக் கொள்வார் , ஒவ்வொரு யுகத்திலும் , தேன் பொருந்திய மலர்களை அணிந்துள்ள , உலகைத் தாங்கும் தூண் போன்ற சிவபெருமான் காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து அருளு கின்றார் .

முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி ஆமை அணிந்த முதல்வரே;
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே; பாலும் நெய் உகந்து
ஆட்டும் பரிசரே;
வற்றல் ஓடு கலம், பலி தேர்வதே; வானினோடு கலம், பலி, தேர்வதே,
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பதே.

4
சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த முதல்வர் . வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர் . ஒளி பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர் . பாலாலும் , நெய்யாலும் திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர் . வற்றிய மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர் . தேவர்களாலும் , ஏனைய உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப் பூசை செய்யப்படுபவர் . அவரைப் போற்றாதவர்கள் மனம் இரும்புத்தூண் போன்றது . அப்பெருமான் திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் .

வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை நஞ்சம்
மிசையல் கருளியே;
ஆடுபாம்பு அரை ஆர்த்தது உடை அதே; அஞ்சு பூதமும்
ஆர்த்தது உடையதே;
கோடு வான்மதிக்கண்ணி அழகிதே; குற்றம் இல் மதிக் கண்ணி அழகிதே;
காடு வாழ் பதி ஆவதும் உ(ம்)மது; ஏகம்பம் மா பதி
ஆவதும் உ(ம்)மதே.

5
சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கறுத்தவர் . ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி அதன்மேல் ஆடை அணிந்தவர் , பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால் ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது . வளைந்த ஆகாயத்தில் விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற அணிந்தவர் . களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை உணர்தற்கு இனிமையானது . சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம் , திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .
Go to top

இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே; இமயமாமகள், தம் கழல், கையதே;
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே; ஆழியான்
தன் மலர்ப் பொறை தாங்கியே;
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே, பேதைமார் மனம் வாடுதல் செய்துமே,
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே, காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பு அதே.

6
இறைவர் கொடிபோன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையிலேந்தியவர் . இமயமலையரசனின் மகளான உமாதேவியின் கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன . அடியவர்களால் பூசிக்கப்படும் அரும்புகளையும் , மலர்களையும் பாரமாகத் தாங்குபவர் . சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய உடலெலும்பாகிய கங்காளத்தைச் சுமப்பவர் . பகலில் திருநடனம் செய்பவர் . தாருகாவனத்து முனிபத்தினிகளின் மனம் வாடச் செய்பவர் . கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக் காணப்படும் திருக் கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .

முதிரம் மங்கை தவம் செய்த காலமே, முன்பும், அம்
கைதவம் செய்த காலமே,
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே, வேழம் ஓடகில்
சந்தம் உருட்டியே,
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே, ஆன் ஐ ஆடுவரத் தழுவத்தொடே,
கதிர் கொள் பூண் முலைக் கம்பம் இருப்பதே; காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பதே.

7
மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை முற்காலத்தில் இமயமலையில் சிவபெருமானைக் கணவராக அடையத் தவம் செய்தாள் . பின் அம்பிகை கம்பையாற்றில் தவம் செய்யும் இக்காலத்திலும் மூங்கில் , அகில் , சந்தனம் , மற்றும் ஏனைய முருட்டு மரங்களையும் , யானை முதலிய மிருகங்களையும் ஓட முடியாதவாறு ஆரவாரத்தோடு கம்பையாறு அடித்துக் கொண்டு வர , பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படும் சிவபெருமானைத் தழுவுவதால் முலைத்தழும்பு தம்பம்போல் உறுதியான அவர் மார்பில் விளங்குகின்றது . அப்பெருமான் காஞ்சிமாநகரிலுள்ள திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல்
நெடுத்த (அ)பலத்தையே
கொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும் கால்வு இரலையே;
உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம்
உண்டு, அத் தலையிலே;
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

8
சிவபெருமான் , இராவணன் கைலைமலையை எடுத்த வலிமையை , மேற்சென்று சிதறுவித்தலால் , அவன் வலிமையற்றவன் என்பதை உணர்த்தும் வகையில் தம் திருப்பாத விரலை ஊன்றியவர் . தாருகவனத்து முனிவரேவலால் கொலை செய்ய வந்த மானை ஏந்தியுள்ளவர் . அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது தலை மண்டையோட்டிலே . சந்திரனுக்கு இடம் கொடுத்தது அவர் தலையிலே . நஞ்சைக் கண்டத்தில் அடக்கிய , உலகைத் தாங்கும் தூண் போன்றவன் சிவபெருமானே . கடவுளாகிய அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே .

தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு சோதியே;
பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப் பறவையே,
சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி திரிந்துமே,
காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது கம்பமே.

9
அம்பறாத் தூணியாகிய நெற்றிக்கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளை உடையவரே . அவற்றிலிருந்து தோன்றியவரே இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சுடர்விடு ஞானமயமான முருகக் கடவுளாவார் . தம் வலிமையைப் பாராட்டி முடி காண்பான் சென்ற பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி ஆகாயத்திலும் , திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும் செருக்கோடும் , கீழ்மைத்தன்மையோடும் இறைவனைக் காண முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும் அவர்கள் கண்டது அக்கினித் தம்பமாகிய உமது வடிவத்தையே . பரம்பொருளாகிய நீ விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே ஆகும் .

ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்-திறம் ஈர் உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது, பெரிதுமே;
தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி கைப்பரே;
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

10
இறைவரே ! யானையின் உடம்பினை உரித்ததாகிய தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர் . உம்முடைய உண்மைத்தன்மை சக்தி , சிவம் என இரண்டு திறத்தது . உமது பாகத்திலுள்ள அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது . உயிர்கள் ஆன்ம முயற்சியினால் உம் திருவடிகளை அடைதல் அரிது . புத்தர்களும் உம்மை அறியாது திகைப்பர் . அவர்கள் அறிவும் தம் நிலைமை மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை வெறுப்பர் . கருநிறமுடைய சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர் . பரம்பொருளாகிய நீர் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே .
Go to top

கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர்
தீர்த்திடு உகு அம்பமே;
புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப் புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின்
பொருள் ஆயின கொண்டுமே,
பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின,
பத்துமே.

11
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து விளங்குவது திருவேகம்பம் என்னும் திருத்தலம் . அதனை விரும்பி வழிபடுபவர்கள் பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச் சொரியும் துன்பக் கண்ணீரைத் தீர்த்திடும் . எல்லாம் சிவன் செயல் என்பதை நிச்சயித்து , புகலியில் அவதரித்த பூசுரனான திருஞான சம்பந்தன் , அந்தமில் பொருளாந்தன்மையை உட்கொண்டு , சிவபெருமானின் புகழையே பொருளாகக் கொண்டு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பக்தியில் மேம்பட்டு எல்லாம் கைகூடப்பெறுவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
1.133   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்
Tune - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
2.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறையானை, மாசு இலாப் புன்சடை
Tune - இந்தளம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரு ஆர் கச்சித் திரு
Tune - கொல்லி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
Tune - பழம்பஞ்சுரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
Tune - காந்தாரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நகரம் மூன்றும் எரியுண
Tune - திருநேரிசை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதுவித்தாய், முன் அற உரை;
Tune - திருவிருத்தம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்டு செய்த பழவினையின் பயன்
Tune - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
Tune - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த
Tune - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   உரித்தவன் காண், உரக் களிற்றை
Tune - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
7.061   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஆலம் தான் உகந்து அமுது
Tune - தக்கேசி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
11.029   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி   திருஏகம்பமுடையார் திருவந்தாதி
Tune -   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000