சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து
எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர்
விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே.
|
1
|
சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு எண்ணுதற்கரிய பல கணங்களும் போற்ற நடனம் செய்வார் . அத்தகைய சிவபெருமான் தேவர்களும் விரும்பும் பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் , உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர் . | |
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே!
|
2
|
நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பெருமானே ! இடுப்பில் விளங்கும் ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர் . அலைகளையுடைய கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு ஆடுகின்றீர் . | |
அடையலர் தொல்-நகர் மூன்று எரித்து, அன்ன-
நடை மடமங்கை ஒர்பாகம் நயந்து,
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண்பிறைச் சங்கரனீரே!
|
3
|
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று நகரங்களையும் எரித்தீர் . அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர் . எருதின்மீது விருப்பத்துடன் ஏறுகின்றீர் . | |
வளம் கிளர் கங்கை மடவரலோடு
களம் பட ஆடுதிர், காடு அரங்கு ஆக;
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர் சடை எம்பெருமானே!
|
4
|
குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய எம் பெருமானே ! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர் . | |
சுரிகுழல் நல்ல துடியிடையோடு
பொரி புல்கு காட்டு இடை ஆடுதிர், பொங்க;
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தைபிரானே!
|
5
|
விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பு , மழு , வாள் முதலிய படைகளை ஏந்தியுள்ள எம் தந்தையாகிய பெருமானே ! நீர் அழகிய சுரிந்த கூந்தலையும் , உடுக்கை போன்ற இடையினையுமுடைய உமாதேவியோடு , வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரிகின்ற சுடுகாட்டில் , உலகுமீள உளதாக , ஆடுகின்றீர் . | |
| Go to top |
காவி அம் கண் மடவாளொடும் காட்டு இடைத்
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே!
|
6
|
தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய குளிர்ச்சிமிக்க திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்பும் பெருமானே ! குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ அகல் ஏந்தி நின்று ஆடுகின்றீர் . | |