சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.015   திருநாவுக்கரசர்   தேவாரம்

பாவநாசத் திருப்பதிகம் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி

சேத்திரக்கோவை
- Hide Meaning   https://sivaya.org/audio/4.015 - பற்று அற்றார் சேர்.mp3  https://sivaya.org/audio/4.015 Patru Atrraar.mp3  https://www.youtube.com/watch?v=eUlIEsCnKo4   Add audio link Add Audio

பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை,
சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை,
வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே.

1
உலகப் பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன் , பாசூரில் உறையும் பவளம் , சிற்றம்பலத்தில் உள்ள கனி , தீண்டுதலுக்கு அரிய திருஉருவம் , வெற்றியூரில் விரிந்த ஒளி , தூயவர்கள் தலைவன் , கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தினேன் .

ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை,
கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.

2
ஆனைக்காவில் உள்ள தெய்வம் , ஆரூரில் உறையும் தலைவன் , கானப் பேரூரில் உள்ள கரும்பின் கட்டி , கானூரில் முளைத்த கரும்பு , வானத்தினின்றும் நீங்காதவராகிய தேவர் வந்து வழிபடும் திருவாய்மூரில் உறையும் வலம்புரிச் சங்குபோல்வான் . பெருமைமிக்க கயிலைமலையில் உறையும் இளைய களிறு , சந்திரனும் , சூரியனும் ஆகியவன் என்னும் பெருமானை அடியேன் மறக்க மாட்டேன் .

மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை,
அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை,
விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை,
நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.

3
பிறையைக் குறுங்கண்ணியாக உடைய சூரியன் , உலகமயக்கத்தைப் போக்கும் மருந்து , திருவதிகையாகிய பழைய ஊரில் உறையும் அரசு , திருவையாற்றில் விரும்பி உறையும் தலைவன் , வேதவிதியாக உள்ளவன் , எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருள் , தேவர்கள் விரும்பித்தேடும் ஞானஒளி , பெருஞ்செல்வம் , ஞானக் கொழுந்து , ஆகிய பெருமானை விருப்புற்று நினைத்த அளவில் அடியேனுடைய உள்ளம் மகிழ்ச்சியில் நிறைவுற்றது .

புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை,
உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை,
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை,
அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே.

4
புறம்பயத்தில் உறையும் எங்கள் முத்து , புகலூரில் விளங்கும் பொன் , உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் சூரியன் , அருவிகள் ஒலிக்கும் கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு , அறச்செயல்கள் யாண்டும் செய்யப்படுகின்ற அதிகை வீரட்டத்தில் உள்ள ஆண் சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன் .

கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை,
ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை,
பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை,
சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.

5
கோலக்காவில் உள்ள நல்ல நிறமுடைய மாணிக்கம் , குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான் , ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன் , தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர் , பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம் , பராய்த்துறையில் உள்ள பசிய பொன் , சூலம் ஏந்தியவன் , ஒப்பற்றவன் ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பி வணங்கினேன் .
Go to top

மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை,
கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை,
பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய
திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.

6
மருகலில் தங்கும் மாணிக்கம் , வலஞ்சுழியில் உள்ள தமிழ்ப்பாமாலை , கருகாவூரில் உள்ள கற்பகம் , காண்பதற்கு எளிதில் இயலாத கதிரவன் ஒளி , பெருவேளூரில் உள்ள பிறவாயாக்கைப் பெரியோன் , விரும்பித் தொழுபவர்கள் பின் பிரிந்து செல்ல மனம் கொள்ளாதவகையில் உள்ள திருவாஞ்சியத்தில் உறையும் எம் செல்வன் ஆகிய பெருமானை அடியேன் மனத்தில் நிலையாக இருத்தினேன் .

எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை,
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை,
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,
அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.

7
அழகுமிக்க அரச சிங்கம் , இராமேச்சுரத்தில் உறையும் அழகிய காளை , குழல்வாய் மொழியம்மையைத் தன் மலை போன்ற மார்பில் கொண்ட குற்றாலத்தில் உறையும் எங்கள் கூத்தன் . நிழல் மிகுந்த சோலைகளையுடைய நெடுங்களத்தில் உறையும் நித்தியகலியாணன் , தீ நிறத்தலைவன் ஆகிய பெருமானை அடியேன் அன்பினால் அடியேனோடு இணைத்து வைத்துக்கொண்டேன் .

மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை,
ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை,
சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை,
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.

8
மாலையில் தோன்றும் ஒளி வளரும் சந்திரன் , மறைக்காட்டுள் உறையும் தலைவன் , ஆலையில் பிழியப்படும் கரும்பின் இனிய சாறு , அண்ணாமலையிலுள்ள எம் தலைவன் , சோலைகளை உடைய துருத்திநகர்க் கோயிலில் விரும்பி உறையும் சூரியனைப் போல ஒளிவீசும் அசைவற நின்ற பேராற்றலன் , மேலே உள்ள தேவர்கள் தலைவன் ஆகிய பெருமானை அடியேன் விருப்பத்தோடு விழுங்கி விட்டேன் .

சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை,
ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை,
நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.

9
சோற்றுத்துறையில் உறையும் ஞானஒளி , துருத்தியில் விரும்பி உறையும் தூயமணி , ஆற்றின்வளம் மிக்க திருப்பழனத் தலைவன் . ஆலவாயிலுள்ள சிந்தாமணி , திருநீற்றால் விளங்கும் திண்ணிய தோள்களை உடைய , நெய்த்தானத்தில் உறையும் எம் நிலவொளி , பிறவிக்கடலை அழிக்கும் ஆற்றல் மிக்க காளை ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பித் தொழுதேன் .

புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை,
வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை,
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை,
வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.

10
புத்தூரில் உறையும் தூயோன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை , மிழலையில் விதையாகி முளைத்தவன் , வேள்விக்குடியில் உறையும் எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் விரும்பி உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக இருத்தினேன் .
Go to top

முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை,
அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை,
சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி,
எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே.

11
ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன் , மூத்த வெண்ணிறக் காளையை இவர்ந்தவன் . மாலைநேரச் செவ்வானின் நிறத்தினன் . இராவணன் ஆற்றலை அழித்தவன் ஆகிய பெருமானை உள்ளத்தில் தோன்றும் அன்பு என்னும் தீர்த்தத்தால் அபிடேகித்து , இனிய சொற்களாலாகிய பாமாலைகளை அவன் திருவடிகளில் சேர்ப்பித்து எந்தையே , இறைவனே , என் தலைவனே என்று பலகாலும் அவனை அழைத்து மகிழ்பவருடைய தீவினைகள் அழிந்துவிடும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பாவநாசத் திருப்பதிகம்
4.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   பற்று அற்றார் சேர் பழம்
Tune - பழம்பஞ்சுரம்   (பாவநாசத் திருப்பதிகம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000