செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.
|
1
|
புகலூரிலுள்ள முறுக்கேறிய சடையினராகிய பெருமானார் நிறத்தில் செய்யராய் , வெண்ணீறு அணிந்தவராய் , கரிய மான் குட்டி துள்ளும் கையினராய் , ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய் , உண்மையான நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு மெய்யராய் , அத்தகுதியில்லாதவர்க்குப் பொய்யராய் உள்ளார் . | |
மேக நல் ஊர்தியர், மின் போல் மிளிர்சடைப்
பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர்,
நாக வளையினர், நாக உடையினர்
போகர்-புகலூர்ப் புரிசடையாரே.
|
2
|
புகலூர்ப் புரிசடையார் மேக நிறத்தினனான திருமாலாகிய காளையைப் பெரிய வாகனமாக உடையவர் . மின்னலைப் போல ஒளிவீசும் சடையோடு , பாம்பினைக் கங்கணமாக அணிந்து , யானைத்தோலை மேலுடையாகப் போர்த்திப் பிறை நுதலாளாகிய பார்வதி பாகராய்ப் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தை அருளுபவராவார் . | |
பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி,
கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து,
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
|
3
|
புகலூர்ப் புரி சடையார் பெரிய தாழ்ந்த சடைமுடி மேலே பிறையைச் சூடிக் கரியதாய் நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு தாமும் கலந்து , திருந்தாத மனமுடையவர் பக்கல்தாம் என்றும் பொருந்தாராக உள்ளார் . | |
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர்
நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும்
புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே.
|
4
|
புகலூர்ப் புரி சடையார் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினராய் , பாம்பினை உடையவராய் , ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவராய் , நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர் . | |
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
|
5
|
புகலூர்ப் புரிசடையார் ஆரவாரித்துக் கொண்டு உயிர்களைக் கொல்லும் கூற்றுவனுடைய உடலை அழித்தார் . பிறைபோன்ற நெற்றியை உடைய பார்வதி அஞ்சுமாறு கூரிய தந்தங்களை உடைய கொலைத் தொழில் புரியும் யானையைக்கொன்று அதனுடைய உதிரப் பசுமை கெடாத தோலினை உடம்பில் போர்த்தி உள்ளார் . | |
| Go to top |
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக்
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்,
சேம நெறியினர்; சீரை உடையவர்
பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.
|
6
|
வலிமை பொருந்திய சுறாக்கொடியை உடைய மன்மதன் விடுத்த அம்புகளின் வலிமையைக் கோபித்த மூன்றாம் கண்ணையுடையவர் . அடியவர்களுக்குப் பாதுகாவலை உடைய வழியை அருளுபவர் . மரவுரியை உடுப்பவர் . அவர் முருகனார் தொடுத்தளித்த பூக்களை எப்போதும் அணிந்தவராகிய , புகலூரில் உகந்தருளியிருக்கும் முறுக்கேறிய சடையினை உடையவர் . | |
உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;
சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி;
பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண்
புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
|
7
|
புகலூர்ப் புரிசடையார் கூற்றுவன் உருளுமாறு அவனை ஒரு திருவடியால் உதைத்தவர் . சிறப்பாக விளங்கிய தக்கன் செய்த பெரிய வேள்வியைச் சிதைத்தவர் . அவ்வேள்வியில் பங்கு கொண்ட தம் தவறு கருதி நடுங்கிய தேவர்களின் தலைகளையும் கைகளையும் போக்கிச் சூரியனுடைய கண்ணை அவித்தவர் . | |
கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும்,
தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண;
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை
புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
|
8
|
புகலூர்ப் புரிசடையார் இறந்தவருடைய தலை மாலையை அணிந்தவர் . காவல் பொருந்திய மும்மதில்களையும் சிவந்த நெருப்பு உண்ணுமாறு அம்புகளைத் தேர்ந்து எடுத்தவர் . விரிந்து பரந்த சடையின்மேல் நீர்மிக்க கங்கையை விரும்பி ஏற்றவர் . | |
ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,
நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச;
மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும்
பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.
|
9
|
புகலூர்ப் புரிசடையார் செறிந்த தீப்பிழம்பாய்ப் பிரமனும் திருமாலும் கைகளால் தொழுமாறு நீண்டவர் . தம்முடைய நீண்டகாலத் தடுமாற்ற வாழ்வை நினைந்து அஞ்சுமாறு வாழ்ந்து இறந்தவர்களின் எலும்பையும் கொன்றைமலர் மாலையையும் அணிந்தவர் . | |
கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும்,
அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
|
10
|
புகலூர்ப் புரிசடையார் இரத்தினம் போன்ற செந்நிறமான கழுத்துக் கறுத்து நீலகண்டராயினார் . கால் விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார் . ஐம்புல நுகர்ச்சியையும் துறந்தவர் . பார்வதியைப் பாகமாகக் கொண்டவர் . | |
| Go to top |