சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.043   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) - திருநேரிசை:கொல்லி அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc   Add audio link Add Audio

மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

1
காஞ்சிமா நகரிலே தலைவராய்ப் பாடல் ஆடல் விளங்கும் மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான் வேதங்களைப் பாடிக்கொண்டு பிச்சை எடுப்பதற்காக வீடுதோறும் திரிந்து வாழ்பவராய் , பிறையை அணிந்த சடையிலே கங்கையைச் சூடியவராய்க் கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் உள்ளார் .

மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.

2
முருகனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான் மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலைத் தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய் , எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய் , ஆன்மாக்களுக்குத் தலைவராய் , பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார் .

விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.

3
எண்ணும் எழுத்துமாய் விளங்கும் காஞ்சி மேற்றளியனார் வானத்திலுள்ள தேவர்கள் விருப்பத்துடன் வந்து வணங்கி வாழ்த்தப் பண் இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைக் கேட்பவராய்க் கண்மணிபோல அடியவர்களுக்கு ஞானஒளி வழங்குபவராய் உள்ளார் .

சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்
வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

4
மன்மதனை வெகுண்ட நெற்றிக் கண்ணராய் , இரவில் யாமத்தில் கூத்து நிகழ்த்தும் எந்தையாராய் , பிறையைப் பாம்பினோடும் கங்கையோடும் சூடும் அழகராய்த் தேவர்கள் வலப்புறமாகச் சுற்றி வந்து துதிக்குமாறு காஞ்சி மேற்றளியனார் அமர்ந்துள்ளார் .

ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.

5
நீலகண்டராய் , எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய் , அருச்சுனனோடு எதிர்த்துப் போரிட்ட வேடராய் , உலகங்களிலும் , ஊழிகளிலும் , உடம்பினுள்ளும் , உயிரினுள்ளும் உடனாய்க் கலந்து இருப்பவராய்த் தானம் செய்பவராய்ச் செல்வ வடிவினராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார் .
Go to top

மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.

6
தமக்குப் பொருந்திய மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய் , திருமாலாகவும் , இந்திரனாகவும் , பிரமனாகவும் , நிலமாகவும் , நாடாகவும் எண் திசைகளாகவும் புனித நீர்களாகவும் இயங்குதிணைகளுக்கு உரிய உடல்களாகவும் , அவ்வுடல்களின் உள் இருப்பவராகவும் காஞ்சிமேற்றளியனார் கரந்து எங்கும் பரந்து உள்ளார் .

மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.

7
உலகை விழுங்கிய திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவராய் , இன்னிசைகளைப் பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய் , முக் கண்ணராய் , அடியார்களுடைய எண்ணத்திலே தம்மையே தியானிக்குமாறு வைத்தவராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார் .

செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி
கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.

8
பார்வதிபாகராய் , முருகனை மகனாகக் கொண் டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சிநகரிலே , சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார் .

வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்
கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

9
தனக்கு இணையில்லாதபடி ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார் .

தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.

10
காஞ்சியில் இலங்கும் மேற்றளியனார் தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு , என்றும் நிலையாயிருக்கும் அவர் தம் விரலால் அழுத்த , அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப் பின் அவன் வாயினால் கரும்பைப் போன்ற இனிய பாடல்கள் பாட , அவற்றைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு இன்னருள் செய்தவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
4.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அது பாடிப் பிச்சைக்கு
Tune - திருநேரிசை:கொல்லி   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
7.021   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
Tune - நட்டராகம்   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000