கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
1
|
பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான் . எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது . | |
கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திட(ல்)லும், அரிவை தான் அஞ்ச, ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்;
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
2
|
மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில் , பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான் . பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது . | |
கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
மறித்தலும், மங்கை அஞ்ச, வானவர் இறைவன் நக்கு,
நெறித்து ஒரு விரலால் ஊன்ற, நெடுவரை போல வீழ்ந்தான்;
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
3
|
கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான் . மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது . | |
கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
எடுத்தலும், மங்கை அஞ்ச, இறையவன் இறையே நக்கு,
நொடிப்பு அளவு(வு) விரலால் ஊன்ற, நோவதும் அலறியிட்டான்;
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
4
|
கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான் . கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே . | |
கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை,
நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்;
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
5
|
வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான் . அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே . | |
| Go to top |
களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
6
|
செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நெளித்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச , அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த , இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான் . விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே . | |
கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
7
|
இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திரு விரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான் . இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றி யிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே . | |
கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச்
செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்;
வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
8
|
கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான் . விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே . | |
கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
9
|
உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , ஈசன் இராவணன் உடல் நெரியுமாறு தன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான் . அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே . | |
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
|
10
|
சிவபெருமானுடய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான் . சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும் . | |
| Go to top |