சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.061   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஇராமேச்சுரம் - திருநேரிசை அருள்தரு பர்வதவர்த்தனி உடனுறை அருள்மிகு இராமநாதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Ry6uuPOzyEY   Add audio link Add Audio

பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே.

1
நீக்க வேண்டிய பாசத்தை நீக்கும் ஆற்றல் இல்லாத அரக்கர்களை அழித்து மேம்பட்ட சிவஞானத்தால் இராமனாய் அவதரித்த திருமால் அமைத்த கோயிலிலே ஒளிமிக்க சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திரு இராமேச்சுரத்தை வாசனை மிக்க பூக்களை அர்ப்பணித்து நாள்தோறும் நிலையாகப்பற்றுமிகுந்த அன்போடு எல்லீரும் விருப்புற்று நினையுங்கள் .

முற்றின, நாள்கள் என்று முடிப்பதே காரணம்(ம்) ஆய்
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச்
செற்ற மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைப்
பற்றி, நீ பரவு,-நெஞ்சே!-படர்சடை ஈசன்பாலே!

2
நெஞ்சே ! அரக்கர்கள் உயிர்வாழ்வதற்கு வகுத்த நாள்கள் முடிந்து விட்டதனால் அவர்களை அழிப்பதனையே காரணமாகக் கொண்டு ஏற்பட்ட வலியபோரினால் மெய்யுணர்வு இல்லாத அரக்கர்களை அழித்த இராமன் ஆகிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை உகந்தருளியிருக்கும் , பரவிய சடையை உடைய சிவபெருமானிடத்துப் பற்றினைக் கொண்டு நீ முன் நின்று போற்றுவாயாக .

கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி,
திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி,
உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே.

3
கடலிடத்தை மலைகளால் அடைத்துத் திருமால் தம் செயலை முடித்துப் பின் கடலை அடுத்த மேட்டில் செய்த இராமேச்சுரத்தை , இவ்வுடம்பினின்றும் நீங்காத ஐம்பொறிகளால் தம் விருப்பப்படி செயற்படுத்தப்பட்டு தூய்மையின்றி , நாவிடை வைத்துப் போற்றுதலைச் செய்து தடுமாறுகின்றேன் . ( நாவில் தொடல் இடை - வாக்கு .)

குன்று போல்-தோள் உடைய குணம் இலா அரக்கர் தம்மைக்
கொன்று போர் ஆழி அம் மால் வேட்கையால் செய்த கோயில்-
நன்று போல் நெஞ்சமே! நீ நன்மையை அறிதியாயில்,
சென்று நீ தொழுது உய்கண்டாய்!-திரு இராமேச்சுர(ம்)மே.

4
நெஞ்சமே ! நீ நன்மையை அறிவாயானால் மலைகளைப் போன்ற தோள்களையுடைய நற்பண்பு இல்லாத அரக்கர்களைக் கொன்று போரிடும் சக்கராயுதத்தை உடைய திருமால் விருப்பத்தோடு அமைத்த இராமேச்சுரக் கோயிலை , சென்று தொழுது கடைத்தேறுவாயாக . அறியாயாயின் நின் நிலை நன்றல்ல . ( நன்று போல் ).

வீரம் மிக்கு எயிறு காட்டி விண் உற நீண்டு அரக்கன்
கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடல் படுத்துத்
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக்
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே.

5
கடலைச் சேது கட்டித்தடுத்து , வீரம் மேம்பட்டுக் கோரைப் பற்களை வெளியே காட்டிக் கொண்டு வானளாவ உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குச் சென்று அங்கே கொன்று , மீண்டு பேராற்றலுடைய திருமால் கோயில் செய்து வழிபட்டிருந்த இராமேச்சுரத்தை , அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைவார் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர் .
Go to top

ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப்
போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்
சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே!

6
மட நெஞ்சமே ! ` நம்மை விட வலிமை மிக்கவர் யாவர் ` என்று செருக்குற்ற அவ்வரக்கர்கள் ஒன்று கூடிப் போரிலே வெற்றியைக் கருதி வலிமைமிக்குப் போரிட்டாராக , அவர்களை அழித்து அவர்களுடைய தேர்ப்படையின் வலிமையையும் போக்கிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை அணுகிச் செஞ்சடைப் பெருமான் பால் அடைவாயாக .

வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து, அவர்கள் உயிர் தனை உண்டு, மால் தான்
தேக்கு நீர் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே.

7
இனிமையாகப் பேசுதற்கு அமைந்த வாயாலே இனிய சொற்களைப் பேசி வாழாத அரக்கர்களை அழிக்கத்தக்க படைகளால் தாக்கி அவர்கள் உயிரை உண்டு திருமால் கடல் நீரைத் தேக்கிய அணையின் கரையில் அமைத்த கோயிலாகிய இராமேச்சுரத்தை அகநோக்கிலும் புறநோக்கிலும் கண்டு தரிசித்துத் தலையால் வணங்குபவருடைய நோய்களும் வினைகளும் அழிந்து விடும் .

பலவும் நாள் தீமை செய்து பார் தன் மேல் குழுமி வந்து
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரைக் கொன்று வீழ்த்த,
சிலையினான் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம்; தவம் அது ஆமே.

8
பலகாலமாக இவ்வுலகில் கூட்டமாகத் தோன்றித் தீமைகளையே செய்து கொல்லும் வில்லை ஏந்திய கொடியவர்களான அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய வில்லை ஏந்திய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தலையினால் வணங்கும் அடியவர்கள் பின் உடம்பாலும் முழுமையாக விழுந்து வணங்குவார்கள் . அச் செயல் தவப் பயனால் நிகழ்வதாகும் .

கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு,
தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே.

9
நெஞ்சே ! பல ஆண்டுகள் சிறந்த தவத்தைச் செய்து , ஒழுக்கக் கேடு உள்ள அரக்கர்களை எல்லாம் அவர்கள் அழியுமாறு சக்கரம் முதலிய படைகளால் அழித்துப் பின்தக்க இடத்தைத் தேடித் திருமால் அமைத்த இராமேச்சுரத்தை நீ விரும்பிச் சென்று வாழ்தி . அதுவே உனக்கு நன்னெறியாம் .

வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார்
புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி,
செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே.

10
அகத்தில் உள்ள வன்மையைப் புறத்தில் காட்டும் கண்களை உடைய கொடிய அரக்கர்கள் வாழும் செயலை அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய , அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்கும் நற்பேறு உடையவர்கள் சிவபெருமான் பக்கலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர் .
Go to top

வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர் கோனை
விரைய முற்று அற ஒடுக்கி, மீண்டு மால் செய்த கோயில்-
திரைகள் முத்தால் வணங்கும்-திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார், உள்குவார், அன்பினாலே.

11
மலைகளை ஒத்து உயர்ந்த , மணிகள் வைத்து இழைக்கப்பட்ட கிரீடங்களை உடைய அரக்கர் தலைவனான இராவணனை விரைவாக அடியோடு அழித்துத் தமிழகம் திரும்பித் திருமால் செய்த கோயிலாய் அலைகள் முத்துக்களைச் சமர்ப்பித்து வணங்கும் திரு இராமேச்சுரத்தை முன்னைய இப்பத்துப் பாடல்களாலும் போற்றுபவர்கள் அன்பினாலே தியானித்து நற்பேறு பெறுபவராவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஇராமேச்சுரம்
3.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலை, வளர் தண்மதியோடு அயலே
Tune - காந்தாரபஞ்சமம்   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
3.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரிதரு மா மணி நாகம்
Tune - சாதாரி   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
4.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,
Tune - திருநேரிசை   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000