விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
|
1
|
இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர் , தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர் . பார்வதி பாகர் . ஆண் பெண் அலி ஆனவர் . நல்ல அழகுடைய திருமாலும் , பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர் . அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர் . | |
பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்;
துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்;
மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்;
என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
|
2
|
இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து , இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி , செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து , மழுப்படை தாங்கிய கையராய் , பார்வதி பாகராய் , அடியேனையும் அடியவனாக உடையவர் . | |
மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்;
பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்;
செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்;
எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
|
3
|
ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய் , தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும்சமணத் தோற்றத்தை நீக்கி , அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய் , செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய் , அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன் . | |
விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்;
கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
|
4
|
இன்னம்பர் ஈசன் , நஞ்சு பொருந்திய கழுத்தினராய் , தக்கன் வேள்வியை அழித்தவராய் , பெரிய காளையைச் செலுத்துபவராய் , கூற்றுவனைக் கோபித்தவராய் , படம் எடுக்கும் பாம்பினை உடையவராய் , பரவிய புலித்தோலை உடுத்தவராய் , அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர் . | |
அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்;
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்;
வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்;
எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே.
|
5
|
இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய , ஒளிவீசும் சடையை உடையவராய் , மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் , மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய் , எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய் , திருநீற்றை அணிபவராய் , அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார் . | |
| Go to top |
கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்;
துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்;
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
|
6
|
இன்னம்பர் ஈசன் , அம்பு பொருந்திய வில்லினராய் , யானைத்தோற் போர்வையினராய் , பார்வதி பாகராய் , தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய் , உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார் . | |
பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல் அணி சடையர் போலும்;
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்;
உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
|
7
|
இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய் , கங்கையை அணிந்த சடையினராய் , பன்றியின் கொம்பு , இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய் , உருத்திர மூர்த்தியாய் , நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார் . | |
காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்;
வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்;
கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை
ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
|
8
|
இன்னம்பர் ஈசன் , சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் , கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய் , அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய் , பிறை சூடியவராய் , கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள் , தும்பை , வன்னி , கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார் . | |
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்;
பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்;
ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
|
9
|
இன்னம்பர் ஈசன் , கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோள்களை உடையவராய் , திருநீறு அணிந்த வடிவினராய் , நினைப்பதற்கும் எட்டாதவராய் , பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் ஏந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய் , காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார் . | |
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.
|
10
|
இன்னம்பர் ஈசன் , ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை , மலையின் கீழ் நசுக்கியவர் . அருச்சுனனோடு போரிட்டு , அவனுக்குத் தெய்வப் படைகளைக் கொடுத்து அருளியவர் . தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர் . தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார் . | |
| Go to top |