சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.090   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவேதிகுடி - திருவிருத்தம் அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=O6ovrf3yUtA   Add audio link Add Audio

கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது;
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே.

1
கைகளில் விடத்தைக் கக்கும் பாம்பினையும் தீயைப் போல வெம்மையைச் செய்யும் சூலப்படையையும் ஏந்தியவனும் , கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்டவனும் , விரிந்த சடையினை உடைய தலைவனுமாய் , வயல்களிலே நீலப்பூக்கள் மணம் கமழும் திருவேதிகுடியில் உகந்தருளியிருக்கும் ஐயனுமான , நுகர்ந்தும் நிறைவு தாராத ஆரா அமுதை அடைந்து அதில் முழுகுவோம் நாம் .

கைத்தலை மான் மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்;
பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்;
செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதி குடி
அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.

2
கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப் படையையும் ஏந்தி , மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும் , வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம் .

முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்;
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும்
செம் பொனை; நல் மலர் மேலவன் சேர் திரு வேதி குடி
அன்பனை; நம்மை உடையனை;-நாம் அடைந்து ஆடுதுமே.

3
முன்னும் பின்னும் தானே உலக காரணனாய் , மனனசீலனாய் , நம் பழைய வினைகளைப் போக்குபவனாய் , அன்பு நிலையில் இல்லாத அசுரர்களின் மும்மதில்களையும் அழித்த செம்பொன் போல்பவனாய் , தாமரை மலர்மேல் உள்ள பிரமன் வழிபடுவதற்காக வந்து அடையும் திருவேதிகுடியில் விரும்பி உறைபவனாய் , நம்மை அடிமைகொள்ளும் பெருமானை நாம் அடைந்து அவன் அருளாரமுதக் கடலில் ஆடுவோம் .

பத்தர்கள், நாளும் மறவார், பிறவியை ஒன்று அறுப்பான்;
முத்தர்கள் முன்னம் பணி செய்து பார் இடம் முன் உயர்ந்தான்;
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதி குடி
அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே

4
பக்தர்களாய்த் தன்னை நாளும் மறவாத அடியார்களுக்குப் பொருந்திய பிறவிப் பிணியை அறுப்பவனாய் , பாசநீக்கம் உற்றவர்கள் இம்மண்ணுலகில் சிவப்பணி செய்து உயரச் செய்தவனாய் , கொத்தாகப் பூத்த கொன்றையின் மணம் பரவும் திருவேதி குடித் தலைவனாய் உள்ள ஆரா அமுதக் கடலை நாம் அடைந்து ஆடுவோம் .

ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார்? அவர் கை
மான் அணைந்து ஆடும்; மதியும் புனலும் சடை முடியன்;
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதி குடி,
ஆன் அண் ஐந்து ஆடும், மழுவனை-நாம் அடைந்து ஆடுதுமே.

5
தேனிலே பொருந்தி உண்டு பறக்கும் வண்டுகள் மிகுதியாகக் காணப்படும் திருவேதிகுடியில் பஞ்சகவ்வியத்தில் அபிடேகம் கொள்ளும் , மழு ஏந்திய பெருமான் , பிறையும் கங்கையும் சடைமுடியில் சூடி , கையில் மானை வைத்துக் கொண்டு கூத்து நிகழ்த்துபவன் விரும்பி காளையை ஏறி ஊரும் அப்பெருமானுடைய பெயர்களையோ , அடையாளங்களையோ , பண்புகளையோ ஒருவரும் முழுமையாக அறிதல் இயலாது . அவனை அடைந்து அருளாரமுதக் கடலில் ஆடுவோம் நாம் .
Go to top

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய,
பண்ணின் இசை மொழி பாடிய வானவர் தாம் பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதி குடி
நண்ண அரிய அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.

6
எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடும் தேவர்கள் பணிந்து தெளிந்து கொள்ளுமாறு , அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திரு வேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவ பெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம் .

ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்;
ஆர்ந்த மடமொழி மங்கை ஓர் பாகம் மகிழ்ந்து உடையான்;
சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதி குடிச்
சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.

7
உகந்து காளையை ஏறி ஊருஞ் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம் . செவிக்கு இனியவான மடப்பம் பொருந்திய மொழிகளை உடைய பார்வதியை மகிழ்ந்து பாகமாக உடையவனாய் , சடையிற் கங்கையைச் சூடிய செல்வப் பிரானாய் வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடியைச் சார்ந்திருக்கும் பெருமானாகிய குளிர்ந்த அமுதை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .

எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள
திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்;
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதி குடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே.

8
கொடிய மழுவை ஏந்தியவனாய் , பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை பெற விரும்பித் திரிபவனாய் , தேயங்களும் நாடுகளும் எல்லாம் உடையவனாய் , விரிந்த சோலைகளும் சேறு விளங்கும் வயல்களும் அழகு செய்யும் திருவேதிகுடியில் உறையும் பெருமானாகிய அரிய அமுதை அன்பர்களோடு அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் .

மை அணி கண்டன்; மறை விரி நாவன்; மதித்து உகந்த
மெய் அணி நீற்றன்; விழுமிய வெண்மழுவாள் படையன்;
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.

9
நீலகண்டனாய் , வேதம் ஓதும் நாவினனாய் , பெருமையாகக் கருதி விரும்பிய திருநீற்றை மெய் முழுதும் அணிந்தவனாய் , மேம்பட்ட வெள்ளிய மழுப்படையினனாய் , சிறந்த தாமரைகள் மணம் வீசும் திருவேதிகுடித் தலைவனாய் உள்ள சிவ பெருமானாகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் .

வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய
திருத்தனை, தேவர் பிரான் திரு வேதி குடி உடைய
அருத்தனை, ஆரா அமுதினை,-நாம் அடைந்து ஆடுதுமே.

10
வாளை ஏந்திய அரக்கனுடைய தோள்களோடு தலைகள் பத்தினையும் நெரித்துத் துன்புறுத்தியவனாய் , பிறகு அவற்றைப் பொருத்தியவனாய் , தவறாத அருளுடையவனாய் , பூதப் படையை உடைய புனிதனாய் , தேவர்கள் தலைவனாய் , திருவேதி குடியில் உறையும் மெய்ப்பொருளான ஆரா அமுதினை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவேதிகுடி
3.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு, வரி ஆடு அரவொடு,
Tune - சாதாரி   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
4.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   கையது, கால் எரி நாகம்,
Tune - திருவிருத்தம்   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000