சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.078
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீறு, வரி ஆடு அரவொடு, பண் - சாதாரி (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0 |
4.090
திருநாவுக்கரசர்
தேவாரம்
கையது, கால் எரி நாகம், பண் - திருவிருத்தம் (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=O6ovrf3yUtA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருத்தலம் திருவேதிகுடி ; (திருத்தலம் அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ஓத வேண்டிய பதிகம்
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம், ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம் தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில் வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே. | [1] |
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத் துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர் வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே. | [2] |
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல் வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர் சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல் வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே. | [3] |
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்- தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்- பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே. | [4] |
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத் தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்- கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம், மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே. | [5] |
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே. | [6] |
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம் கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக, மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே. | [7] |
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே. | [8] |
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய், தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம், மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே. | [9] |
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால், வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே. | [10] |
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்- பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர் அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.090  
கையது, கால் எரி நாகம்,
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருவேதிகுடி ; (திருத்தலம் அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது; வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன், செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே. | [1] |
கைத்தலை மான் மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்; பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்; செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதி குடி அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே. | [2] |
முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்; அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் செம் பொனை; நல் மலர் மேலவன் சேர் திரு வேதி குடி அன்பனை; நம்மை உடையனை;-நாம் அடைந்து ஆடுதுமே. | [3] |
பத்தர்கள், நாளும் மறவார், பிறவியை ஒன்று அறுப்பான்; முத்தர்கள் முன்னம் பணி செய்து பார் இடம் முன் உயர்ந்தான்; கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதி குடி அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே | [4] |
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார்? அவர் கை மான் அணைந்து ஆடும்; மதியும் புனலும் சடை முடியன்; தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதி குடி, ஆன் அண் ஐந்து ஆடும், மழுவனை-நாம் அடைந்து ஆடுதுமே. | [5] |
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய, பண்ணின் இசை மொழி பாடிய வானவர் தாம் பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதி குடி நண்ண அரிய அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே. | [6] |
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்; ஆர்ந்த மடமொழி மங்கை ஓர் பாகம் மகிழ்ந்து உடையான்; சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதி குடிச் சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே. | [7] |
எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்; விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதி குடி அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே. | [8] |
மை அணி கண்டன்; மறை விரி நாவன்; மதித்து உகந்த மெய் அணி நீற்றன்; விழுமிய வெண்மழுவாள் படையன்; செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதி குடி ஐயனை ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே. | [9] |
வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய திருத்தனை, தேவர் பிரான் திரு வேதி குடி உடைய அருத்தனை, ஆரா அமுதினை,-நாம் அடைந்து ஆடுதுமே. | [10] |