சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை தீரசங்கராபரணம் கன்னடம் நாட்டைக்குறிஞ்சிி ராகத்தில் திருமுறை அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=-uVMU2Umgtc   Add audio link Add Audio

பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!

1
அடங்காத ஏற்றினை அடக்கி விடையாக் கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து சுழலும் , அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும் ; என்றும் கேடு இல்லை ; காண்பீராக .

பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;
சுற்றமா மிகு தொல் புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.

2
மனைகளிலிடும் பலிக்கெனப் பெற்றம் ஏறும் பெருமான் , தனக்குச் சுற்றமாமெனும் உமையம்மையோடும் வருவார் . துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார் . நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர் .

பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,
அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ
நல்லஆயின நம்மை அடையுமே.

3
பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் விரைந்து சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை அவர்தம் உள்ளங்களோடு கவர்வாராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ , நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் .

பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.

4
பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் ஓடிப் போய்விட்டனராதலால் செய்வது இனி என்னை ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ நம் மேலை ( பழைய ) வினைகள் ஓடிப்போகும் . (` ஓடிப் போயினர் செய்வதொன்றென் கொலோ ` எனப் பேசநின்ற பெருமானது திருவண்ணாமலை - என இசையெச்சம் கொண்டு முடிக்க )

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

5
தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும் .
Go to top

கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,
அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.

6
கரும்பினிடைக் கட்டி ஒக்குமாறு துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும் .

கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,
ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

7
சேர்த்துக் கட்டிய கொண்டையரும் , வேடம் முன் கொண்டவரும் தாளத்திற்கேற்ப நட்டங்கள் ஆடுபவரும் ஆணிப் பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் வருதற்குப் பேணி நின்ற பெரு வினைகள் போகும் .

கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும், நம் மேலைவினைகளே.

8
திருநீலகண்டரும் , கூற்றுவன் உயிரைப் பண்டு கால் கொண்டு பாய்ந்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நம் மேலை ( பழைய ) வினைகள் நம்மைவிட்டு நீங்கும் .

முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
கந்தமாமலர் சூடும் கருத்தனே.

9
முந்துறச்சென்று , மாலைச்செவ்வானன்ன மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் வணங்குவீர்களாக ; அத்திருவண்ணாமலையைச் சிந்தித்தபடி துயிலெழுவார் வினைகளை , நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய பெருமான் தீர்ப்பான் .

மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.

10
பிரமனும் திருமாலும் காண்கிலாதவனும் , எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையும் மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கைகளாற் றொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவண்ணாமலை
1.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
Tune - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ ஆர் மலர் கொண்டு
Tune - தக்கேசி   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
Tune - திருநேரிசை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
Tune - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டி ஏறு உகந்து ஏறி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
8.107   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
Tune -   (திருவண்ணாமலை )
8.108   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
Tune - தன்னானே நானே நனே; தாநானே தானனே தனே   (திருவண்ணாமலை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000