தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர், கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.
|
1
|
இந்நாள்வரை தோன்றிய கோயில்களும் , இனித் தோன்றும் கோயில்களும் , வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும் , கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும் ; காண்பீராக . | |
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள் பந்தனை செய்து பாவிக்க நின்றவன், சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே.
|
2
|
திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத் தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்க நின்றவனும் , எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும் . | |
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார், அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,- நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே!
|
3
|
நெஞ்சமே ! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும் , ஆனை அஞ்சுமாறு உரித்தவனும் , அனல் ஆடு வானும் , திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு ; அந்நினைப்பால் வாழ்வாய் . | |
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் வேறு வேறு விரித்த சடை இடை ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர், ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.
|
4
|
மணம் வீசும் மல்லிகை , கூவிளம் , செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடு கொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற் கொண்டு உகந்த பெருமானே ! ( அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து ) | |
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர், செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர், எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?
|
5
|
வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார் , திருமீயச்சூர் இளங்கோயில் செவ் வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை ! | |
| Go to top |
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும், பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று; மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர், இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.
|
6
|
திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிக்கொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது , பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் ( கொடுக்கும் ) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம் . | |
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன், சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன், விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர், இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.
|
7
|
பூதங்களைப் படையாகக் கொண்டவனும் , கொன்றைமாலையனும் , சடையில் வெள்ளம் உடையவனும் , சாந்த வெண்ணீற்றனும் , விடையூர்தியானும் , திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செவ்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன் . | |
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும், கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர், ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.
|
8
|
சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும் , வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும் . கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர் . | |
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர், பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே; கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர், ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.
|
9
|
புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும் , வேள்வியுளான் என்றும் , பூதத்தான் என்றும் கூறுவர் ; கீதம் கிளரும் திருமீயச்சூரில் , இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர் . | |
கடுக்கண்டன் கயிலாய மலைதனை எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற, விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர், இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.
|
10
|
விடமுண்டகண்டனும் , கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன் . | |
| Go to top |