சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.018   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கடம்பந்துறை (குளித்தலை) - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=JV1NmqKXpHM   Add audio link Add Audio

முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,
கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.

1
எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும் , அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும் , கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள் . ( செவிலி கூற்று )

தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும்,
முனகு தீரத் தொழுது எழுமின்களோ!
கனகப்புன் சடையான் கடம்பந்துறை
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே.

2
நீங்கள் உள்ளக்களிப்பு மிக்கு உடையீராயினும் . நுமது இழிவு நீங்குதற்கு முதல்வனைத் தொழுமின்கள் ; கனகப் பொன்சடையான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நினையும் வல்லமை பெற்றவர் விசும்பு ஆள்வர் ஆதலால் .

ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,
கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன்,
காரிகை உடையான், கடம்பந்துறை,
சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!

3
பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே ! ஆரியமும் , தமிழும் , இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களாக .

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை-
வண்ண நல் மலரான், பல தேவரும்,
கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை
நண்ண, நம் வினை ஆயின நாசமே.

4
பண்ணின் இன்மொழி கேட்கும் விருப்புடைய பரமனும் , நான்முகனும் , தேவர்களும் , திருமாலும் , அறியப்படாதவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணினால் , நம்வினைகளாயவை நாசமாம் .

மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ!
கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!

5
உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக ; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக .
Go to top

நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப்
பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ!
கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை,
அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.

6
கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந் துறையாதலால் நங்கையை ஒருபாகம் வைத்த அந்த ஒளியுருவை அவ்விடத்துக் கேடின்றிப் பணிந்தெழுவீர்களாக .

அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து
புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்;
கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை
உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!

7
அறியாமை உடைய நெஞ்சமே ! அரிய நான் மறைகளாய் உள்ளவனும் , அன்னமயகோசம் முதலிய ஐங்கோசங்களாகப் பேசப்பட்டவனும் , தேவர்கள் வேண்ட நஞ்சுண்டவனும் , அதனாற்கறுத்த கண்டத்தினானுமாகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி நினைப்பாயாக .

பூ மென்கோதை உமை ஒருபாகனை
ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்!
காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.

8
பூவணிந்த மென்கோதை உடையவளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனை வேள்விகள் செய்தும் , உள்ளத்தால் உணர்வீர்களாக ! மன்மதனைச் சினந்த பெருமான் உறையும் கடம்பந்துறையில் அத்திருநாமம் ஏத்த நம் தீவினைகள் நாசமாம் .

பார் அணங்கி வணங்கிப் பணி செய
நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர்
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே

9
திருமாலும் பிரமனும் உலகில் விரும்பி வணங்கிப் பணிசெய்ய அறியாது தேடி இளைத்தற்குக் காரணனாக இருந்தவன் கடம்பந்துறை மேவியவனும் , ஆரணங்கை ஒருபால் உடையவனுமாகிய புலன்களைந்தும் வென்ற பெரு வீரனாகிய இறைவனே .

நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட!
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்;
காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.

10
பாலோடு கூடிய ஆனைந்தும் ஆடும் பரமனும் , அரக்கனைக் காலால் ஊன்றி உகந்த பெருமானும் ஆகிய இறைவனைக் கடம்பந்துறையிற் சென்று வழிபட்டால் , நாம் செய்த மேலைவல் வினைகள் கெடும் . ஆதலால் , துன்பங்கெடும் படியாக நூல் அறிவால் நன்றாக நினைத்து வழிபடுவீர்களாக . ( நூல் அறிவு - சிவாகம உணர்வு .)
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கடம்பந்துறை (குளித்தலை)
5.018   திருநாவுக்கரசர்   தேவாரம்   முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பந்துறை (குளித்தலை) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000