ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை; ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.
|
1
|
ஒளி விளங்குகின்ற மதி பாம்பினை ஒற்றி ஊரும் ; பாம்பும் அம்மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும் ; இவ்வாறு இவை ஒன்றையொன்று ஒற்றி ஊரும்படியாக ஒருசடையில் வைத்த சிவபெருமானுக்குரிய ஒற்றியூரைத் தொழ நம்வினைகள் ஓயும் . | |
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள் ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்- காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர் ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.
|
2
|
மலையரசன் மகளாகிய உமாதேவியார் தளர்ச்சியாகிய ஒன்று உரைக்க , பேய்க்கணங்கள் நெருங்க நள்ளிரு ளின்கண் இடுபிணக்காட்டில் ஓரி கடிக்கும்படியாக எடுத்த துளை உடைய வெண்தலையினைக் கையிலே உடையவர் ஒற்றியூர்த் தலத்து இறைவர் . | |
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின், ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி! நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே.
|
3
|
கூற்றுவனால் வருந்தண்டமாகிய இறப்புக்கு அஞ்சி , அறத்தின் ஆற்றினால் அனைத்தையும் இயக்கும் சிவபிரானடியைக் குறிக்கொள்ளுவீராக ! திருநீற்றினைப்பூசி வணங்கி யெழுந்து நினைக்கின்ற அன்பர்க்கெல்லாம் இனிப்பு ஊறும் கரும்பினை ஒத்து இனிப்பர் ஒற்றியூர்த்தலத்து இறைவர் . | |
சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி பற்றி ஆடுவர்; பாய் புலித்தோலினர்- மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே.
|
4
|
மற்றையூர்களிலெல்லாம் சென்று பலி தேர்ந்து பெற்று மீண்டுபோய் ஒற்றியூரிற்புக்கு உறையும் ஒப்பற்றவராகிய இறைவர் பாய்கின்ற புலியினையுரித்த தோலுடையினராய் , சுற்றி நிற்கின்ற பேய்கள் சுழலச் சுடுகாட்டின்கண் கையில் எரியினைப் பற்றி ஆடும் இயல்பினர் . | |
புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு பெற்றம் ஏறு உகந்து, ஏறும் பெருமையான் மற்றையாரொடு வானவரும் தொழ ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே.
|
5
|
மற்றையவர்களோடு தேவர்களும் தொழுமாறு ஒற்றியூரில் உறைவானாகிய கபாலம் கைக்கொண்ட இறைவன் புற்றிலுறையும் வாள்போன்று வருத்தந்தரவல்ல பாம்பினை ஆட்டி உமையோடு ஆனேற்றின்மேல் உயர்ந்து ஏறித்தோன்றும் பெருமையை உடையவன் . | |
| Go to top |
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்- மாது தாழ்சடை வைத்த மணாளனார்; ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
|
6
|
போதுகளைவிட்டுப் பூத்த புதுமலர்களைக் கொண்டு கங்கையைத் தாழ்சடையின் கண் வைத்த மணாளனாரும் , திருவொற்றியூரில் வேதம் ஓதும் வித்தகரும் ஆகிய பெருமானின் திருவடிகளை ஏத்தினால் நம் பாவங்கள் கெடும் . | |
பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும், கலவமஞ்ஞைகள் கார் என எள்குறும், உலவு பைம்பொழில் சூழ் திரு ஒற்றியூர் நிலவினான் அடியே அடை-நெஞ்சமே!
|
7
|
நெஞ்சமே ! அன்னங்கள் பலவும் பலமலர்கள் மேல் தூங்குவதும் கருமை உடைய இருள் விளைத்தலைக் கண்டு பைம்பொழிலை அங்கு உலவும் தோகையுடைய மயில்கள் மேகமெனக் கருதிப் பின் அவையின்மை தெரிந்து வெட்கமுறுதற் சிறப்புடையதுமாகிய திருவொற்றியூரில் விளங்குகின்ற இறைவன் திருவடிகளையே அடைவாயாக ! | |
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று; ஒன்று போலும் உதைத்துக் களைந்தது; ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று; ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.
|
8
|
உயர்ந்து அவர் ஏறியதும் ஒரு விடையினை ; உதைத்துக் களைந்ததும் ஒரு கூற்றுவனை ; சூடியதும் ஒளி விளங்கும் ஒரு மதியினை ; இவையனைத்தும் ஒன்றுபோல் உகந்தவர் ஒற்றி யூர்த்தலத்து இறைவர் . | |
படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர், சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர், உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர் அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.
|
9
|
பூதப்படை கொண்டவரும் , வேதத்தவரும் , இனியகீதத்தவரும் , சடையிற்கொண்ட கங்கையினரும் , சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும் , தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும் . | |
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம், திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர், உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.
|
10
|
மலையென உயர்ந்த தோள்களை உடைய மன்னனான இராவணனை ஒரு சிறு எல்லையில் ஆற்றல் கெடுத்த பெருமான் வாழும் இடம் , அலைகள் பக்கங்களிற்சூழ்ந்த திரு வொற்றியூர் ; அதனை வாக்கினாற் கூறி விளக்கமுறுவோரே உயர்ந்த வராவர் . | |
| Go to top |