சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.024   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=ILf86m1z6LE   Add audio link Add Audio

ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.

1
ஒளி விளங்குகின்ற மதி பாம்பினை ஒற்றி ஊரும் ; பாம்பும் அம்மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும் ; இவ்வாறு இவை ஒன்றையொன்று ஒற்றி ஊரும்படியாக ஒருசடையில் வைத்த சிவபெருமானுக்குரிய ஒற்றியூரைத் தொழ நம்வினைகள் ஓயும் .

வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள்
ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்-
காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர்
ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.

2
மலையரசன் மகளாகிய உமாதேவியார் தளர்ச்சியாகிய ஒன்று உரைக்க , பேய்க்கணங்கள் நெருங்க நள்ளிரு ளின்கண் இடுபிணக்காட்டில் ஓரி கடிக்கும்படியாக எடுத்த துளை உடைய வெண்தலையினைக் கையிலே உடையவர் ஒற்றியூர்த் தலத்து இறைவர் .

கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்,
ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி!
நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே.

3
கூற்றுவனால் வருந்தண்டமாகிய இறப்புக்கு அஞ்சி , அறத்தின் ஆற்றினால் அனைத்தையும் இயக்கும் சிவபிரானடியைக் குறிக்கொள்ளுவீராக ! திருநீற்றினைப்பூசி வணங்கி யெழுந்து நினைக்கின்ற அன்பர்க்கெல்லாம் இனிப்பு ஊறும் கரும்பினை ஒத்து இனிப்பர் ஒற்றியூர்த்தலத்து இறைவர் .

சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி
பற்றி ஆடுவர்; பாய் புலித்தோலினர்-
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய்
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே.

4
மற்றையூர்களிலெல்லாம் சென்று பலி தேர்ந்து பெற்று மீண்டுபோய் ஒற்றியூரிற்புக்கு உறையும் ஒப்பற்றவராகிய இறைவர் பாய்கின்ற புலியினையுரித்த தோலுடையினராய் , சுற்றி நிற்கின்ற பேய்கள் சுழலச் சுடுகாட்டின்கண் கையில் எரியினைப் பற்றி ஆடும் இயல்பினர் .

புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு
பெற்றம் ஏறு உகந்து, ஏறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே.

5
மற்றையவர்களோடு தேவர்களும் தொழுமாறு ஒற்றியூரில் உறைவானாகிய கபாலம் கைக்கொண்ட இறைவன் புற்றிலுறையும் வாள்போன்று வருத்தந்தரவல்ல பாம்பினை ஆட்டி உமையோடு ஆனேற்றின்மேல் உயர்ந்து ஏறித்தோன்றும் பெருமையை உடையவன் .
Go to top

போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்-
மாது தாழ்சடை வைத்த மணாளனார்;
ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

6
போதுகளைவிட்டுப் பூத்த புதுமலர்களைக் கொண்டு கங்கையைத் தாழ்சடையின் கண் வைத்த மணாளனாரும் , திருவொற்றியூரில் வேதம் ஓதும் வித்தகரும் ஆகிய பெருமானின் திருவடிகளை ஏத்தினால் நம் பாவங்கள் கெடும் .

பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும்,
கலவமஞ்ஞைகள் கார் என எள்குறும்,
உலவு பைம்பொழில் சூழ் திரு ஒற்றியூர்
நிலவினான் அடியே அடை-நெஞ்சமே!

7
நெஞ்சமே ! அன்னங்கள் பலவும் பலமலர்கள் மேல் தூங்குவதும் கருமை உடைய இருள் விளைத்தலைக் கண்டு பைம்பொழிலை அங்கு உலவும் தோகையுடைய மயில்கள் மேகமெனக் கருதிப் பின் அவையின்மை தெரிந்து வெட்கமுறுதற் சிறப்புடையதுமாகிய திருவொற்றியூரில் விளங்குகின்ற இறைவன் திருவடிகளையே அடைவாயாக !

ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று;
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது;
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று;
ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.

8
உயர்ந்து அவர் ஏறியதும் ஒரு விடையினை ; உதைத்துக் களைந்ததும் ஒரு கூற்றுவனை ; சூடியதும் ஒளி விளங்கும் ஒரு மதியினை ; இவையனைத்தும் ஒன்றுபோல் உகந்தவர் ஒற்றி யூர்த்தலத்து இறைவர் .

படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர்,
சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர்,
உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.

9
பூதப்படை கொண்டவரும் , வேதத்தவரும் , இனியகீதத்தவரும் , சடையிற்கொண்ட கங்கையினரும் , சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும் , தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும் .

வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம்,
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்,
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.

10
மலையென உயர்ந்த தோள்களை உடைய மன்னனான இராவணனை ஒரு சிறு எல்லையில் ஆற்றல் கெடுத்த பெருமான் வாழும் இடம் , அலைகள் பக்கங்களிற்சூழ்ந்த திரு வொற்றியூர் ; அதனை வாக்கினாற் கூறி விளக்கமுறுவோரே உயர்ந்த வராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவொற்றியூர்
3.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடையவன், விண்ணும் மண்ணும் தொழ
Tune - பஞ்சமம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
Tune - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து
Tune - திருநேரிசை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற
Tune - திருவிருத்தம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
5.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒற்றி ஊரும் ஒளி மதி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
6.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
Tune - திருத்தாண்டகம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.054   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழுக்கு மெய் கொடு உன்
Tune - தக்கேசி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.091   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
Tune - குறிஞ்சி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
11.030   பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது   திருவொற்றியூர் ஒருபா ஒருபது
Tune -   (திருவொற்றியூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000