சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.033   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருச்சோற்றுத்துறை - நாட்டைக்குறிஞ்சி அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=56rtMguGQ7s   Add audio link Add Audio

கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,
தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே
வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

1
அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக.

முத்தி ஆக ஒரு தவம் செய்திலை;
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை;
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

2
அறியாமையை உடைய நெஞ்சமே! முத்திப் பேறெய்தற்பொருட்டு ஒரு தவமும் செய்திலை; அடியார்களுக்கு விருப்பத்தோடு ஒன்றையும் அளித்தாயில்லை; பூங்கொத்துகள் நின்று மலர்கின்ற சோற்றுத்துறையர்க்கு இனியாகிலும் பத்தியோடு பணி செய்வாயாக.

ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற,
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

3
அறியாமையை உடைய நெஞ்சமே! உடலை ஒட்டி நின்ற மிகுந்த நோய்களையும், பிணித்து நிற்கும் வினைகளையும் கழிந்து அறும்படியாகச் சோற்றுத்துறையர் திருவடிகளைத் தொட்டு நின்று பட்டியாகப் பணிசெய்வாயாக.

ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான் என்றும், நின்மலனே என்றும்,
சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே
வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

4
அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளா வாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக.

ஆட்டினாய், அடியேன் வினை ஆயின
ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!

5
அறியாமையை உடைய நெஞ்சமே! அடியவனை ஆட்டுவிப்பானே என்றும், வினைகளாயினவற்றை ஓட்டியவனே என்றும், திருச்செவியில் விளங்குகின்ற சங்கவெண் தோட்டினை யணிந்தவனே என்றும் சோற்றுத்துறையனார்க்கு நீள நினைந்து நீ பணிசெய்வாயாக.
Go to top

பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப்
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்!
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத்
தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!

6
அறியாமையை உடைய நெஞ்சமே! பொங்கி நின்று எழுந்த கடலினின்றும் விளைந்த ஆலகாலவிடத்தை விழுங்கி உண்ட ஒரு தெய்வம் இத்தெய்வத்தையன்றி வேறு உண்டோ சொல்வாயாக! அச்சோற்றுத்துறையர்க்கு மனம் தாழ்ந்து என்றும்தங்கி நீ பணி செய்வாயாக.

ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்;
ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும்,
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

7
அறியாமையை உடைய நெஞ்சமே! ஆணி போல நீ மிகவும் வலி உடையையாயினும், ஏணியைப் போல் இழிந்தும் ஏறியும் இறங்கியும் வாடுகின்றனை; பிறவிப் பெருங்கடற்குத் தோணியாகிய சோற்றுத்துறையர்க்குப் பூணியாக நின்று பணி செய்வாயாக.

பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்?
புற்றில் ஆடு அரவே அது பூணில் என்?
சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே!

8
அறியாமையை உடைய நெஞ்சமே! ஏற்றினை ஏறினாலென்ன, பேய்கள் படைகளாகிலென்ன, புற்றினைப் பொருந்திய அரவை அணியாகப் பூண்டாலென்ன, நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே சுற்றியும் பற்றியும் பணிசெய்வாயாக.

அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்-
பள்ளியான், அறியாத பரிசு எலாம்
சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!

9
அறியாமையை உடைய நெஞ்சமே! தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், ஆதிசேடனாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் அறிய முயன்றும் அறிய இயலாத தன்மையெல்லாம் சொல்லி, சோற்றுத்துறையர்க்கே நீ என்றும் பொருந்திப் பணிசெய்வாயாக.

மிண்டரோடு விரவியும் வீறு இலாக்
குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ
தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!

10
அறியாமையை உடைய நெஞ்சமே! அமண் முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக.
Go to top

வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை
ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான்,
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே!

11
அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சோற்றுத்துறை
1.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
Tune - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலை எழுந்து, கடிமலர் தூயன
Tune - திருவிருத்தம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
5.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
Tune - நாட்டைக்குறிஞ்சி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
6.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
7.094   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
Tune - கௌசிகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000