அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும், பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான், திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.
|
1
|
அருவத் திருமேனியுடையவனாய் யானையின் ஈரப்பட்ட உரியைப் போர்த்தவனாய் , உமையை ஒரு பாகத்தில் உடையவனாய் ஒற்றியூரைத் தன்பதியாக் கொண்டவன் ஆயினும் , பருத்த வரால் மீன்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் என்னும் தலத்தினுள்ளான் அருட்செல்வத்தினால் இத்தேவர்களுக்குச் செல்வம் பெருகுதலை விரும்பும் . | |
வையம் வந்து வணங்கி வலம் கொளும் ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்; பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனன்பால் பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே.
|
2
|
படங்கொண்ட பாம்பை அரையில் ஆர்த்துக் கட்டிய பழனத்தலத்து இறைவனும் , உலகத்தினுள்ளார் எல்லாரும் வந்து வணங்கி வலம் கொள்ளுதற்குரிய தலைவனும் ஆகிய பெருமானைச் சில குருடர்கள் அறியார் ; சில பொய்யர்கள் வணங்காது வீண் காலங்கள் போக்குவர் . | |
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை திண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியே பண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்; எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!
|
3
|
அழகுபெற முறுக்கப்பெற்ற வட்டமாகிய திருச் சடையிற் சேர்த்து உறுதியாகக் கட்டி முடித்துப் பண்பாடும் இறைவனாகிய பழனத்தலத்துப் பெருமானின் ஆயிரம்நாமங்களை நீர் எண்ணுவீராக . | |
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட, வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதி பாக்க, பாம்பினைப் பற்றும் பழனத்தான், தார்க் கொள் மாலை சடைக் கரந்திட்டதே.
|
4
|
பிடித்த கொடுமையை உடைய பாம்பு நெடுமூச்சு விடவும் , அப்பாம்பினைக்கண்ட பிறைமதி நடுங்கிக் காண அப் பாம்பைப் பற்றியாடுபவனாகிய கொன்றைத்தாரும் மாலையும் உடைய பழனத்தலத்துப் பெருமான் இவற்றைச் சடைக்கணிந்திட்டது என்னையோ ? | |
நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர் கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்- பாலும் உண்டு, பழனன்பால்; என்னிடை மாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.
|
5
|
நேர்ந்ததாகிய கோலமாக நஞ்சினை உண்ட குணத்தால் நிறைந்த நீலகண்டனும் , பழனத்தலத்தின் கண் உள்ள இறைவனும் ஆகிய பெருமானிடத்து என்றன் மனத்துள் சிறிது மயக்கம் உள தாகின்றது . | |
| Go to top |
மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர் சந்தம் ஆகத் திருச்சடை சாத்துவான், பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான், எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே.
|
6
|
பெருமை தரும்படியாக வளர்பிறையைச் சூடி ஒரு சந்தமாகத் திருச்சடை சாத்துவானும் , பந்தமாயினவற்றைத் தீர்ப்பானும் ஆகிய திருப்பழனத்து இறைவன் எந்தையும் , தாயும் , தந்தையும் , எம்பெருமானும் ஆவன் . | |
மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்; பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;- பார்க்க நின்று பரவும் பழனத்தான் தாள்கண் நின்று தலை வணங்கார்களே.
|
7
|
எல்லோரும் பார்க்க நின்று பழனத்தின்கண் பரவுவார்க்கு அருள் வழங்கும் இறைவனின் திருவடிக்கண் நின்று தலை வணங்காதவர்கள் , அறிவிலிகளாகி வழியொன்றறியாதவர்களும் , பூக்களைக்கொண்டு கரத்தால் தொழ விழையாத மூடர்களும் ஆவர் . | |
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு தேறுவார் அலர், தீவினையாளர்கள்; பாறினார் பணி வேண்டும் பழனத்தான் கூறினான், உமையாளொடும் கூடவே.
|
8
|
இமையோர்களாகிய தேவர்கள் பணி பல கண்டு தம் பதவியினின்றும் மேலே உயர்ந்தது கண்டும் , தீவினையாளர்கள் தெளிவடைந்தாரல்லர் . இழிந்தவராய மக்கள் பணியையும் விரும்பும் பழனத்தலத்து இறைவன் உமையாளொடுங் கூடி ஒரு கூறனாயினன் . | |
சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்- தெற்றினார் திரியும் புரம்மூன்று எய்தான், பற்றினார் வினை தீர்க்கும் பழனனை, எற்றினான் மறக்கேன், எம்பிரானையே?
|
9
|
திரியும் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , பற்றியவர்களுடைய வினைகளைத் தீர்க்கும் பெருமானுமாகிய பழனத்தலத்து இறைவன் சுற்றுவாரையும் தொழுவாரையும் மேலே உயர்த்தும் ஒளிவண்ணனாயுள்ளனன் ; எம்பெருமானை எதனால் அடியேன் மறக்கக்கூடும் ? | |
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன், பங்கன், என்றும் பழனன், உமையொடும் தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.
|
10
|
பழனத்தலத்து இறைவன் , பொங்குகின்ற பெருங்கடல் சூழ்ந்த இலங்கைக்கரசனாம் இராவணனது அங்கமானவற்றை இறுத்து அருள்செய்தவனும் , உமையொரு பங்கனும் , அடியேனுடைய உச்சியிலே தன் தாளிணைகளைத் தங்குமாறு செய்தவனும் ஆவான் . | |
| Go to top |