முன்னமே நினையா தொழிந்தேன், உனை; இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன், செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி மன்னனே, அடியேனை மறவலே!
|
1
|
செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே ! ( தியாகராசனே !) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன் ; இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை ; ஆயினும் அடியேனை மறவாதே ; என்னை நினைந்தருள்வாயாக ! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி . | |
விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை, மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,- பண் உளார் பயிலும் திருக்கோளிலி அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே!
|
2
|
விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும் , மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக ! | |
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்; ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்; ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே, கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே!
|
3
|
நம்முடைய வாழ்நாள்களின் வரையறையை நாளும் அறியும் ஆற்றல் இல்லை ; நம்மை ஆளும் நோய்களோ தொண்ணூற்றெட்டுக்கு மேலாகும் . அறிவின்மையின்கண் பொருந்தியிருந்து நீர் வருந்தாமல் கோளிலிச் சிவபெருமான் பாதமே கூறுவீராக . | |
விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில், பழகினார் வினை தீர்க்கும், பழம் பதி- அழல் கையான் அமரும்-திருக்கோளிலிக் குழகனார் திருப்பாதமே கூறுமே!
|
4
|
விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும் , தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும் , அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக . | |
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை, காலன் ஆகிய காலற்கும் காலனை,- கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச் சூலபாணிதன் பாதம் தொழுமினே!
|
5
|
மும்மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியும் , காலகாலனும் , அழகுமிக்க பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள சூலத்தைக் கையிலே உடையானுமாகிய பெருமானின் பாதங்களைத் தொழுவீராக . | |
| Go to top |
காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்- நீற்றனை, நிமிர்புன்சடை அண்ணலை, ஆற்றனை,-அமரும் திருக்கோளிலி ஏற்றனார் - அடியே தொழுது ஏத்துமே!
|
6
|
காற்று வடிவாயவனும் , கடல் விடம் உண்டவனும் , வெண்ணீறணிந்தவனும் , நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும் , சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை , அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக . | |
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை, ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை,- கோதி வண்டு அறையும் திருக்கோளிலி வேத நாயகன் பாதம் விரும்புமே!
|
7
|
வைதிகத் தேரின் உறுப்புக்களாய் நின்ற விண்ணோர்களுக்குத் தலைவனும் , நிலைபெற்ற உயிர்கள் ஓதி ஏத்தும் ஒப்பற்றவனும் , வண்டுகள் கோதி ஒலிக்கும் மலர்களின் வளமுடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக . | |
நீதியால் - தொழுவார்கள் தலைவனை, வாதை ஆன விடுக்கும் மணியினை,- கோதி வண்டு அறையும் திருக்கோளிலி வேதநாயகன் பாதம் விரும்புமே!
|
8
|
முறையாகத் தொழுவார்களது தலைவனும் , துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும் , வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேத நாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக . | |
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப் பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை, கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலி நீலகண்டனை, நித்தல் நினைமினே!
|
9
|
மாலும் பிரமனும் அறியவியலாத , பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக . | |
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!
|
10
|
அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி , அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும் , பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக் கோளிலிக்கு விருப்பமாகி , அவன் அடிகளே தொழுது உய்வீராக . | |
| Go to top |