சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.058   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பழையாறை வடதளி - திருக்குறுந்தொகை அருள்தரு சோமகலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சோமேசுவரர் திருவடிகள் போற்றி
பழையாறை வடதளியில் உள்ள சிவபெருமானை எவரும் வழிபடாவண்ணம், திருக்கோயிலின் சன்னதியையும் விமானத்தையும் சமணர்கள் மறைத்து மூடி வைத்திருந்தனர், இதனை அறிந்த அப்பர் பிரான், மறைக்கப்பட்ட சிவபெருமானின் திருமேனியைக் கண்டால் அல்லது பழையாறை வடதளி தலத்தை விட்டு அகலமாட்டேன் என்ற உறுதியுடன், உண்ணாவிரதம் நோன்பு இருந்தார். இந்த செய்தி, சிவபெருமானால் பல்லவ மன்னனுக்கு அவனது கனவில் உணர்த்தப்பட்டது. மன்னனும் பழையாறை விரைந்து வந்து, அங்கிருந்த சமணப் பள்ளியில் தங்கியிருந்த சமணர்களை விரட்டியடித்தான். மேலும் விமானத்தையும் சன்னதியையும் மறைத்திருந்த மறைப்புகளை அகற்றி, பெருமானின் பூசனைக்கு வேண்டிய பொருட்கள் நிலையாக கிடைப்பதற்காக நிபந்தங்கள் செய்த பின்னர், நாவுக்கரசரை வணங்கினான். அப்பர் பிரானும், திருக்கோயிலின் உள்ளே சென்று, தலை எலாம் பறிக்கும் என்று தொடங்கும் பதிகத்தினை பாடினார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=7xesNMOZbZs   Add audio link Add Audio

தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!

1
தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக .

மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.

2
மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி , அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை .

குண்டரை, குணம் இல்லரை, கூறை இல்
மிண்டரை, துரந்த(வ்) விமலன் தனை;
அண்டரை; பழையாறை வடதளிக்
கண்டரை; தொழுது உய்ந்தன, கைகளே.

3
குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , உடை யணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும் , தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீலகண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன .

முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை,
கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்-
படையரை; பழையாறை வடதளி
உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே.

4
முடைநாற்றம் உடையோரும் , தலையை மழித்த மொட்டையர்களும் , கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும் , கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது .

ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை,
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
வள்ளலை, புகழத் துயர் வாடுமே.

5
ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும் , கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச் சேறாகிய நீர்வளம் உடைய பழையாறைவடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும் .
Go to top

நீதியைக் கெட நின்று அமணே உணும்
சாதியைக் கெடுமா செய்த சங்கரன்,
ஆதியை, பழையாறை வடதளிச்
சோதியை, தொழுவார் துயர் தீருமே.

6
முறைமை கெட நின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும் , ஆதியும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும் .

திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்-
பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை,
அருள்-திறத்து அணி ஆறை வடதளித்
தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.

7
திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த பெருமானை . அருள் திறத்தை உடைய அழகுபொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும் .

ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண்
வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை
பாதனை, பழையாறை வடதளி
நாதனை, தொழ நம் வினை நாசமே.

8
அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும் , வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம் .

வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா
ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி
மேயவன்(ன்) என வல்வினை வீடுமே.

9
மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும் , பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லு மளவிலேயே வல்வினைகள் கெடும் .

செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல்,
எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய
அருத்தனை; பழையாறை வடதளித்
திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.

10
போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும் , பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள்வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழையாறை வடதளி
5.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000