பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும் கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.
|
1
|
போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி , மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும் . | |
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக் கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல் மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே.
|
2
|
கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும் , குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை . | |
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி, அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.
|
3
|
தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும் , ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி , அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம் . | |
தீது அவை செய்து தீவினை வீழாதே, காதல் செய்து கருத்தினில் நின்ற நல் மா தவர் பயில் மாற்பேறு கைதொழப் போதுமின்! வினை ஆயின போகுமே.
|
4
|
தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது , கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போது வீராக ; உம் வினையாயின போகும் . | |
வார் கொள் மென்முலை மங்கை ஓர் பங்கினன், வார் கொள் நல்முரசம்(ம்) அறைய(வ்) அறை வார் கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு- வார்கள் மன்னுவர், பொன்னுலகத்திலே.
|
5
|
கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும் , இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும் , நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும் , நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கைதொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர் . | |
| Go to top |
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை உண்டு; சொல்லுவன்; கேண்மின்: ஒளி கிளர் வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு கண்டு கைதொழ, தீரும், கவலையே.
|
6
|
பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு ; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக ; ஒளிகிளர்கின்றதும் , வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற் பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும் . | |
மழுவலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து அழ வலார்களுக்கு, அன்புசெய்து இன்பொடும் வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு தொழ வலார் தமக்கு, இல்லை, துயரமே.
|
7
|
மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திரு நாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற் பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை . | |
முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப் பொன் அவன், திகழ் முத்தொடு; போகம் ஆம் மன்னவன்; திரு மாற்பேறு கைதொழும் அன்னவர் எமை ஆள் உடையார்களே.
|
8
|
உலகினுக்கு முன்னேதோன்றியவனும் , முழு மணியும் , பொன்னும் , விளங்கும் முத்தும் , போகங்களும் ஆக விளங்கும் . மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள் . | |
வேடனாய் விசய(ன்)னொடும் எய்து வெங் காடு நீடு உகந்து, ஆடிய கண்ணுதல்- மாடம் நீடு உயரும்-திரு மாற்பேறு பாடுவார் பெறுவார், பரலோகமே.
|
9
|
அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து , வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும் , மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள் . | |
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத் தருக்கினால் எடுத்தானைத் தகரவே வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே.
|
10
|
கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை . | |
| Go to top |