சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.075   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை ஹரிகாம்போஜி தேஷ் ராகத்தில் திருமுறை அருள்தரு கொந்தளநாயகியம்மை உடனுறை அருள்மிகு கொந்தளக்கருணைநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Ph5jvuLnL0Q   Add audio link Add Audio

மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர்,
சரக்குக் காவி, திரிந்து அயராது, கால்
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக்
குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.

1
மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி , தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல் , கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய , குற்றங்கள் கெடும் .

கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல்
கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா,
முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு
இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.

2
கட்டப்பட்ட கரைக்குள்ளடங்கிய நெறியின் வழியே கழிகின்ற காவிரி பாய்கின்ற வயல்களில் கொட்டும் நெறியெல்லாம் புனல் ஊறுகின்ற குரக்குக்காவினை முட்டாத நெறியே திருவடியேத்த முயலும் அடியவர்களுக்குப் பொருந்தும் நெறியாய துன்பங்கள் ஓடுமாறு அருள் புரிவான் இறைவன் .

கை அனைத்தும் கலந்து எழு காவிரி,
செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

3
பக்கமெங்கும் கலந்து எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக் கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை .

மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனல் கரை,
கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே.

4
அனைத்துத் திக்குகளும் மிகுந்து அருவிகள் புகுந்து பெருகுதலால் காவிரி போந்த புனற்கரையின் கண் கொக்குச் சாதிகள் பயிலும் சோலையை உடைய குரக்குக்காவின்கண் திகம்பரனாய பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும் .

விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட,
கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா
இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே.

5
வெள்ளம் பொருந்தி விரிந்தெழுங் காவிரி இட்ட நீரானது வயல் எங்கும் பரந்திடுதலால் சிறந்து , மாமுழவுகள் கொட்ட ஓங்கும் குரக்குக்காவின் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை .
Go to top

மேலை வானவரோடு, விரி கடல்
மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்-
பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே.

6
மேல் உலகத்திலுள்ள தேவர்களோடு விரிந்த கடலில் துயிலும் திருமாலும் , நான்முகனும் ஆகியவராலும் அளக்க வியலாத பெருமான் உறைவதும் , அழகு மிக்க மாளிகையாகிய கோயிலை உடையதுமாகிய குரக்குக்காவின்பால் வாழ்வோராய்த் திரிவோர்க்குப் பாவம் இல்லை .

ஆலநீழல் அமர்ந்த அழகனார்,
காலனை உதைகொண்ட கருத்தனார்,
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்-
பாலருக்கு அருள்செய்வர், பரிவொடே.

7
கல்லால நிழற்கீழ் அமர்ந்த அழகரும் , காலனை உதைத்தலைக் கொண்ட கருத்தருமாகிய பெருமான் உறைகின்ற அழகு மிக்க மயில்கள் ஆர்க்கின்ற குரக்குக்காவின்பால் வாழ்வோர்க்குப் பரிவொடு அருள்செய்வர் .

செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார்,
அக்கு அரையர், எம் ஆதிபுராணனார்,
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனை, தொழ, நம் வினை நாசமே.

8
செவ்வானத்தைப் போன்றெழுகின்ற சிவந்த சுடர் வீசும் சோதியாரும் , அக்கு மணியை இடுப்பில் அணிந்துள்ளவரும் , ஆதியிலே தோன்றிய பழமை உடையவரும் , கொக்குச் சாதிகள் வயலில் சேர்கின்ற குரக்குக்காவின் திகம்பரனுமாய பெருமானைத் தொழ நம்வினை நாசமாம் .

உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர்,
கரிய கண்டன் கழல் அடி தன்னையே!
குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!

9
திருநீலகண்டன் கழலணிந்த பாதங்களை நீர் உருகி , உடல் குழைந்து ஏத்தி எழுவீராக . நம் செழுங்கோயிலாகிய குரக்குக் காவில் வீற்றிருக்கும் பரமாசாரியனாகிய அப்பெருமானையே இரவும் பகலும் ஏத்தித் தொழுவீர்களாக .

இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி,
உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்-
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா;
வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.

10
மலையெடுக்கலுற்ற இராவணன் முடிகளையும் ஆற்றலையும் சுருங்கும்படியாக இரக்கம் இல்லாமல் வருத்தியவனுக்கு இடமாகிய , குரங்குச்சாதி குதித்தலைக்கொள்ளும் குரக்குக்காவில் வரம் அருளும் அப்பெருமானைப் பெற வானுலகு ஆள்வர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்குரக்குக்கா
5.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   மரக் கொக்குஆம் என வாய்விட்டு
Tune - திருக்குறுந்தொகை   (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000