மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர், சரக்குக் காவி, திரிந்து அயராது, கால் பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக் குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.
|
1
|
மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி , தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல் , கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய , குற்றங்கள் கெடும் . | |
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா, முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.
|
2
|
கட்டப்பட்ட கரைக்குள்ளடங்கிய நெறியின் வழியே கழிகின்ற காவிரி பாய்கின்ற வயல்களில் கொட்டும் நெறியெல்லாம் புனல் ஊறுகின்ற குரக்குக்காவினை முட்டாத நெறியே திருவடியேத்த முயலும் அடியவர்களுக்குப் பொருந்தும் நெறியாய துன்பங்கள் ஓடுமாறு அருள் புரிவான் இறைவன் . | |
கை அனைத்தும் கலந்து எழு காவிரி, செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல் கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
|
3
|
பக்கமெங்கும் கலந்து எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக் கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை . | |
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள் புக்குக் காவிரி போந்த புனல் கரை, கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா நக்கனை நவில்வார் வினை நாசமே.
|
4
|
அனைத்துத் திக்குகளும் மிகுந்து அருவிகள் புகுந்து பெருகுதலால் காவிரி போந்த புனற்கரையின் கண் கொக்குச் சாதிகள் பயிலும் சோலையை உடைய குரக்குக்காவின்கண் திகம்பரனாய பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும் . | |
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட, கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே.
|
5
|
வெள்ளம் பொருந்தி விரிந்தெழுங் காவிரி இட்ட நீரானது வயல் எங்கும் பரந்திடுதலால் சிறந்து , மாமுழவுகள் கொட்ட ஓங்கும் குரக்குக்காவின் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை . | |
| Go to top |
மேலை வானவரோடு, விரி கடல் மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக் கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்- பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே.
|
6
|
மேல் உலகத்திலுள்ள தேவர்களோடு விரிந்த கடலில் துயிலும் திருமாலும் , நான்முகனும் ஆகியவராலும் அளக்க வியலாத பெருமான் உறைவதும் , அழகு மிக்க மாளிகையாகிய கோயிலை உடையதுமாகிய குரக்குக்காவின்பால் வாழ்வோராய்த் திரிவோர்க்குப் பாவம் இல்லை . | |
ஆலநீழல் அமர்ந்த அழகனார், காலனை உதைகொண்ட கருத்தனார், கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்- பாலருக்கு அருள்செய்வர், பரிவொடே.
|
7
|
கல்லால நிழற்கீழ் அமர்ந்த அழகரும் , காலனை உதைத்தலைக் கொண்ட கருத்தருமாகிய பெருமான் உறைகின்ற அழகு மிக்க மயில்கள் ஆர்க்கின்ற குரக்குக்காவின்பால் வாழ்வோர்க்குப் பரிவொடு அருள்செய்வர் . | |
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார், அக்கு அரையர், எம் ஆதிபுராணனார், கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா நக்கனை, தொழ, நம் வினை நாசமே.
|
8
|
செவ்வானத்தைப் போன்றெழுகின்ற சிவந்த சுடர் வீசும் சோதியாரும் , அக்கு மணியை இடுப்பில் அணிந்துள்ளவரும் , ஆதியிலே தோன்றிய பழமை உடையவரும் , கொக்குச் சாதிகள் வயலில் சேர்கின்ற குரக்குக்காவின் திகம்பரனுமாய பெருமானைத் தொழ நம்வினை நாசமாம் . | |
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர், கரிய கண்டன் கழல் அடி தன்னையே! குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!
|
9
|
திருநீலகண்டன் கழலணிந்த பாதங்களை நீர் உருகி , உடல் குழைந்து ஏத்தி எழுவீராக . நம் செழுங்கோயிலாகிய குரக்குக் காவில் வீற்றிருக்கும் பரமாசாரியனாகிய அப்பெருமானையே இரவும் பகலும் ஏத்தித் தொழுவீர்களாக . | |
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி, உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்- குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா; வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.
|
10
|
மலையெடுக்கலுற்ற இராவணன் முடிகளையும் ஆற்றலையும் சுருங்கும்படியாக இரக்கம் இல்லாமல் வருத்தியவனுக்கு இடமாகிய , குரங்குச்சாதி குதித்தலைக்கொள்ளும் குரக்குக்காவில் வரம் அருளும் அப்பெருமானைப் பெற வானுலகு ஆள்வர் . | |
| Go to top |