அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு- முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்- துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
1
|
அண்டத்தில் உள்ளவனும், தேவர்களால் தொழப் படும் பொருளும், பவித்திரம் உடைய நெற்றியை உடையவனும், இளம் பிறைப் பிளவினைச் சூடியவனுமாகிய பெருமானே தொழத் தக்கவன்; காண்பீராக. | |
முத்து ஒப்பானை, முளைத்து எழு கற்பக- வித்து ஒப்பானை, விளக்கு இடை நேர் ஒளி ஒத்து ஒப்பானை, ஒளிர் பவளத்திரள்- தொத்து ஒப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
2
|
முத்து ஒப்பவனும், முளைத்தெழுகின்ற கற்பக வித்துப் போல்வானும், திருவிளக்கிடை நேர்கின்ற ஒளியை ஒத்திருப்பவனும், ஒளியையுடைய பவளத்திரளின் கொத்தினை ஒப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர் வண்ணத்தானை, வகை உணர்வான் தனை, எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்- சுண்ணத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
3
|
பண் ஒத்தவனும், பவளம் திரண்டது போன்ற செவ்வண்ணம் உடையவனும், வகைகளையெல்லாம் உணர்பவனும், அடியார்கள் எண்ணத்தில் இருப்பவனும், இளம்பிறை போன்ற வெண்சுண்ணம் உடையவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
விடலையானை, விரை கமழ் தேன் கொன்றைப்- படலையானை, பலி திரிவான் செலும் நடலையானை, நரி பிரியாதது ஓர் சுடலையானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
4
|
விடலைப்பருவம் உடையவனும், மணங்கமழும் கொன்றைமாலை உடையவனும், பலிபெறுதற்காகத் திரிந்துசெல்லும் துன்பம் உடையவனும், நரிகள் பிரிந்துசெல்லாத சுடுகாட்டில் இருப்பவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
பரிதியானை, பல்வேறு சமயங்கள் கருதியானை, கண்டார் மனம் மேவிய பிரிதியானை, பிறர் அறியாதது ஓர் சுருதியானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
5
|
ஞானசூரியனாக உள்ளவனும், பல்வேறு சமயங்களாற் கருதப்பட்டவனும், கண்டார் மனத்தை விரும்பியமர்ந்தவனும், பிறர் அறியாததோர் சுருதியானும் ஆகிய பெருமானே, தொழத்தக்கவன்; காண்பீராக. | |
| Go to top |
ஆதியானை, அமரர் தொழப்படும் நீதியானை, நியம நெறிகளை ஓதியானை, உணர்தற்கு அரியது ஓர் சோதியானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
6
|
முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமநெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஒப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும் கோலத்தானை, குணப்பெருங்குன்றினை, மூலத்தானை, முதல்வனை, மூ இலைச்- சூலத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
7
|
உலகமாகி உள்ளவனும், நல்லவனும், வல்லவர் தொழும் கோலத்தை உடையவனும், குணமாகிய பெருங்குன்றானவனும், மூலமாக உள்ளவனும், முதல்வனும், மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும் வேதிப்பானை, நம்மேல் வினை வெந்து அறச் சாதிப்பானை, தவத்து இடை மாற்றங்கள் சோதிப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
8
|
முதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்ச கவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
நீற்றினானை, நிகர் இல் வெண்கோவணக்- கீற்றினானை, கிளர் ஒளிச் செஞ்சடை ஆற்றினானை, அமரர்தம் ஆர் உயிர் தோற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
9
|
திருநீறணிந்தவனும், ஒப்பற்ற வெள்ளிய கோவணக்கீறு உடையவனும், ஒளிகிளரும் சிவந்த சடைக்கண் கங்கையை உடையவனும் தேவர்க்கு உயிர்வழங்கினானுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள் கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு- பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம் சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
10
|
மெய்ஞ்ஞானத்து அடியேனை விட்டவனும், மெய்ப்பொருளைக் காட்டியவனும், உமாதேவியினிடத்து அன்பு பொருந்தியவனும், பகைத்தவராகிய திரிபுராதிகள் முப்புரங்களைச் சுட்டவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |
| Go to top |
முற்றினானை; இராவணன் நீள் முடி ஒற்றினானை, ஒருவிரலால் உற; பற்றினானை, ஓர் வெண்தலை; பாம்பு அரைச் சுற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.
|
11
|
எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவனும், இராவணன் நீண்முடிகளை ஒற்றியபோது ஒரு விரலால் உறப்பற்றியவனும், ஒரு வெண்டலை உடையவனும், பாம்பினை அரைக்கண் சுற்றியவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. | |