கண்ணின் கருமணியைப் போன்று அருமையானவனாய், பொற்குன்று ஒப்பவனாய், தியானிக்கும் அடியவர்களுக்கு மிகவும் எளியவனாய், நல்ல நிறமுடைய மாணிக்கமாய், கொடிய பாம்பு ஒன்றினை ஆட்டுபவனாய், வேங்கைத்தோலை உடுத்தவனாய், கோவணம் அணிந்தவனாய், சிந்தாமணியாய், தன்னைச் சரணம் புகுந்தவர்களுக்கு அமுதம் போன்று இனியனாய், பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், அடியேன் சரணடைந்த வீடுபேறாகிய செல்வத்தை நல்கும் மணியாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினையை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள் தன்னை, காபாலி, கட்டங்கம் ஏந்தினானை, பார் ஒளியை, விண் ஒளியை, பாதாள(ன்)னை, பால் மதியம் சூடி ஓர் பண்பன் தன்னை, பேரொளியை, பெண் பாகம் வைத்தான் தன்னை, பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும் சீர் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப்படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளி வழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு ஊர்ந்த பெம்மானை, எம்மான்! என்று பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை, முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை, சித்தனை, என் திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
எல்லாத் திசைகளிலும் தேவர்களால் தொழப்படுபவனாய், இடப வாகனனாய், அடியேன் என் தலைவன் என்று பக்தி யோடு பணியத் தன்னைப் பல நாளும் பாமாலை பாடப் பழகுவித்தவனாய், முத்து, மணி, மாணிக்கம், முளைத்தெழுந்த செம்பவளக் கொத்து என்பன போலக் கண்ணுக்கு இனியவனாய், எல்லாம் செய்ய வல்லவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை, உத்தமனை, பத்தர் மனம் குடி கொண்டானை, கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை, கார் மேகமிடற்றானை, கனலை, காற்றை, தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த தீம் கரும்பை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
உடம்பில் கருவாகி நின்ற உயிருக்குள் ஒளி வடிவாய் உள்ளவனாய், உத்தமனாய், அடியார் மனத்தில் உறைபவனாய், காட்டில் வேடனாய்த் திரிந்து அருச்சுனன் பொருட்டுக் காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனாய், கார்மேகம் போன்ற நீலகண்டனாய், கனலாகவும், காற்றாகவும் உள்ளானாய், தானே ஆராய்ந்து அடியேனைத் தன் அடிமையாகக் கொண்டு தன்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்த கரும்பு போன்ற இனியனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி, தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி, மிக்கது ஒரு தீவளி நீர் ஆகாசம்(ம்) ஆய், மேல் உலகுக்கு அப்பால் ஆய், இப்பாலானை; அக்கினொடு முத்தினையும் அணிந்து, தொண்டர்க்கு அங்கு அங்கே அறுசமயம் ஆகி நின்ற திக்கினை; என் திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்து, தாமரையில் உறையும் பிரமனும் தானேயாகி, ஐம்பூதங்களும், மேலுலகும், அதற்கு அப்பாலும் இப்பாலுமாய்ப் பரந்து, சங்கு மணியையும், முத்தையும் அணிந்து, அடியவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வைதிக சமயங்களாகிய வழியானவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
இயல்பாகவே உடம்பு இன்றி இருப்பவனாய், சோதி வடிவினனாய், தான் பிறப்பெடுக்காமல் பிறவி எடுக்கும் உயிர்களுக்கெல்லாம் தானே நலன் செய்பவனாய், பெண்ணுருவும், ஆண் உருவுமாக இருப்பவனாய், தன்னை மறவாமல், தன் பண்பு செயல்களையே வாழ்த்தும் அடியவர்களின் உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்றிருக்கும் பண்பினை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
பொன் தூணை, புலால் நாறு கபாலம் ஏந்திப் புவலோகம் எல்லாம் உழி தந்தானை, முற்றாத வெண் திங்கள் கண்ணியானை, முழு முதல் ஆய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லாக் கல்-தூணை, காளத்தி மலையான் தன்னை, கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் செற்றானை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
பொன்மயமான தூண்போல்பவனாய், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டினை ஏந்தி மேல் உலகம் எல்லாம் திரிபவனாய், பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், முழுமுதற் கடவுளாய், எல்லா உலகங்களிலும் விரவி நின்று, தனக்கு இறுதி யில்லாது கற்றூண்போல அவற்றைத் தாங்குபவனாய்க் காளத்தி மலையில் உறைபவனாய், பகைவருடைய மும்மதில்களையும் எரியுமாறு வில்லால் அழித்தவனாய், திருமுதுகுன்றம் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி, எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டு, புகழ்ந்தானை; பூந்துருத்தி மேயான் தன்னை; புண்ணியனை; விண்ணவர்கள் நிதியம் தன்னை; மகிழ்ந்தானை, மலைமகள் ஓர்பாகம் வைத்து; வளர் மதியம் சடை வைத்து, மால் ஓர்பாகம் திகழ்ந்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
தன்னை இகழ்ந்து, கயிலையை அசைத்த இராவணனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு விரலை ஊன்றி, அவன் ஏழுநரம்புகளைக் கொண்டு இசைபாட, அதனை இனிது கேட்டு, அவன் இசை ஞானத்தைப் புகழ்ந்தவனாய், பூந்துருத்தியில் உறையும் புண்ணியனாய், தேவர்களுக்குச் செல்வமாய், பார்வதி பாகனாய் மகிழ்ந்தவனாய், பிறையைச் சடையில் சூடித் திருமாலைத் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.