சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.095   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தனித் திருத்தாண்டகம் - திருத்தாண்டகம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE   Add audio link Add Audio

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

1
ஏறூர்ந்த செல்வனே! எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.

வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;| வெய்ய வினைப் பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;| எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம்
அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி,| அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர்,| செவ்வான வண்ணர், என் சிந்தையாரே.

2
அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்த வரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? யாவர்க்கும் எளியோம் அல்லோம்.

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர், கண்ணுதலாய்! காட்டாக்காலே?.

3
கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?

நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! | நலஞ்சுடரே! நால் வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற | சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் | நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன் |-கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!.

4
வீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடு பேறாய் நின்றவனே! ஞானமே வடிவானவனே! நன்மையை விளக்கும் சுடரே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய்! இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே! கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.

திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும், | திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும்,
பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், | பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், | விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும், | அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!.

5
சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.
Go to top

திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், | தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், | உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், | அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் | பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!.

6
திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.

நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; | நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்;
மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; | மறை   நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்;
பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்; | பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
என் ஆனாய்! என் ஆனாய்! என்னின் அல்லால், | ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.

7
நின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார் தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆனாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே! நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்.

அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; | அருள் நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; | எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், | பிழைத் தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! | எம்பெருமான் திருக்கருணை இருந்த ஆறே!.

8
தந்தையே! ஐயா! உன் அடியவன் ஆகிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; அல்ல; எம் பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.

குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்; | குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்; | நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்; | வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; |என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?.

9
சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால் குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து | தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,| மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய் | ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,| அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.

10
சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருத்தாண்டகம்
6.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   அப்பன் நீ, அம்மை நீ,
Tune - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
6.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
Tune - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000