சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.096   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தனித் திருத்தாண்டகம் - திருத்தாண்டகம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw   Add audio link Add Audio

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்;
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம்   கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்;
காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி; கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.

1
கண்ணப்பரது பூசையினையும் அன்புகருதி ஏற்றுக்கொண்ட காபாலியாராகிய சிவபெருமானார் நோய் தீர்த்து அடியேனை ஆளாகக் கொண்டவரும் , அதிகை வீரட்டானத்திருந்து ஆட்சி செய்பவரும் , பிரமனது சிரத்தைக் கொய்து கையிற் கொண்ட வரும் , அத்தலையோட்டில் பிச்சை ஏற்றவரும் , வாமனனாகி வந்து மண் இரந்து திரிவிக்கிரமனாய் வளர்ந்து மூவுலகையும் அளந்து மிக்க செருக்குற்ற நிலையில் அப்பேருடம்பின் உதிரத்தை வெளிப்படுத்தி அவனை அழித்தவரும் , மான்போன்ற உமையை இடப்பாகமாகக் கொண்டவரும் , மழு ஆயுதத்தை வலக்கையில் ஏந்தியவரும் , நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துக் காமனை அழித்தவரும் ஆவார் .

முப்புரி நூல் வரை மார்பில் முயங்கக் கொண்டார்; முது கேழல் முளை மருப்பும் கொண்டார், பூணா;
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார்; செம்மேனி வெண் நீறு திகழக் கொண்டார்;
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார்; சுடர் முடி சூழ்ந்து, அடி அமரர் தொழவும் கொண்டார்;
அப் பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார்   அடியேனை ஆள் உடைய அடிகளாரே.

2
அடியேனைத் தமக்கு ஆளாகவுடைய தலைவர் ஆகிய சிவபெருமானார் உத்தமவிலக்கணமாகிய கீற்றுப் பொருந்திய மார்பினிடத்து முப்புரிநூல் பொருந்தக் கொண்டவரும் . பழைய பன்றியில் முளை போன்ற கொம்பினைப் பூணாகக் கொண்டவரும் , கிண்ணம் போன்ற அழகிய முலைகளையுடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவரும் சிவந்த உடலில் வெண்ணீறு விளங்கக் கொண்டவரும் , தூய்மை நிறைந்து முறுக்குண்ட சங்கினாலியன்ற தோட்டினைக் கொண்டவரும் , அமரர் சூழ்ந்து சுடர் முடியால் தமது அடியைத் தொழக் கொண்டவரும் , அந்நாளில் தாருகாவன முனி பத்தினியர் இட்ட பிச்சையோடு அவர்களது அன்பினையும் கொண்டவர் ஆவார் .

முடி கொண்டார்; முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆகக் கொண்டார்;
அடி கொண்டார், சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்;
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கைக் கொண்டார்; மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்;
துடி கொண்டார்; கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே.

3
சடையை முடியாகக் கொண்டவரும் , முதலில் காணப்படுகின்ற வெள்ளிய பிறைச் சந்திரனையும் படத்தால் மறைக்கும் இளம்பாம்பையும் உடன் உறையும்படி அம்முடிக்கண் கொண்ட வரும் , ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் கழலினையும் ஒலிக்கும்படி அடிக்கண் கொண்டவரும் , கொடுமை குறையாத முயலகனை அடிக்கீழ்க் கொண்டவரும் , கூர்மையைக் கொண்டு நிரம்ப இலங்குகின்ற மழுவினை வலக்கையிற் கொண்டவரும் , திருமாலை இடப்பாகமாகப் பொருந்தக் கொண்டவரும் , துடியைக் கையிற் கொண்டவரும் , எலும்புக் கூட்டினைத் தோள் மேற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானாரே சூலை நோயைத் தீர்த்து அடியேனை ஆட் கொண்டவர் ஆவார் .

பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்; பூதப்படைகள் புடை சூழக் கொண்டார்;
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார்; அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்;
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்; கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்;
செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே.

4
திருநீற்றுப் பையினையும் புலித்தோலையும் புயத்தில் கொண்டவரும் , பூதப் படைகள் தம்மைப் பக்கங்களில் சூடிக் கொண்டவரும் , அக்குமணியையும் படநாகத்தையும் இடுப்பின்மேல் கொண்டவரும் , தாம் படைத்தவையாகிய எல்லா உலகங்களையும் ஒடுங்குமாறு செய்தலைக் கொண்டவரும் , கொக்கிறகினையும் வில்வத்தினையும் முடித்த சடையில் கொண்டவரும் , கொடிய சலந்தராசுரனை ஆற்றல் மிக்க ஆழிக்கு இரையாகக் கொண்டவரும் , செந்நிறத் திருமேனி விளங்கக் கொண்டவரும் ஆகிய சிவனாரே கீழ்மையேனை ஆட்கொண்டவர் ஆவார் .

அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்; அரு மறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்;
சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு நடம் ஆடும் இடமாக் கொண்டார்;
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார்; மாகாளன் வாசல் காப்பு ஆகக் கொண்டார்;
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண் தீர்த்து என் தன்னை ஆட் கொண்டார் தாமே.

5
அந்தகாசுரனைக் கூரிய சூலத்தால் அழுத்தி அவன் உயிரைக் கொண்டவரும் , திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில் உணர்தற்கரிய வேதத்தைத் தேர்க்குதிரையாக்கிக் கொண்டவரும் , ஆலால சுந்தரனை இரட்டைக் கவரி வீசக்கொண்டவரும் , சுடுகாட்டை நடனமாடுமிடமாகக் கொண்டவரும் , மந்தர மலையைப் போரிடுதற்குரிய வில்லாக வளைத்துக் கொண்டவரும் , மாகாளனை வாசல் காப்பாளனாகக் கொண்டவரும் , தந்திர மந்திரங்களில் பொருந்தி நின்று அருளுதலைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் சமணரிடமிருந்து என்னை நீக்கி என்னை ஆட்கொண்டவர் ஆவார் .
Go to top

பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்; பவள நிறம் கொண்டார்; பளிங்கும் கொண்டார்;
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார்; நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்;
வார் அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார்; வளையும் கொண்டார்;
ஊர் அடங்க, ஒற்றி நகர் பற்றிக் கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

6
பூதகணங்கள் பல இசைக் கருவிகளையும் இயக்கக் கொண்டவரும் , மேனியில் பவளநிறத்தையும் வெண்ணீற்றுப் பூச்சில் பளிங்கு நிறத்தையும் கொண்டவரும் , கங்கை தங்கும் சடைமுடிமேல் பிறைச் சந்திரனையும் கொண்டவரும் , அழகு நிறைந்த மிடற்றினில் நீலநிறம் கொண்டவரும் , கச்சிற்குள் அடங்கும் அழகிய முலையாராகிய தாருகாவன முனிபத்தினியர் காதலால் மயக்கம் கொண்டு வந்திட்ட பிச்சையுடன் அவர்களுடைய கைவளையல்களையும் கொண்டவரும் எல்லா ஊர்களும் தம் ஆட்சியில் அடங்கியிருக்கத் திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டவருமாகிய சிவ பெருமானார் என் உடலிற் பொருந்திய சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

அணி தில்லை அம்பலம் ஆடு அரங்காக் கொண்டார்; ஆலால அரு நஞ்சம் அமுதாக் கொண்டார்;
கணி வளர் தார்ப் பொன் இதழிக் கமழ்தார் கொண்டார்; காதல்   ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார்;
மணி பணத்த அரவம் தோள்வளையாக் கொண்டார்; மால் விடை மேல் நெடுவீதி போதக் கொண்டார்;
துணி புலித்தோலினை ஆடை உடையாக் கொண்டார்; சூலம் கைக் கொண்டார் தொண்டு எனைக் கொண்டாரே.

7
அழகிய தில்லை அம்பலத்தைத் தாம் ஆடும் அரங்காகக் கொண்டவரும் , கடலில் வந்த ஆலால நஞ்சினை அமுதாகக் கொண்டவரும் , அழகு மிகுகின்ற சரங்களாகிய பொன் போன்ற கொன்றை மலராலாகிய மணம் கமழ்கின்ற மாலையைக் கொண்டவரும் , விருப்பம் நிறைந்த கோடி என்றதலத்தில் கூடி இருத்தலைக் கொண்டவரும் , மாணிக்கத்தோடு கூடிய படத்தையுடைய பாம்பினைத் தோள்வளையாகக் கொண்டவரும் , மேற் கொண்டு நீண்ட வீதியில் வருதற்குப் பெரிய இடபத்தைக் கொண்ட வரும் , உரித்த புலியினது தோலை உத்தரியமாகவும் உடையாகவும் கொண்டவரும் , சூலத்தைக் கையில் கொண்டவருமாகிய சிவ பெருமானார் என்னைத் தமக்கு அடிமையாகக் கொண்டவராவார் .

பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன், என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்;
குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்;
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்;
இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே; என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.

8
படத்தையும் கொடுமைக் குணத்தையுமுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலையும் இந்திரனையும் பங்கயத்துப் பிரமனையும் தம் விருப்பப்படி படைத்துக் கொண்ட வரும் , குடமூக்கிற் கீழ்க் கோட்டத்தைக் கோயிலாகக் கொண்டவரும் , கூற்றுவனை உதைத்து ஒப்பற்ற வேதியனாம் மார்க்கண்டேயனை வாழக் கொண்டவரும் , துதிக்கையை உடைய யானையினது தோலினை உடலில் போர்த்திக்கொண்டவரும் , தம்மை நினையாத பாவிகளை நீங்கக் கொண்டவரும் , இடைமருதினைத் தமக்கு இடமாகக் கொண்டவரும் , ஆகிய சிவபெருமானார் என்னை இந்நாள் ஆட்கொண்ட இறைவர் ஆவார் .

எச்சன் இணை தலை கொண்டார்; பகன் கண் கொண்டார்; இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்;
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்; விறல் அங்கி கரம் கொண்டார்; வேள்வி காத்து,
உச்ச நமன் தாள் அறுத்தார்; சந்திரனை உதைத்தார்; உணர்வு இலாத் தக்கன் தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக் கொண்டு, அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே.

9
வேள்வித் தெய்வத்தின் நிணம் பொருந்திய தலையைக் கொண்டவரும் , சூரியர்களில் ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும் , சூரியர்களில் மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும் , தன்னையே மெச்சினவனாய் , மாறான , வழியல்லாத வழியிற் சென்ற தக்கன் தலையை வேறாகக் கொண்டவரும் , வெற்றியுடைய அக்கினி தேவனின் கரத்தைக் கொண்டவரும் , வேள்வியைக் காத்து நின்ற வெற்றியில் உயர்ந்த இயமனுடைய தாளை அறுத்தவரும் , சந்திரனை உதைத்தவரும் , அறிவில்லாத தக்கனுடைய வேள்வி முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப் பின் அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார் .

சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்;
உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;
கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால வேடம் கருதிக் கொண்டார்;
விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார்   வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

10
தன் சடைகள் பலவற்றுள் ஒன்றிடத்தே கங்கையை அடக்கித் தரித்துக் கொண்டவரும் , வீணையைத் தடவிச் சாம வேதத்தின் இசையைக் கொண்டவரும் , புள்ளி மான் தோலை உடை என்னும் ஒரு தன்மையில் ஏற்றுக்கொண்டவரும் , தம்மை நினைவார் உள்ளத்தைத் தம்மிடத்து ஒருங்கிநிற்கும்படி செய்து கொண்டவரும் , வீட்டு வாசல் தோறும் பிச்சை கொண்டவரும் , கையில் கனல் கொண்டவரும் , காபால வேடத்தை விரும்பிக் கொண்டவரும் , இடபத்தைத் தன் வெற்றிக் கொடியில் பொருந்தக் கொண்டவரும் , ஆகிய சிவபெருமானார் என் கொடிய துயரங்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .
Go to top

குரா மலரோடு, அரா, மதியம், சடை மேல் கொண்டார்; குடமுழ, நந்தீசனை, வாசகனாக் கொண்டார்;
சிராமலை தம் சேர்வு இடமாத் திருந்தக் கொண்டார்; தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்;
பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்; பருப்பதம்   கைக்கொண்டார்; பயங்கள் பண்ணி
இராவணன் என்று அவனைப் பேர் இயம்பக் கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

11
குரா மலர் பாம்பு , பிறை இவற்றைச் சடைமேல் கொண்டவரும் , நந்தீசனைக் குடமுழா வாசிப்பவனாகக் கொண்ட வரும் , சிராமலையைத் தாம் சேர்வதற்குத் திருந்த அமைந்த இடமாகக் கொண்டவரும் , தென்றலைத் தனது நெடிய தேராகக் கொண்ட மன்மதன் அழியச் சினத்தைக் கொண்டவரும் , பராபரன் என்பது தம் பெயராக அமையக் கொண்டவரும் , மேருமலையை வில்லாகக் கையில் கொண்டவரும் , பயங்கள் பலவற்றை உண்டாக்கி இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமா னார் என் துன்பந்தரும் நோய்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருத்தாண்டகம்
6.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   அப்பன் நீ, அம்மை நீ,
Tune - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
6.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
Tune - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000