சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.006   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவெண்காடு - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=3EHC8lAB16w   Add audio link Add Audio

படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,
அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்;
மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

1
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து , பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி , பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு , அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர் ; கூற்றுவனை முன்னர்க் கொன்று , பின்னர் உயிர்ப்பித்து , அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர் ; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும் , தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு , பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என் ?

இழித்து உகந்தீர், முன்னை வேடம்; இமையவர்க்கும் உரைகள் பேணாது,
ஒழித்து உகந்தீர்; நீர் முன் கொண்ட உயர் தவத்தை, அமரர் வேண்ட,
அழிக்க வந்த காமவேளை, அவனுடைய தாதை காண,
விழித்து உகந்த வெற்றி என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

2
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி , அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர் ; ` என்றும் இறவாதபடி காப்பவன் ` என்னும் புகழை விரும்பாது , எல்லாப் பொருள்களையும் அழித் தொழித்து , அதன்பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர் ; அங்ஙனமாக , நீர் முன்பு மேற்கொண்ட , மேலான தவத்தினை , தேவர் வேண்டிக்கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை , அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க . நெற்றிக்கண்ணால் எரித்து , பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது என் ?

படைகள் ஏந்தி, பாரிட(ம்)மும் பாதம் போற்ற, மாதும் நீரும்,
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர்; உண்மை அன்றே!
சடைகள் தாழக் கரணம் இட்டு, தன்மை பேசி, இல் பலிக்கு
விடை அது ஏறி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

3
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , பூதகணங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க . உம் தேவியுடனே . உடையைக் கோவண உடையாக உடுத்துக்கொண்டு , சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர் , இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி , அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் என் ? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர் .

பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்;
கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர்; வான நாடர் மருவி ஏத்த,
விண் உளீராய் நிற்பது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

4
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , விண்ணுலத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற ஆங்கு உள்ளீராய் இருந்தும் , இம் மண்ணுலகத்தில் பண்களாகியும் , அவற்றையுடைய பாட்டுக்களாகியும் , அடியார்களது உள்ளத்தில் நிறைந்தும் , மக்கள் முதலிய உயிர்களின் கண்களாகியும் , உம்மை உள்ளத்தில் நினைபவர் , புறத்தேயும் காணும்படி உருவங் கொண்டும் இருத்தல் என் ?

குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு, தொண்டர் ஏவல் செய்ய,
நடம் எடுத்து ஒன்று ஆடிப் பாடி, நல்குவீர்; நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார் கடல் வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே!.

5
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு வந்து உமக்குப் பணிசெய்ய , நீர் , உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு , மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க நடனத்தை மேற்கொண்டு , ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பந் தருவீர் ; அவ்வாறிருந்தும் , நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது என் ?
Go to top

மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப்
பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி,
வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

6
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற , காட்டில் வாழப்பிறந்த , வலிய களிற்றை உரித்து , அதன் தோலை , விருப்பம் உண்டாகப் போர்த்தீர் ; அன்ன வீரத்தை உடையீராயும் , உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும் , பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து , நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என் ?

காதலாலே கருது தொண்டர் காரணத்தீர் ஆகி நின்றே,
பூதம் பாடப் புரிந்து, நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்;
நீதி ஆக ஏழில் ஓசை நித்தர் ஆகி, சித்தர் சூழ,
வேதம் ஓதித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

7
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று , பூதங்கள் பாட , உலகம் உயர்த்துக்கூறுமாறு , நடனத்தை விரும்பி ஆட வல்லீர் ; அவ்வாறாகவும் , உலகியல் விளங்குதற் பொருட்டு , யோகியர் சூழ , ஏழிசையின்வழி நிலைத்து நின்று , வேதத்தை ஓதித் திரிதல் என் ?

குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை மாதர் கங்கை, நாகம்,
விரவுகின்ற சடை உடையீர்; விருத்தர் ஆனீர்; கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்; பாகம் ஆய மங்கை அஞ்சி
வெருவ, வேழம் செற்றது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

8
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , ` குரா மலர் , கொன்றை மலர் , ஊமத்த மலர் , பிறை , தனங்களையுடைய நங்கையாகிய கங்கை , பாம்பு ` ஆகிய எல்லாம் தலைமயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர் ; யாவர்க்கும் மூத்தீர் ; அங்ஙனமாயினும் , எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு , உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு , யானையை உரித்துப் போர்த்தது என் ?

மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்?
நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய
வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

9
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே , உயர்ந்த மாளிகைகளையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளியுள்ளீர் ; என்றாலும் , பேய்கள் பாடும் காட்டில் ஆடலை உடையீர் ; அதுவன்றியும் , அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக்கொண்ட சான்றிடத்து , அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப் பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது என் ? உம்மையாங்கள் வழிபடுவது எவ்வாறு ?

விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்-
அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .

10
விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற , கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள , யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை , அவனுக்குத் தொண்டனும் , அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு சில வற்றை வினவிச் செய்த , தமிழ்ச்சொற்களாலாகிய மாலை பத்தினையும் , அவன் தெரித்துச் சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர் , கோட்டம் நீங்கிய உணர்வினையுடையராய் . சிவலோகத்தில் இருப்பவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெண்காடு
2.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் காட்டும் நுதலானும், கனல்
Tune - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
Tune - காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
3.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
5.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண் காட்டிப் படிஆய தன்
Tune - திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
6.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் மேனித் தூநீறு
Tune - திருத்தாண்டகம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
7.006   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   படம் கொள் நாகம் சென்னி
Tune - இந்தளம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000