முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான், சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான், மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப் பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .
|
1
|
எல்லார்க்கும் முன்னே உள்ளவனும் , தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும் , யாவரினும் தலையாயவனும் , அழகிய நீலகண்டத்தை உடையவனும் , என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும் , நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய் , எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே . | |
அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்; வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே .
|
2
|
திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ் வடிகளை வணங்கி , முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும் , வெண்மையான பிறையை அணிந்தவனும் , வெள்ளிய மழுவை ஏந்தியவனும் , பகைவர்மேல் விரைதல் பொருந்திய , ஒளியை யுடைய மூவிலை வேலை ( சூலத்தை ) உடைய , ` பண்டரங்கம் ` என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந் தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே . | |
ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து, வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று, பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே .
|
3
|
அன்புடையவர்களே , அன்புக் கூத்தினை ஆடுங் கள் ; தொண்டராய் உள்ளவர்களே , சிவபெருமானது திருவடிக்கு ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள் ; பத்தராய் உள்ளவர்களே , உம்மவரோடு எம் மவரும் சூழ ஒன்று கூடி , மனம் மெலிதற்குக் காரணமான இல் வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று , திருப்பழமண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள் . | |
அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூ எயிலும் கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல் நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்- படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .
|
4
|
உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும் , வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும் , நரி உமிழ்ந்த எச்சிலாகிய , வெண்மையான , அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே . | |
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான், அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே .
|
5
|
தொண்டர்களே , உமையை ஒரு கூறில் உடையவனும் , தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும் , அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும் , கொல்லுதல் பொருந்திய ஒளியை யுடைய முத்தலை வேலை ( சூலத்தை ) ஏந்திய , தாமரை மலர்போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள் . | |
| Go to top |
செடி படத் தீ விளைத்தான், சிலை ஆர் மதில்; செம் புனம் சேர் கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏறக் கொண்டான்; கடியவன் காலன் தன்னைக் கறுத்தான்; கழல் செம்பவளப்- படியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .
|
6
|
கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத் தீயை எழுவித்தவனும் , நல்ல புனங்களில் மேய்வதாகிய , தனது கொடியிற் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை ஏறுதற்கு ஊர்தியாகவும் கொண்டவனும் , பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவனும் , செவ்விய பவளம் போலும் திருமேனியை உடையவனும் , பாசுபத வேடத்தனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப் பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே . | |
கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற, விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப் படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே.
|
7
|
அரக்கனும் , தேரைச் செலுத்திக்கொண்டு சென்று , அதனைத் தடுத்தலால் சினங்கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை எடுத்தவனும் ஆகிய இராவணனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தியிருந்து அலறும்படி ஆக்கியவனும் , பின்பு அவன் கை நரம்பாகிய வீணையால் வேதத்தொடு கூடிய இசைகளைப் பாட , அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும் , பால் போலும் வெள்ளிய திருநீற்றை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே . | |
திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்; அரியவன்; அட்ட புட்பம்(ம்) அவை கொண்டு அடி போற்றி, நல்ல கரியவன் நான்முகனும்(ம்), அடியும் முடி காண்பு அரிய பரியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .
|
8
|
இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும் , தேவர்கட்குத் தலைவனும் , அடைதற்கு அன்புடைய திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காணமாட்டாத அளவிறந்தவனும் , பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே . | |
வெற்று அரைக் கற்ற(அ)மணும், விரையாது வெண் தாலம் உண்ணும் துற்றரை, துற்று அறுப்பான் துன்ன ஆடைத் தொழில் உடையீர்! பெற்றரைப் பித்தர் என்று(க்) கருதேன்மின்! படிக்கரையுள் பற்றரைப் பற்றி நின்று(ப்) பழி பாவங்கள் தீர்மின்களே! .
|
9
|
மிகுந்த பற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடையில்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்திலே மனம் விரையாது நீங்கி , கீளொடு பிணைத்தலை உடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே , நஞ்சினை உண்ணும் உணவுடையவரும் , எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை அதுபோல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள் ; திருப்பழமண்ணிப்படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றிநின்று , பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள் . | |
பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ் சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும், எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .
|
10
|
பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரையுடைய , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலத்தை , அக இதழ்களை யுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும் , நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும் , அவரைச் சார்ந்து உற்றார்க்கும் , அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை . | |
| Go to top |