செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், அடியான்; ஆவா! எனாது ஒழிதல் தகவு ஆமே? முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .
|
1
|
திருமுடியின் மேல் , பெருமை பொருந்திய பிறையும் , பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர் , குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும் , ` அந்தோ ! இவன் நம் அடியவன் !` என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில் , வாளா இருத்தல் தகுதியாகுமோ ! | |
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால், அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி, இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும் கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! .
|
2
|
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே , நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால் , அங்கே வந்து என்னோடு கூடி நின்று , என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன் . | |
ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச் செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே!.
|
3
|
குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய் ; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும் , நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய் ; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய் ; அதனால் , அவ்விடம் கரிதாயினாய் ; இவை உன் அருட்செயல்கள் . | |
சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர் அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்; விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்; கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
|
4
|
கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , வண்டுகள் ஒலிக் கின்ற , அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி , பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன் ; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன் ; இஃது என் உணர்விருந்தவாறு . | |
ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித் தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய் கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின் கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! .
|
5
|
நீர்ச் சுழிகளை , அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே , நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின் . என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய் ; பின் அது காரணமாக , என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய் ; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய் ; பின் அது காரணமாக , என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய் ; உன்னை ` இவ்வாறு செய்க ` எனக் கட்டளையிடுவார் யார் ? | |
| Go to top |
ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்; போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற; காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக, பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .
|
6
|
அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது , புகழையுடைய திருக்கழிப்பாலையே . | |
பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்- உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே! எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும் கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .
|
7
|
உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே , தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே . குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளி யிருப்பவனே , நீ முன்புயானையின் தோலைப் போர்வையாக விரும்பி , பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய் ; முப்புரங்களையும் எரித்தாய் ; இவை உனது வீரச் செயல்கள் . | |
படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா! உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்; அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய; கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
|
8
|
விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே , உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே , கடலைச் சார்ந்த , கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , நீ , உலகம் எல்லாவற்றையும் படைத்தாய் ; தக்கனது வேள்வியை அழித்தாய் ; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய் ; இவை உன் வல்லமைகள் ! | |
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான், செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான், மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே .
|
9
|
பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும் , செம்மை நிறமுடைய பிரமனும் , கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக் கழிப்பாலையையே விரும்பி , மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான் . | |
பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி, கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை, தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .
|
10
|
பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும் , யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை , அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள் , தேவர் உலகத்தை ஆள்பவராவர் . | |
| Go to top |