திருவாரூர் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி வன்றொண்டர் சங்கிலியாரோடு மகிழ்ந்துறையும் அந்நாளில் தென்றற் காற்றுத் திருவொற்றியூரில் வந்து உலாவிற்று. தென்றல் வீசக் கண்டதும் திருவாரூரில் தியாகேசப் பெருமான் வசந்த காலத்து எழுந்தருளிவரும் காட்சியும் அக்காட்சியைக் கண்டு பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதும் சுந்தரர் தம் எண்ணத்திரையில் உலா வந்தன. புற்றிடங் கொண்டாரையும் தம்மை விரும்பும் அடியார்களையும் மறந்திருந்தேனே என்று மனமயங்கி, ஆரூர்ப்பெருமானை எண்ணிப் பிரிவாற்றாமையினால், பத்திமையும் அடிமையையும் என்று திருப்பதிகம் தொடங்கி, எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனை என்ற குறிப்புடன் பதிகம் பாடினார்.
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்; முத்தனை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன் எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
பாவியும் , மூடனும் ஆகிய யான் , என் அன்பையும் , அடிமையையும் விட்டொழியும்படி , முத்தும் , சிறந்த மாணிக்கமும் , வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன் ! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன் ; ஆதலின் இங்கு இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆகச் செவ்வணம் ஆம் திரு நயனம் விழி செய்த சிவமூர்த்தி, மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை, எவ் வணம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற , வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு , செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய , கருமை பொருந்திய கண்டத்தையும் , நீண்ட சடையினையும் உடைய , எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச்சென்று அவனை வணங்குவேன் .
சங்கு அலக்கும் தடங்கடல் வாய் விடம் சுட வந்து அமரர் தொழ, அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை, இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான் , தேவர் , சங்குகள் விளங்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகாலவிடம் தம்மைச் சுடுகை யினாலே அடைக்கலமாக வந்து வணங்க , அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி , அவ்விடத்தை உண்டு , அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து , எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
இங்ஙனம் வந்து இடர்ப் பிறவிப் பிறந்து அயர்வேன்; அயராமே அங்ஙனம் வந்து எனை ஆண்ட அரு மருந்து, என் ஆரமுதை, வெங்கனல் மா மேனியனை, மான் மருவும் கையானை, எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
இவ்வுலகில் வந்து , துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான் , அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும் , அமுதும் போல்பவனும் , வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும் , மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
செப்ப(அ)ரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய அப் பெரிய திருவினையே, அறியாதே அரு வினையேன்- ஒப்பு அரிய குணத்தானை, இணை இலியை, அணைவு இன்றி எப் பரிசு பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான் , சொல்லுதற்கரிய பெருமையையுடைய , ` பிரமதேவனும் , திருமாலும் ` என்னும் அவர்தாமும் நினைத்தற்கும் , காண்பதற்கும் அரிய அத் தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும் , பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களை யுடையவனும் , பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும் , அடைதலும் இன்றிப் பிரிந்து , எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
வல்-நாகம் நாண், வரை வில், அங்கி கணை, அரி பகழி, தன் ஆகம் உற வாங்கிப் புரம் எரித்த தன்மையனை, முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து என் ஆகப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
வலிய பாம்பு நாணியும் , மலை வில்லும் , திருமால் அம்பும் , அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான் , அவனைப் பிரிந்து , என்னாவதற்கு இவ் வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
வன் சயம் ஆய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி தனை, மின் செயும் வார்சடையானை, விடையானை, அடைவு இன்றி என் செய நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன்மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும்படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து , பின்பு எழுப்பிய மூர்த்தியும் , மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும் , விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப்பிரிந்து , நான் , என் செய்வதற்கு இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
முன் நெறி வானவர் கூடித் தொழுது ஏத்தும் முழு முதலை, அந் நெறியை, அமரர் தொழும் நாயகனை, அடியார்கள் செந் நெறியை, தேவர் குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம் நான் என் அறிவான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறி யாய் உள்ள பிரமனும் , மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழு முதற் பொருளானவனும் , அப்பொருளை அடையும் நெறியாய் உள்ள வனும் , ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும் , எல்லாத் தேவருள் ளும் சிறந்த தேவனும் , தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து , நான் , எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத் திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
கற்று உள வான் கனி ஆய கண்ணுதலை, கருத்து ஆர உற்று உளன் ஆம் ஒருவனை, முன் இருவர் நினைந்து இனிது ஏத்தப்- பெற்றுளன் ஆம் பெருமையனை, பெரிது அடியேன் கை அகன்றிட்டு எற்று உளனாய்ப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற , கண்ணையுடைய நெற்றியையுடையவனும் , என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும் , முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை , அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து , எதன்பொருட்டு இறவாது உள்ளேனாய் , இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
ஏழ் இசை ஆய், இசைப் பயன் ஆய், இன் அமுது ஆய், என்னுடைய தோழனும் ஆய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி, மாழை ஒண் கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதி இல்லா ஏழையேன் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
ஏழிசைகளைப் போன்றும் , அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும் , இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து , அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி , யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு , மாவடுவின் வகிர்போலும் , ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை , அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
வங்கம் மலி கடல் நஞ்சை, வானவர்கள் தாம் உய்ய, நுங்கி, அமுது அவர்க்கு அருளி, நொய்யேனைப் பொருள் படுத்துச் சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை, சழக்கனேன் எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
தேவர்கள் பிழைத்தற்பொருட்டு , மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு , அமுதத்தை அவர்கட்கு அருளினவனும் , சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி , என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறை வனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .
பேர் ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர் தம் சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன், அடியே திறம் விரும்பி ஆரூரன்-அடித்தொண்டன், அடியன்-சொல் அகலிடத்தில் ஊர் ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே.
செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திரு வடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி , புகழ்மிகுந்த மத யானையின் தோலையுடைய அவனை , அவன் அடித்தொண்டனாகிய , இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர் , உலகர் எல்லார்க்கும் மேலானவராவர் .