வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக் கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தண னைத்தொழுவார் அவல மறுப்பாரே.
|
1
|
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம் மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக் குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
|
2
|
பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக்கை நல்ல ஏல மலர்க்குழலா ளொருபாக மமர்ந்தருளிக் கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.
|
3
|
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பி னண்ணும் காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச் சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.
|
4
|
பொன்றிக ழாமையொடு புரிநூல் திகழ்மார்பி னல்ல பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக் குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில் மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.
|
5
|
Go to top |
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.
|
6
|
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை வாட லுடைதலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க் கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.
|
7
|
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக் கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய தத்துவ னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
|
8
|
செம்பொனின் மேனியனாம் பிரமன்றிரு மாலுந்தேட நின்ற அம்பவ ளத்திரள்போ லொளியாய வாதிபிரான் கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய நம்பன தாடொழுவார் வினையாய நாசமே.
|
9
|
போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல் ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள் கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற வேதிய னைத்தொழநும் வினையான வீடுமே.
|
10
|
Go to top |
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணும் தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன் கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும் நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே.
|
11
|