அன்றினார் புரம் எரித்தார்க்
காலயம் எடுக்க எண்ணி
ஒன்றுமங் குதவா தாக
உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்றென மனத்தி னாலே
நல்லஆ லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூசலார்தம் நினை
வினை யுரைக்க லுற்றாம்.
|
1
|
உலகினில் ஒழுக்கம் என்றும்
உயர்பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க
நான்மறை விளங்கும் மூதூர்
குலமுதற் சீலமென்றுங் குறை
விலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி
நிகழ்திரு நின்ற வூராம்.
|
2
|
அருமறை மரபு வாழ
அப்பதி வந்து சிந்தை
தரும்உணர் வான வெல்லாந்
தம்பிரான் கழல்மேற் சார
வருநெறி மாறா அன்பு
வளர்ந்து எழ வாய்மைப்
பொருள்பெறு வேத நீதிக்
கலையுணர் பொலிவின் மிக்கார்.
|
3
|
அடுப்பது சிவன்பால் அன்பர்க்
காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி
அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர்
மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார்
இருநிதி இன்மை யெண்ணார்.
|
4
|
மனத்தினால் கருதி எங்கும்
மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பே றின்றி
என்செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
நிகழ்வுறு நிதிய மெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச்
சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
|
5
|
| Go to top |
சாதனத் தோடு தச்சர்
தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக் கால யஞ்செய்
நலம்பெறும் நன்னாள் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால்
அடிநிலை பாரித் தன்பால்
காதலில் கங்குற் போதுங்
கண்படா தெடுக்க லுற்றார்.
|
6
|
அடிமுதல் உபான மாதி
யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற
மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும்
முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில்
நிரம்பிட நினைவால் செய்தார்.
|
7
|
தூபியும் நட்டு மிக்க
சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு
கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும்
வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க
விதித்தநாள் சாரும் நாளில்.
|
8
|
காடவர் கோமான் கச்சிக்
கற்றளி எடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப்
பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியா தாரைத்
தாபிக்கும் அந்நாள் முன்னால்
ஏடலர் கொன்றை வேய்ந்தார்
இரவிடைக் கனவில் எய்தி.
|
9
|
நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து
நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்.
|
10
|
| Go to top |
தொண்டரை விளக்கத் தூயோன்
அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத்
திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும்
என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த
நின்றவூர் வந்து சார்ந்தான்.
|
11
|
அப்பதி யணைந்து பூசல்
அன்பரிங் கமைத்த கோயில்
எப்புடை யதுஎன் றுஅங்கண்
எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில்
செய்ததொன் றில்லை யென்றார்
மெய்ப்பெரு மறையோர் எல்லாம்
வருகஎன் றுரைத்தான் வேந்தன்.
|
12
|
பூசுர ரெல்லாம் வந்து
புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூச லார்தாம்
ஆரென மறையோ ரெல்லாம்
ஆசில்வே தியன்இவ் வூரான்
என்றவ ரழைக்க வொட்டா
தீசனார் அன்பர் தம்பால்
எய்தினான் வெய்ய வேலான்.
|
13
|
தொண்டரைச் சென்று கண்ட
மன்னவன் தொழுது நீர்இங்கு
எண்திசை யோரும் ஏத்த
எடுத்தஆ லயந்தான் யாதிங்கு
அண்டர்நா யகரைத் தாபித்
தருளும்நாள் இன்றென்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன்
கண்ணுதல் அருள்பெற் றென்றான்.
|
14
|
மன்னவன் உரைப்பக் கேட்ட
அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்
தெடுத்தவா றெடுத்துச் சொன்னார்.
|
15
|
| Go to top |
அரசனும் அதனைக் கேட்டங்
கதிசய மெய்தி என்னே
புரையறு சிந்தை யன்பர்
பெருமையென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ
நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு
மீண்டுதன் மூதூர் புக்கான்.
|
16
|
அன்பரும் அமைத்த சிந்தை
ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத்
தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம்
பெருமையிற் பலநாள் பேணிப்
பொன்புனை மன்று ளாடும்
பொற்கழல் நீழல் புக்கார்.
|
17
|
நீண்டசெஞ் சடையி னார்க்கு
நினைப்பினாற் கோயி லாக்கிப்
பூண்டஅன்பு இடைய றாத
பூசலார் பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான்
உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவி யார்தம்
பாதங்கள் பரவ லுற்றேன்.
|
18
|