வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே.
|
1
|
துன்னங்கொண்ட வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான் மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர் அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே.
|
2
|
உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந் துண்பதுங் கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே.
|
3
|
காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.
|
4
|
போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.
|
5
|
Go to top |
தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை அரிந்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே.
|
6
|
ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே.
|
7
|
செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம் ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம் அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.
|
8
|
சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.
|
9
|
செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச் சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.
|
10
|
Go to top |
ஞாலம் மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள் சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே.
|
11
|