விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறிவொண்ணா மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே
|
1
|
அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப் பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார் பறையுஞ்சங் கொலியோவாப் படிறன்றன் பனங்காட்டூர் உறையுமெங் கள்பிரானை உணராதார் உணர்வென்னே
|
2
|
தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக் கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்து மடியார்கள் பண்ணார்பா டலறாத படிறன்றன் பனங்காட்டூர் பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே
|
3
|
நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக் குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப் பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப் பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே
|
4
|
உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச் சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை வரமுன்னம்அருள்செய்வான் வன்பார்த்தான்பனங்காட்டூர்ப் பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே
|
5
|
Go to top |
எயிலார்பொக் கம்மெரித்த எண்டோள்முக் கண்ணிறைவன் வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ யெனநின்றான் மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே
|
6
|
மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன் கையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான் பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர் ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே
|
7
|
வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப் பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே
|
8
|
மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம் உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப் பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே
|
9
|
பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச் சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் னடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல் ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே
|
10
|
Go to top |