![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://sivaya.org/audio/7.092 Etraal Marakkaen.mp3 https://www.youtube.com/watch?v=s_4KMZXZ-Bw Add audio link
7.092
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருப்புக்கொளியூர் (அவிநாசி) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு பெருங்கருணைநாயகி உடனுறை அருள்மிகு அவிநாசியப்பர் திருவடிகள் போற்றி
திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து, கொங்குநாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார். அதுகேட்ட வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினர். ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப்பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. இவர்கள் வீட்டில் எழும் மங்கல ஒலி முதலை வாயில் அகப்பட்டிறந்த சிறுவனுடைய பெற்றோர்க்கு, புதல்வனை நினைப்பித்தமையால் அவர்கள் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்ட சுந்தரர் வேதனைகொண்டார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரர் வருகையை அறிந்து முகமலர்ச்சியோடு வரவேற்றனர். இவர்கள் புதல்வனை முதலைவாயினின்று அழைத்துத் தந்த பின்னரே அவிநாசிப் பெரு மானை வழிபடவேண்டுமென்று உறுதிகொண்டார். அம் மடு இருக்கு மிடத்தைக் கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டுவந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி, எற்றான் மறக்கேன் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார். உரைப்பார் உரை என்னும் நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றுள் புதல்வன் உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சி யுடையதாகச் செய்து புகுத்தினன். முதலை கரையிலே வந்து தான் முன் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவியெடுத்தாள். தாயும் தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினர். இந் நிகழ்ச்சியைக் கண்டோர் அனைவரும் திரு வருள் திறத்தை வியந்தனர். சுந்தரர் சிறுவனை அவிநாசித் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவரைத் தொழுது வேதியர் வீட்டிற்கு வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உபநயனம் செய்வித் தருளினார்
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே
1
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே
2
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே
3
உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
4
அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி யூர்அவி னாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே
5
Go to top
நாத்தா னும்உனைப் பாடல்அன் றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூர்அவி னாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே
6
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலம்புட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூர்அவி னாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே
7
பேணா தொழிந்தேன் உன்னைஅல் லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே
8
நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே
9
நீரேற ஏறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7.092
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
Tune - குறிஞ்சி
(திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர் பெருங்கருணைநாயகி)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000