சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.020   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

வேதியர் தில்லை மூதூர்
வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி
மன்னுசிற் றம்ப லத்தே
ஆதியும் முடிவும் இல்லா
அற்புதத் தனிக்கூத் தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி
வழிபடும் நலத்தின் மிக்கார்.
1

பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்.
2

அளவிலா மரபின் வாழ்க்கை
மட்கலம் அமுதுக் காக்கி
வளரிளந் திங்கட் கண்ணி
மன்றுளார் அடியார்க் கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க
ஓடளித் தொழுகு நாளில்
இளமைமீ தூர இன்பத்
துறையினில் எளிய ரானார்.
3

அவர்தங்கண் மனைவி யாரும்
அருந்ததிக் கற்பின் மிக்கார்
புவனங்க ளுய்ய ஐயர்
பொங்குநஞ் சுண்ண யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத்
தகைந்துதான் தரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத்
திருநீல கண்ட மென்பார்.
4

ஆனதங் கேள்வர் அங்கோர்
பரத்தைபா லணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த
ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய வெல்லாஞ் செய்தே
உடனுறைவு இசையா ரானார்
தேனலர் கமலப் போதில்
திருவினு முருவின் மிக்கார்.
5
Go to top

மூண்டவப் புலவி தீர்க்க
அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல்
பொற்கொடி யனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி
மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீ ராயின் எம்மைத்
திருநீல கண்ட மென்றார்.
6

ஆதியார் நீல கண்டத்
தளவுதாங் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட
பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி
எம்மைஎன் றதனால் மற்றை
மாதரார் தமையும் என்றன்
மனத்தினுந் தீண்டேன் என்றார்.
7

கற்புறு மனைவி யாரும்
கணவனார்க் கான வெல்லாம்
பொற்புற மெய்யு றாமற்
பொருந்துவ போற்றிச் செய்ய
இற்புறம் பொழியா தங்கண்
இருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை
அயலறி யாமை வாழ்ந்தார்.
8

இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.
9

இந்நெறி யொழுகு நாளில்
எரிதளிர்த் தென்ன நீண்ட
மின்னொளிர் சடையோன்
தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று
ஞாலத்தோர் விரும்பி உய்யும்
அந்நெறி காட்டு மாற்றால்
அருட்சிவ யோகி யாகி.
10
Go to top

கீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா
வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்.
11

நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங்கதிர் முறுவல்வெண் ணிலவும் மேம்பட
இடும்பலிப் பாத்திர மேந்து கையராய்
நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.

12

நண்ணிய தவச்சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காத லன்பர்தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றிசெய்
தெண்ணிய உவகையால் எதிர்கொண் டேத்தினார்.
13

பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று
உறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.
14

எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.
15
Go to top

தன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்
துன்னிய யாவையுந் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்னதன் மையதிது வாங்கு நீயென.
16

தொல்லைவேட் கோவர்தங் குலத்துள் தோன்றிய
மல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.
17

வைத்தபின் மறையவ ராகி வந்தருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்
அத்தர்தாம் அம்பல மணைய மேவினார்.
18

சாலநாள் கழிந்த பின்பு
தலைவனார் தாமுன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக்
குறியிடத் தகலப் போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந்
திருந்துவேட் கோவர் தம்பால்
வாலிதாம் நிலைமை காட்ட
முன்புபோல் மனையில் வந்தார்.
19

வந்தபின் தொண்ட னாரும்
எதிர்வழி பாடு செய்து
சிந்தைசெய் தருளிற் றெங்கள்
செய்தவ மென்று நிற்ப
முந்தைநா ளுன்பால் வைத்த
மொய்யொளி விளங்கும் ஓடு
தந்துநில் என்றான் எல்லாந்
தான்வைத்து வாங்க வல்லான்.
20
Go to top

என்றவர் விரைந்து கூற
இருந்தவர் ஈந்த ஓடு
சென்றுமுன் கொணர்வான் புக்கார்
கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார்
நேடியுங் காணார் மாயை
ஒன்றுமங் கறிந்தி லார்தாம் 
உரைப்பதொன் றின்றி நின்றார்.
21

மறையவ னாகி நின்ற
மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற
ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்
தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக்
கைதொழு துரைக்க லுற்றார்.
22

இழையணி முந்நூன் மார்பின்
எந்தைநீர் தந்து போன
விழைதரும் ஓடு வைத்த
வேறிடந் தேடிக் காணேன்
பழையமற் றதனில் நல்ல
பாத்திரந் தருவன் கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும்
பெருமவென் றிறைஞ்சி நின்றார்.
23

சென்னியால் வணங்கி நின்ற
தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்த வாநீ
யான்வைத்த மண்ணோ டன்றிப்

பொன்னினா லமைத்துத் தந்தாய்
ஆயினுங் கொள்ளேன் போற்ற முன்னைநான் வைத்த வோடே
கொண்டுவா வென்றான் முன்னோன்.
24

கேடிலாப் பெரியோய் என்பால்
வைத்தது கெடுத லாலே
நாடியுங் காணேன் வேறு
நல்லதோர் ஓடு சால
நீடுசெல் வதுதா னொன்று
தருகின்றேன் எனவுங் கொள்ளாது
ஊடிநின் றுரைத்த தென்றன்
உணர்வெலா மொழித்த தென்ன.
25
Go to top

ஆவதென் நின்பால் வைத்த
அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து
பழிக்குநீ யொன்றும் நாணாய்
யாவருங் காண உன்னை
வளைத்துநான் கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே னென்றான்
புண்ணியப் பொருளாய் நின்றான்.

26

வளத்தினான் மிக்க ஓடு
வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினுங் களவி லாமைக்
கென்செய்கேன் உரையு மென்னக்
களத்துநஞ் சொளித்து நின்றான்
காதலுன் மகனைப் பற்றிக்
குளத்தினின் மூழ்கிப் போவென்
றருளினான் கொடுமை யில்லான்.
27

ஐயர்நீ ரருளிச் செய்த
வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை
என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க
மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு 
மூழ்குவாய் எனமொ ழிந்தார்.
28

கங்கைநதி கரந்தசடை
கரந்தருளி யெதிர்நின்ற
வெங்கண்விடை யவர்அருள
வேட்கோவ ருரைசெய்வார்
எங்களிலோர் சபதத்தால்
உடன்மூழ்க இசைவில்லை
பொங்குபுனல் யான்மூழ்கித்
தருகின்றேன் போதுமென.
29

தந்ததுமுன் தாராதே
கொள்ளாமைக் குன்மனைவி
அந்தளிர்ச்செங் கைப்பற்றி
அலைபுனலின் மூழ்காதே
சிந்தைவலித் திருக்கின்றாய்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த பேரவையில்
மன்னுவன்யா னெனச்சொன்னார்.
30
Go to top

நல்லொழுக்கந் தலைநின்றார்
நான்மறையின் துறைபோனார்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த திருந்தவையில்
எல்லையிலான் முன்செல்ல
இருந்தொண்ட ரவர்தாமும்
மல்குபெருங் காதலினால்
வழக்கின்மே லிட்டணைந்தார்.
31

அந்தணனாம் எந்தைபிரான்
அருமறையோர் முன்பகர்வான்
இந்தவேட் கோவன்பால்
யான்வைத்த பாத்திரத்தைத்
தந்தொழியான் கெடுத்தானேல்
தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான்
வலிசெய்கின் றான்என்றார்.

32

நறைகமழுஞ் சடைமுடியும்
நாற்றோளும் முக்கண்ணும்
கறைமருவுந் திருமிடறுங்
கரந்தருளி எழுந்தருளும்
மறையவனித் திறமொழிய
மாமறையோர் உரைசெய்வார்
நிறையுடைய வேட்கோவர்
நீர்மொழியும் புகுந்ததென.
33

நீணிதியாம் இதுவென்று
நின்றவிவர் தருமோடு
பேணிநான் வைத்தவிடம்
பெயர்ந்துகரந் ததுகாணேன்
பூணணிநூன் மணிமார்பீர்
புகுந்தபரி சிதுவென்று
சேணிடையுந் தீங்கடையாத்
திருத்தொண்டர் உரைசெய்தார்.

34

திருவுடை யந்த ணாளர்
செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை யிவர்தாம் வைத்த
வோட்டினைக் கெடுத்தீ ரானால்
தருமிவர் குளத்தின் மூழ்கித்
தருகவென் றுரைத்தா ராகில்
மருவிய மனைவி யோடு
மூழ்குதல் வழக்கே யென்றார்.
35
Go to top

அருந்தவத் தொண்டர் தாமும்
அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத்
தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித்
தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும்
பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.
36

மனைவியார் தம்மைக் கொண்டு
மறைச்சிவ யோகி யார்முன்
சினவிடைப் பாகர் மேவுந்
திருப்புலீச் சுரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி
நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின்
இருதலை பிடித்துப் புக்கார்.
37

தண்டிரு தலையும் பற்றிப்
புகுமவர் தம்மை நோக்கி
வெண்டிரு நீற்று முண்ட
வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டுடன் மூழ்கீ ரென்னக்
கூடாமை பாரோர் கேட்கப்
பண்டுதஞ் செய்கை சொல்லி
மூழ்கினார் பழுதி லாதார்.
38

வாவியின் மூழ்கி ஏறுங்
கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி
விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமுஞ்
சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின்மா மழையின் மீள
மூழ்குவார் போன்று தோன்ற.
39

அந்நிலை யவரைக் காணும்
அதிசயங் கண்டா ரெல்லாம்
முன்னிலை நின்ற வேத
முதல்வரைக் கண்டா ரில்லை
இந்நிலை இருந்த வண்ணம்
என்னென மருண்டு நின்றார்
துன்னிய விசும்பி னூடு
துணையுடன் விடைமேற் கண்டார்.
40
Go to top

கண்டனர் கைக ளாரத்
தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தி னார்கள்
அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி
விடையின்மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந்
தொழுதுடன் போற்றி நின்றார்.
41

மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
42

விறலுடைத் தொண்ட னாரும்
வெண்ணகைச் செவ்வாய் மென்றோள்
அறலியற் கூந்த லாராம்
மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து
சிவலோக மதனை யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப்
பேரின்பம் உற்றா ரன்றே.
43

அயலறி யாத வண்ணம்
அண்ணலா ராணை யுய்த்த
மயலில்சீர்த் தொண்ட னாரை
யானறி வகையால் வாழ்த்திப்
புயல்வளர் மாட நீடும்
பூம்புகார் வணிகர் பொய்யில்
செயலியற் பகையார் செய்த
திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
44

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000