வேதியர் தில்லை மூதூர்
வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி
மன்னுசிற் றம்ப லத்தே
ஆதியும் முடிவும் இல்லா
அற்புதத் தனிக்கூத் தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி
வழிபடும் நலத்தின் மிக்கார்.
|
1
|
பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்.
|
2
|
அளவிலா மரபின் வாழ்க்கை
மட்கலம் அமுதுக் காக்கி
வளரிளந் திங்கட் கண்ணி
மன்றுளார் அடியார்க் கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க
ஓடளித் தொழுகு நாளில்
இளமைமீ தூர இன்பத்
துறையினில் எளிய ரானார்.
|
3
|
அவர்தங்கண் மனைவி யாரும்
அருந்ததிக் கற்பின் மிக்கார்
புவனங்க ளுய்ய ஐயர்
பொங்குநஞ் சுண்ண யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத்
தகைந்துதான் தரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத்
திருநீல கண்ட மென்பார்.
|
4
|
ஆனதங் கேள்வர் அங்கோர்
பரத்தைபா லணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த
ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய வெல்லாஞ் செய்தே
உடனுறைவு இசையா ரானார்
தேனலர் கமலப் போதில்
திருவினு முருவின் மிக்கார்.
|
5
|
| Go to top |
மூண்டவப் புலவி தீர்க்க
அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல்
பொற்கொடி யனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி
மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீ ராயின் எம்மைத்
திருநீல கண்ட மென்றார்.
|
6
|
ஆதியார் நீல கண்டத்
தளவுதாங் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட
பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி
எம்மைஎன் றதனால் மற்றை
மாதரார் தமையும் என்றன்
மனத்தினுந் தீண்டேன் என்றார்.
|
7
|
கற்புறு மனைவி யாரும்
கணவனார்க் கான வெல்லாம்
பொற்புற மெய்யு றாமற்
பொருந்துவ போற்றிச் செய்ய
இற்புறம் பொழியா தங்கண்
இருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை
அயலறி யாமை வாழ்ந்தார்.
|
8
|
இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.
|
9
|
இந்நெறி யொழுகு நாளில்
எரிதளிர்த் தென்ன நீண்ட
மின்னொளிர் சடையோன்
தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று
ஞாலத்தோர் விரும்பி உய்யும்
அந்நெறி காட்டு மாற்றால்
அருட்சிவ யோகி யாகி.
|
10
|
| Go to top |
கீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா
வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்.
|
11
|
நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங்கதிர் முறுவல்வெண் ணிலவும் மேம்பட
இடும்பலிப் பாத்திர மேந்து கையராய்
நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.
|
12
|
நண்ணிய தவச்சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காத லன்பர்தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றிசெய்
தெண்ணிய உவகையால் எதிர்கொண் டேத்தினார்.
|
13
|
பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று
உறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.
|
14
|
எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.
|
15
|
| Go to top |
தன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்
துன்னிய யாவையுந் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்னதன் மையதிது வாங்கு நீயென.
|
16
|
தொல்லைவேட் கோவர்தங் குலத்துள் தோன்றிய
மல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.
|
17
|
வைத்தபின் மறையவ ராகி வந்தருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்
அத்தர்தாம் அம்பல மணைய மேவினார்.
|
18
|
சாலநாள் கழிந்த பின்பு
தலைவனார் தாமுன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக்
குறியிடத் தகலப் போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந்
திருந்துவேட் கோவர் தம்பால்
வாலிதாம் நிலைமை காட்ட
முன்புபோல் மனையில் வந்தார்.
|
19
|
வந்தபின் தொண்ட னாரும்
எதிர்வழி பாடு செய்து
சிந்தைசெய் தருளிற் றெங்கள்
செய்தவ மென்று நிற்ப
முந்தைநா ளுன்பால் வைத்த
மொய்யொளி விளங்கும் ஓடு
தந்துநில் என்றான் எல்லாந்
தான்வைத்து வாங்க வல்லான்.
|
20
|
| Go to top |
என்றவர் விரைந்து கூற
இருந்தவர் ஈந்த ஓடு
சென்றுமுன் கொணர்வான் புக்கார்
கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார்
நேடியுங் காணார் மாயை
ஒன்றுமங் கறிந்தி லார்தாம் உரைப்பதொன் றின்றி நின்றார்.
|
21
|
மறையவ னாகி நின்ற
மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற
ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்
தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக்
கைதொழு துரைக்க லுற்றார்.
|
22
|
இழையணி முந்நூன் மார்பின்
எந்தைநீர் தந்து போன
விழைதரும் ஓடு வைத்த
வேறிடந் தேடிக் காணேன்
பழையமற் றதனில் நல்ல பாத்திரந் தருவன் கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும்
பெருமவென் றிறைஞ்சி நின்றார்.
|
23
|
சென்னியால் வணங்கி நின்ற
தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்த வாநீ
யான்வைத்த மண்ணோ டன்றிப்
பொன்னினா லமைத்துத் தந்தாய்
ஆயினுங் கொள்ளேன் போற்ற முன்னைநான் வைத்த வோடே
கொண்டுவா வென்றான் முன்னோன்.
|
24
|
கேடிலாப் பெரியோய் என்பால்
வைத்தது கெடுத லாலே
நாடியுங் காணேன் வேறு
நல்லதோர் ஓடு சால
நீடுசெல் வதுதா னொன்று
தருகின்றேன் எனவுங் கொள்ளாது
ஊடிநின் றுரைத்த தென்றன்
உணர்வெலா மொழித்த தென்ன.
|
25
|
| Go to top |
ஆவதென் நின்பால் வைத்த
அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து
பழிக்குநீ யொன்றும் நாணாய்
யாவருங் காண உன்னை
வளைத்துநான் கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே னென்றான்
புண்ணியப் பொருளாய் நின்றான்.
|
26
|
வளத்தினான் மிக்க ஓடு
வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினுங் களவி லாமைக்
கென்செய்கேன் உரையு மென்னக்
களத்துநஞ் சொளித்து நின்றான்
காதலுன் மகனைப் பற்றிக்
குளத்தினின் மூழ்கிப் போவென்
றருளினான் கொடுமை யில்லான்.
|
27
|
ஐயர்நீ ரருளிச் செய்த
வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை
என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க
மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு மூழ்குவாய் எனமொ ழிந்தார்.
|
28
|
கங்கைநதி கரந்தசடை
கரந்தருளி யெதிர்நின்ற
வெங்கண்விடை யவர்அருள
வேட்கோவ ருரைசெய்வார்
எங்களிலோர் சபதத்தால்
உடன்மூழ்க இசைவில்லை
பொங்குபுனல் யான்மூழ்கித்
தருகின்றேன் போதுமென.
|
29
|
தந்ததுமுன் தாராதே
கொள்ளாமைக் குன்மனைவி
அந்தளிர்ச்செங் கைப்பற்றி
அலைபுனலின் மூழ்காதே
சிந்தைவலித் திருக்கின்றாய்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த பேரவையில்
மன்னுவன்யா னெனச்சொன்னார்.
|
30
|
| Go to top |
நல்லொழுக்கந் தலைநின்றார்
நான்மறையின் துறைபோனார்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த திருந்தவையில்
எல்லையிலான் முன்செல்ல
இருந்தொண்ட ரவர்தாமும்
மல்குபெருங் காதலினால்
வழக்கின்மே லிட்டணைந்தார்.
|
31
|
அந்தணனாம் எந்தைபிரான்
அருமறையோர் முன்பகர்வான்
இந்தவேட் கோவன்பால்
யான்வைத்த பாத்திரத்தைத்
தந்தொழியான் கெடுத்தானேல்
தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான்
வலிசெய்கின் றான்என்றார்.
|
32
|
நறைகமழுஞ் சடைமுடியும்
நாற்றோளும் முக்கண்ணும்
கறைமருவுந் திருமிடறுங்
கரந்தருளி எழுந்தருளும்
மறையவனித் திறமொழிய
மாமறையோர் உரைசெய்வார்
நிறையுடைய வேட்கோவர்
நீர்மொழியும் புகுந்ததென.
|
33
|
நீணிதியாம் இதுவென்று
நின்றவிவர் தருமோடு
பேணிநான் வைத்தவிடம்
பெயர்ந்துகரந் ததுகாணேன்
பூணணிநூன் மணிமார்பீர்
புகுந்தபரி சிதுவென்று
சேணிடையுந் தீங்கடையாத்
திருத்தொண்டர் உரைசெய்தார்.
|
34
|
திருவுடை யந்த ணாளர்
செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை யிவர்தாம் வைத்த
வோட்டினைக் கெடுத்தீ ரானால்
தருமிவர் குளத்தின் மூழ்கித்
தருகவென் றுரைத்தா ராகில்
மருவிய மனைவி யோடு
மூழ்குதல் வழக்கே யென்றார்.
|
35
|
| Go to top |
அருந்தவத் தொண்டர் தாமும்
அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத்
தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித்
தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும்
பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.
|
36
|
மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி யார்முன்
சினவிடைப் பாகர் மேவுந்
திருப்புலீச் சுரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி
நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின்
இருதலை பிடித்துப் புக்கார்.
|
37
|
தண்டிரு தலையும் பற்றிப்
புகுமவர் தம்மை நோக்கி
வெண்டிரு நீற்று முண்ட
வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டுடன் மூழ்கீ ரென்னக்
கூடாமை பாரோர் கேட்கப்
பண்டுதஞ் செய்கை சொல்லி
மூழ்கினார் பழுதி லாதார்.
|
38
|
வாவியின் மூழ்கி ஏறுங்
கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி
விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமுஞ்
சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின்மா மழையின் மீள
மூழ்குவார் போன்று தோன்ற.
|
39
|
அந்நிலை யவரைக் காணும்
அதிசயங் கண்டா ரெல்லாம்
முன்னிலை நின்ற வேத
முதல்வரைக் கண்டா ரில்லை
இந்நிலை இருந்த வண்ணம்
என்னென மருண்டு நின்றார்
துன்னிய விசும்பி னூடு
துணையுடன் விடைமேற் கண்டார்.
|
40
|
| Go to top |
கண்டனர் கைக ளாரத்
தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தி னார்கள்
அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி
விடையின்மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந்
தொழுதுடன் போற்றி நின்றார்.
|
41
|
மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
|
42
|
விறலுடைத் தொண்ட னாரும்
வெண்ணகைச் செவ்வாய் மென்றோள்
அறலியற் கூந்த லாராம்
மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து
சிவலோக மதனை யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப்
பேரின்பம் உற்றா ரன்றே.
|
43
|
அயலறி யாத வண்ணம்
அண்ணலா ராணை யுய்த்த
மயலில்சீர்த் தொண்ட னாரை
யானறி வகையால் வாழ்த்திப்
புயல்வளர் மாட நீடும்
பூம்புகார் வணிகர் பொய்யில்
செயலியற் பகையார் செய்த
திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
|
44
|