சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.060   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

விரைசெய் நறும்பூந் தொடையிதழி
வேணி யார்தங் கழல்பரவிப்
பரசு பெறுமா தவமுனிவன்
பரசு ராமன் பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனும்
திருந்து நிலனின் செழுவளனும்
வரையின் வளனும் உடன்பெருகி
மல்கு நாடு மலைநாடு.
1

வாரி சொரியுங் கதிர்முத்தும்
வயல்மென் கரும்பிற் படுமுத்தும்
வேரல் விளையுங் குளிர்முத்தும்
வேழ மருப்பின் ஒளிர்முத்தும்
மூரல் எனச்சொல் வெண்முத்த
நகையார் தெரிந்து முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர் செங்குன்றூர்.
2

என்னும் பெயரின் விளங்கியுல
கேறும் பெருமை யுடையதுதான்
அன்னம் பயிலும் வயலுழவின்
அமைந்த வளத்தா லாய்ந்தமறை
சொன்ன நெறியின் வழியொழுகும்
தூய குடிமைத் தலைநின்றார்
மன்னுங் குலத்தின் மாமறைநூல்
மரபிற் பெரியோர் வாழ்பதியாம்.
3

அப்பொற் பதியி னிடைவேளாண்
குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையார்
எம்பி ரானார் விறன்மிண்டர்.
4

நதியும் மதியும் புனைந்தசடை
நம்பர் விரும்பி நலஞ்சிறந்த
பதிக ளெங்குங் கும்பிட்டுப்
படருங் காதல் வழிச்செல்வார்
முதிரும் அன்பிற் பெருந்தொண்டர்
முறைமை நீடு திருக்கூட்டத்
தெதிர்முன் பரவும் அருள்பெற்றே
இறைவர் பாதந் தொழப்பெற்றார்.
5
Go to top

பொன்தாழ் அருவி மலைநாடு
கடந்து கடல்சூழ் புவியெங்கும்
சென்றா ளுடையார் அடியவர்தம்
திண்மை ஒழுக்க நடைசெலுத்தி
வன்தாள் மேருச் சிலைவளைத்துப்
புரங்கள் செற்ற வைதிகத்தேர்
நின்றா ரிருந்த திருவாரூர்
பணிந்தார் நிகரொன் றில்லாதார்.
6

திருவார் பெருமை திகழ்கின்ற
தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்
தம்மைத் தொழுது வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன்
புறகென் றுரைப்பச் சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு
பெற்றார் மற்றும் பெறநின்றார்.
7

சேணார் மேருச் சிலைவளைத்த
சிவனா ரடியார் திருக்கூட்டம்
பேணா தேகும் ஊரனுக்கும்
பிரானாந் தன்மைப் பிறைசூடிப்
பூணா ரரவம் புனைந்தார்க்கும்
புறகென் றுரைக்க மற்றவர்பாற்
கோணா வருளைப் பெற்றார்மற்
றினியார் பெருமை கூறுவார்.
8

ஞால முய்ய நாமுய்ய
நம்பி சைவ நன்னெறியின்
சீல முய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பாடச் செழுமறைகள்
ஓல மிடவும் உணர்வரியார்
அடியா ருடனாம் உளதென்றால்
ஆலம் அமுது செய்தபிரான்
அடியார் பெருமை அறிந்தார்ஆர்.
9

ஒக்க நெடுநாள் இவ்வுலகில்
உயர்ந்த சைவப் பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறிபோற்றித்
தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம்பெருமான்
அருளி னாலே தாள்நிழற்கீழ்
மிக்க கணநா யகராகும்
தன்மை பெற்று விளங்கினார்.
10
Go to top

வேறு பிறிதென் திருத்தொண்டத்
தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம்
பிரானார் விறன்மிண் டரின்பெருமை
கூறும் அளவெம் அளவிற்றே
அவர்தாள் சென்னி மேற்கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி
அன்பர் திருத்தொண் டறைகுவாம்.
11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org