சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.210   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்.
1

தொன்மைமுறை வருமண்ணின்
துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்தின்
நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னிமதி புனையவளர்
மணிமாடச் செழும்பதிகள்
மன்னிநிறைந் துளதுதிரு
முனைப்பாடி வளநாடு.
2

புனப்பண்ணை மணியினொடும்
புறவின்நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரைசுமந்து
கரைமருங்கு பெரும்பகட்டேர்
இனப்பண்ணை உழும்பண்ணை
எறிந்துலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும்பெண்ணை
மாநதிபாய் வளம்பெருகும்.
3

காலெல்லாந் தகட்டுவரால்
கரும்பெல்லாங் கண்பொழிதேன்
பாலெல்லாங் கதிர்ச்சாலி
பரப்பெல்லாங் குலைக்கமுகு
சாலெல்லாந் தரளநிரை
தடமெல்லாஞ் செங்கழுநீர்
மேலெல்லாம் அகில்தூபம்
விருந்தெல்லாந் திருந்துமனை.
4

கடைஞர்மிடை வயற்குறைத்த
கரும்புகுறை பொழிகொழுஞ்சா
றிடைதொடுத்த தேன்கிழிய
இழிந்தொழுகு நீத்தமுடன்
புடைபரந்து ஞிமிறொலிப்பப்
புதுப்புனல்போல் மடையுடைப்ப
உடைமடையக் கரும்படுகட்
டியினடைப்ப ஊர்கள்தொறும்.
5
Go to top

கருங்கதலிப் பெருங்குலைகள்
களிற்றுக்கைம் முகங்காட்ட
மருங்குவளை கதிர்ச்செந்நெல்
வயப்புரவி முகங்காட்டப்
பெருஞ்சகடு தேர்காட்ட
வினைஞர்ஆர்ப் பொலிபிறங்க
நெருங்கியசா துரங்கபல
நிகர்ப்பனவாம் நிறைமருதம்.
6

நறையாற்றுங் கமுகுநவ
மணிக்கழுத்தி னுடன்கூந்தல்
பொறையாற்றா மகளிரெனப்
புறம்பலைதண் டலைவேலித்
துறையாற்ற மணிவண்ணச்
சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை
நிறையாற்று நீர்க்கொழுந்து
படர்ந்தேறு நிலைமையதால்.
7

மருமேவு மலர்மேய
மாகடலின் உட்படியும்
உருமேகம் எனமண்டி
உகைத்தகருங் கன்றுபோல்
வருமேனிச் செங்கண்வரால்
மடிமுட்டப் பால்சொரியுங்
கருமேதி தனைக்கொண்டு
கரைபுரள்வ திரைவாவி.
8

மொய்யளிசூழ் நிரைநீல
முழுவலயங் களின்அலையச்
செய்யதளிர் நறுவிரலிற்
செழுமுகையின் நகஞ்சிறப்ப
மெய்யொளியின் நிழற்காணும்
ஆடியென வெண்மதியை
வையமகள் கையணைத்தால்
போலுயர்வ மலர்ச்சோலை.
9

எயிற்குலவும் வளம்பதிகள்
எங்குமணந் தங்கும்வயல்
பயிர்க்கண்வியல் இடங்கள்பல
பரந்துயர்நெற் கூடுகளும்
வெயிற்கதிர்மென் குழைமகளிர்
விரவியமா டமும்மேவி
மயில்குலமும் முகிற்குலமும்
மாறாட மருங்காடும்.
10
Go to top

மறந்தருதீ நெறிமாற
மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசும்
ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால்
நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித்
திறம்பாடுஞ் சீர்ப்பாடு.
11

இவ்வகைய திருநாட்டில்
எனைப்பலவூர் களுமென்றும்
மெய்வளங்கள் ஓங்கவரும்
மேன்மையன ஆங்கவற்றுள்
சைவநெறி ஏழுலகும்
பாலிக்குந் தன்மையினால்
தெய்வநெறிச் சிவம்பெருக்குந்
திருவாமூர் திருவாமூர்.
12

ஆங்குவன முலைகள்சுமந்
தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள்
இரங்குவன மணிக்காஞ்சி
ஓங்குவன மாடநிரை
யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி
நெருங்குவன பெருங்குடிகள்.
13

மலர்நீலம் வயல்காட்டும்
மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும்
அணியூசல் பலகாட்டும்
புலர்நீலம் இருள்காட்டும்
பொழுதுழவர் ஒலிகாட்டும்
கலநீடு மனைகாட்டும்
கரைகாட்டாப் பெருவளங்கள்.
14

தலத்தின்கண் விளங்கியஅத்
தனிப்பதியில் அனைத்துவித
நலத்தின்கண் வழுவாத
நடைமரபிற் குடிநாப்பண்
விலக்கின்மனை ஒழுக்கத்தின்
மேதக்க நிலைவேளாண்
குலத்தின்கண் வரும்பெருமைக்
குறுக்கையர்தங் குடிவிளங்கும்.
15
Go to top

அக்குடியின் மேல்தோன்றல்
ஆயபெருந் தன்மையினார்
மிக்கமனை அறம்புரிந்து
விருந்தளிக்கும் மேன்மையினார்
ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின்
உளரானார் உளரானார்
திக்குநில வும்பெருமை
திகழவரும் புகழனார்.
16

புகழனார் தமக்குரிமைப்
பொருவில்குலக் குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த
மாதினியார் மணிவயிற்றில்
நிகழுமலர்ச் செங்கமல
நிரையிதழின் அகவயினில்
திகழவருந் திருவனைய
திலகவதி யார்பிறந்தார்.
17

திலகவதி யார்பிறந்து
சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப
அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி
ஒளிவிளங்கு கதிர்போல்பின்
மலருமருள் நீக்கியார்
வந்தவதா ரஞ்செய்தார்.
18

மாதினியார் திருவயிற்றின்
மன்னியசீர்ப் புகழனார்
காதலனார் உதித்ததற்பின்
கடன்முறைமை மங்கலங்கள்
மேதகுநல் வினைசிறப்ப
விரும்பியபா ராட்டினுடன்
ஏதமில்பல் கிளைபோற்ற
இளங்குழவிப் பதங்கடந்தார்.
19

மருணீக்கி யார்சென்னி
மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
கலைபயிலத் தொடங்குவித்தார்.
20
Go to top

தந்தையார் களிமகிழ்ச்சி
தலைசிறக்கும் முறைமையினால்
சிந்தைமலர்ந் தெழும்உணர்வில்
செழுங்கலையின் திறங்களெல்லாம்
முந்தைமுறை மையிற்பயின்று
முதிரஅறி வெதிரும்வகை
மைந்தனார் மறுவொழித்த
இளம்பிறைபோல் வளர்கின்றார்.
21

அந்நாளில் திலகவதி
யாருக்காண் டாறிரண்டின்
முன்னாக ஒத்தகுல
முதல்வேளாண் குடித்தலைவர்
மின்னார்செஞ் சடையண்ணல்
மெய்யடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணிமவுலிப்
புரவலன்பால் அருளுடையார்.
22

ஆண்டகைமைத் தொழிலின்கண்
அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற்
கலிப்பகையார் எனும்பெயரார்
பூண்டகொடைப் புகழனார்
பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார்.
23

அணங்கனைய திலகவதி
யார்தம்மை யாங்கவர்க்கு
மணம்பேசி வந்தவரும்
வந்தபடி அறிவிப்பக்
குணம்பேசிக் குலம்பேசிக்
கோதில்சீர்ப் புகழனார்
பணங்கொளர வகல்அல்குல்
பைந்தொடியை மணம்நேர்ந்தார்.
24

கன்னிதிருத் தாதையார்
மணமிசைவு கலிப்பகையார்
முன்னணைந்தார் அறிவிப்ப
வதுவைவினை முடிப்பதன்முன்
மன்னவற்கு வடபுலத்தோர்
மாறேற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடைகொடுத்தான்
அவ்வினைமேல் அவரகன்றார்.
25
Go to top

வேந்தற்குற் றுழிவினைமேல்
வெஞ்சமத்தில் விடைகொண்டு
போந்தவரும் பொருபடையும்
உடன்கொண்டு சிலநாளில்
காய்ந்தசினப் பகைப்புலத்தைக்
கலந்துநெடுஞ் சமர்க்கடலை
நீந்துவார் நெடுநாள்கள்
நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்.
26

ஆயநா ளிடைஇப்பால்
அணங்கனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார்
தொன்றுதொடு நிலையாமை
மேயவினைப் பயத்தாலே
இவ்வுலகை விட்டகலத்
தீயஅரும் பிணியுழந்து
விண்ணுலகில் சென்றடைந்தார்.
27

மற்றவர்தாம் உயிர்நீப்ப
மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையும்
துகளாக வேநீத்துப்
பெற்றிமையால் உடனென்றும்
பிரியாத உலகெய்தும்
கற்புநெறி வழுவாமல்
கணவனா ருடன்சென்றார்.
28

தாதையா ரும்பயந்த
தாயாரும் இறந்ததற்பின்
மாதரார் திலகவதி
யாரும்அவர் பின்வந்த
காதலனார் மருணீக்கி
யாரும்மனக் கவலையினால்
பேதுறுநற் சுற்றமொடும்
பெருந்துயரில் அழுந்தினார்.
29

ஒருவாறு பெருங்கிளைஞர்
மனந்தேற்றத் துயரொழிந்து
பெருவானம் அடைந்தவர்க்குச்
செய்கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்கா
மலையப்போங் கலிப்பகையார்
பொருவாரும் போர்க்களத்தில்
உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார்.
30
Go to top

வெம்முனைமேற் கலிப்பகையார்
வேல்வேந்தன் ஏவப்போய்
அம்முனையில் பகைமுருக்கி
அமருலகம் ஆள்வதற்குத்
தம்முடைய கடன்கழித்த
பெருவார்த்தை தலஞ்சாற்றச்
செம்மலர்மேல் திருவனைய
திலகவதி யார்கேட்டார்.
31

எந்தையும்எம் அனையும்அவர்க்
கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே
உரியதுநான் ஆதலினால்
இந்தவுயிர் அவருயிரோ
டிசைவிப்பன் எனத்துணிய
வந்தவர்தம் அடியிணைமேல்
மருணீக்கி யார்விழுந்தார்.
32

அந்நிலையில் மிகப்புலம்பி
அன்னையும்அத் தனும்அகன்ற
பின்னையுநான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னையினித் தனிக்கைவிட்
டேகுவீர் எனில்யானும்
முன்னம் உயிர் நீப்பனென
மொழிந்திடரின் அழுந்தினார்.
33

தம்பியார் உளராக
வேண்டுமென வைத்ததயா
உம்பருல கணையவுறு
நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்கா
தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து
திலகவதி யாரிருந்தார்.
34

மாசின்மனத் துயரொழிய
மருணீக்கி யார்நிரம்பித்
தேசநெறி நிலையாமை
கண்டறங்கள் செய்வாராய்க்
காசினிமேல் புகழ்விளங்க
நிதியளித்துக் கருணையினால்
ஆசில்அறச் சாலைகளும்
தண்ணீர்ப்பந் தரும்அமைப்பார்.
35
Go to top

காவளர்த்தும் குளந்தொட்டும்
கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன
மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக
நல்கியும்நா னிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராத
ஈகைவினைத் துறைநின்றார்.
36

நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.
37

பாடலிபுத் திரமென்னும்
பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர்
மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறியிதுவே
எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக்
குறிபலவுங் கொளுவினார்.
38

அங்கவரும் அமண்சமயத்
தருங்கலைநூ லானவெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே
அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுறும் உடற்சமணர்
சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத்
தங்களின்மே லாந்தரும
சேனரெனும் பெயர்கொடுத்தார்.
39

அத்துறையின் மீக்கூரும்
அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத
தேரரையும் வாதின்கண்
உய்த்தவுணர் வினில்வென்றே
உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத்
தலைமையினில் மேம்பட்டார்.
40
Go to top

அந்நெறியின் மிக்கார்
அவரொழுக ஆன்றதவச்
செந்நெறியின் வைகும்
திலகவதி யார்தாமும்
தொன்னெறியின் சுற்றத்
தொடர்பொழியத் தூயசிவ
நன்னெறியே சேர்வதற்கு
நாதன்தாள் நண்ணுவார்.
41

பேராத பாசப்
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.
42

சென்றுதிரு வீரட்டா
னத்திருந்த செம்பவளக்
குன்றை அடிபணிந்து
கோதில் சிவசின்னம்
அன்று முதல்தாங்கி
ஆர்வமுறத் தம்கையால்
துன்று திருப்பணிகள்
செய்யத் தொடங்கினார்.
43

புலர்வதன்முன் திருவலகு
பணிமாறிப் புனிறகன்ற
நலமலிஆன் சாணத்தால்
நன்குதிரு மெழுக்கிட்டு
மலர்கொய்து கொடுவந்து
மாலைகளும் தொடுத்தமைத்துப்
பலர்புகழும் பண்பினால்
திருப்பணிகள் பலசெய்தார்.
44

நாளும்மிகும் பணிசெய்து
குறைந்தடையும் நன்னாளில்
கேளுறும்அன் புறவொழுகுங்
கேண்மையினார் பின்பிறந்தார்
கோளுறுதீ வினைஉந்தப்
பரசமயங் குறித்ததற்கு
மூளுமனக் கவலையினால்
முற்றவரும் துயருழந்து.
45
Go to top

தூண்டுதவ விளக்கனையார்
சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில்
அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப் பரசமயக்
குழிநின்றும் எடுத்தருள
வேண்டுமெனப் பலமுறையும்
விண்ணப்பஞ் செய்தனரால்.
46

தவமென்று பாயிடுக்கித்
தலைபறித்து நின்றுண்ணும்
அவமொன்று நெறிவீழ்வான்
வீழாமே அருளுமெனச்
சிவமொன்று நெறிநின்ற
திலகவதி யார்பரவப்
பவமொன்றும் வினைதீர்ப்பார்
திருவுள்ளம் பற்றுவார்.
47

மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.
48

பண்டுபுரி நற்றவத்துப்
பழுதினள விறைவழுவும்
தொண்டரைஆ ளத்தொடங்கும்
சூலைவே தனைதன்னைக்
கண்தருநெற் றியரருளக்
கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலைஅவர்
வயிற்றினிடைப் புக்கதால்.
49

அடைவில்அமண் புரிதரும
சேனர்வயிற் றடையும்அது
வடஅனலுங் கொடுவிடமும்
வச்சிரமும் பிறவுமாம்
கொடியவெலாம் ஒன்றாகும்
எனக்குடரின் அகங்குடையப்
படருழந்து நடுங்கிஅமண்
பாழியறை யிடைவீழ்ந்தார்.
50
Go to top

அச்சமயத் திடைத்தாம்முன்
அதிகரித்து வாய்த்துவரும்
விச்சைகளால் தடுத்திடவும்
மேன்மேலும் மிகமுடுகி
உச்சமுற வேதனைநோய்
ஓங்கியெழ ஆங்கவர்தாம்
நச்சரவின் விடந்தலைக்கொண்
டெனமயங்கி நவையுற்றார்.
51

அவர்நிலைமை கண்டதற்பின்
அமண்கையர் பலர்ஈண்டிக்
கவர்கின்ற விடம்போல்முன்
கண்டறியாக் கொடுஞ்சூலை
இவர்தமக்கு வந்ததினி
யாதுசெயல் என்றழிந்தார்
தவமென்று வினைபெருக்கிச்
சார்பல்லா நெறிசார்வார்.
52

புண்தலைவன் முருட்டமணர்
புலர்ந்துசெயல் அறியாது
குண்டிகைநீர் மந்திரித்துக்
குடிப்பித்தும் தணியாமை
கண்டுமிகப் பீலிகொடு
கால்அளவுந் தடவிடவும்
பண்டையினும் நோவுமிகப்
பரிபவத்தால் இடருழந்தார்.
53

தாவாத புகழ்த்தரும
சேனருக்கு வந்தபிணி
ஓவாது நின்றிடலும்
ஒழியாமை உணர்ந்தாராய்
ஆஆநாம் என்செய்கோம்
என்றழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இதுநம்மால்
போக்கரிதாம் எனப்புகன்று.
54

குண்டர்களுங் கைவிட்டார்
கொடுஞ்சூலை கைக்கொண்டு
மண்டிமிக மேன்மேலும்
முடுகுதலால் மதிமயங்கிப்
பண்டையுற வுணர்ந்தார்க்குத்
திலகவதி யார்உளராக்
கொண்டவர்பால் ஊட்டுவான்
தனைவிட்டார் குறிப்புணர்த்த.
55
Go to top

ஆங்கவன்போய்த் திருவதிகை
தனையடைய அருந்தவத்தார்
பூங்கமழ்நந் தனவனத்தின்
புறத்தணையக் கண்டிறைஞ்சி
ஈங்கியான் உமக்கிளையார்
ஏவலினால் வந்ததெனத்
தீங்குளவோ எனவினவ
மற்றவனும் செப்புவான்.
56

கொல்லாது சூலைநோய்
குடர்முடக்கித் தீராமை
எல்லாரும் கைவிட்டார்
இதுசெயல்என் முன்பிறந்த
நல்லாள்பால் சென்றியம்பி
நான்உய்யும் படிகேட்டிங்
கல்லாகும் பொழுதணைவாய்
என்றார்என் றறிவித்தான்.
57

என்றவன்முன் கூறுதலும்
யான்அங்குன் னுடன்போந்து
நன்றறியார் அமண்பாழி
நண்ணுகிலேன் எனும்மாற்றம்
சென்றவனுக் குரையென்று
திலகவதி யார்மொழிய
அன்றவனும் மீண்டுபோய்ப்
புகுந்தபடி அவர்க்குரைத்தான்.
58

அவ்வார்த்தை கேட்டலுமே
அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
வதியார்தாள் சேர்வனென.
59

எடுத்தமனக் கருத்துய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
போவதற்குத் துணிந்தெழுந்தார்.
60
Go to top

பொய்தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்.
61

சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்.
62

வந்தணைந்து திலகவதி
யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
உரைத்தருளும் எனவுரைத்து.
63

தாளிணைமேல் விழுந்தயருந்
தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான்
அருள்நினைந்து கைதொழுது
கோளில்பர சமயநெறிக்
குழியில்விழுந் தறியாது
மூளும்அருந் துயர்உழந்தீர்
எழுந்திரீர் எனமொழிந்தார்.
64

மற்றவ்வுரை கேட்டலுமே
மருணீக்கி யார்தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி
எழுந்துதொழ உயர்தவத்தோர்
கற்றைவே ணியர்அருளே
காணுமிது கழலடைந்தோர்
பற்றறுப்பார் தமைப்பணிந்து
பணிசெய்வீர் எனப்பணித்தார்.
65
Go to top

என்றபொழு தவரருளை
எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்றதபோ தனியாரும்
நின்மலன்பேர் அருள்நினைந்து
சென்றுதிரு வீரட்டம்
புகுவதற்குத் திருக்கயிலைக்
குன்றுடையார் திருநீற்றை
அஞ்செழுத்தோ திக்கொடுத்தார்.
66

திருவாளன் திருநீறு
திலகவதி யார்அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப்
பெருந்தகையார் பணிந்தேற்றங்
குருவார அணிந்துதமக்
குற்றவிடத் துய்யுநெறி
தருவாராய்த் தம்முன்பு
வந்தார்பின் தாம்வந்தார்.
67

நீறணிந்தார் அகத்திருளும்
நிறைகங்குல் புறத்திருளும்
மாறவருந் திருப்பள்ளி
எழுச்சியினில் மாதவஞ்செய்
சீறடியார் திருவலகுந்
திருமெழுக்குந் தோண்டியுங்கொண்
டாறணிந்தார் கோயிலினுள்
அடைந்தவரைக் கொடுபுக்கார்.
68

திரைக்கெடில வீரட்டா
னத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயில்
தொழுதுவலங் கொண்டிறைஞ்சித்
தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து
தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ்மா லைகள்சாத்தும்
உணர்வுபெற உணர்ந்துரைப்பார்.
69

நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும்
போமாறெதிர் நின்று புகன்றனரால்.
70
Go to top

மன்னும்பதி கம்அது பாடியபின்
வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.
71

அங்கங்கள் அடங்க உரோமமெலாம்
அடையப்புள கங்கண் முகிழ்த்தலரப்
பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப்
புவிமீது விழுந்து புரண்டயர்வார்
இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிடநின்
தங்குங்கரு ணைப்பெரு வெள்ளமிடத்
தகுமோவென இன்னன தாமொழிவார்.
72

பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
பொறியில்சமண் நீசர் புறத்துறையாம்
அவ்வாழ்குழி யின்கண் விழுந்தெழுமா
றறியாது மயங்கி அவம்புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்
கெதிர்செய்குறை யென்கொல் எனத்தொழுதார்.
73

மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கர சென்றுல கேழினும்நின்
நன்னாமம் நயப்புற மன்னுகஎன்
றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.
74

இத்தன்மை நிகழ்ந்துழி நாவின்மொழிக்
கிறையாகிய அன்பரும் இந்நெடுநாள்
சித்தந்திகழ் தீவினை யேன்அடையுந்
திருவோஇது என்று தெருண்டறியா
அத்தன்மைய னாய இராவணனுக்
கருளுங்கரு ணைத்திற மானஅதன்
மெய்த்தன்மை யறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
75
Go to top

பரசுங்கரு ணைப்பெரி யோன்அருளப்
பறிபுன்தலை யோர்நெறி பாழ்படவந்
தரசிங்கருள் பெற்றுல குய்ந்ததெனா
அடியார்புடை சூழதி கைப்பதிதான்
முரசம்பட கந்துடி தண்ணுமையாழ்
முழவங்கிளை துந்துபி கண்டையுடன்
நிரைசங்கொலி எங்கும் முழங்குதலால்
நெடுமாகடல் என்ன நிறைந்துளதே.
76

மையற்றுறை யேறி மகிழ்ந்தலர்சீர்
வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய்யுற்ற திருப்பணி செய்பவராய்
விரவுஞ்சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறாவுணர்வும்
ஈறின்றி எழுந்திரு வாசகமும்
கையில்திக ழும்உழ வாரமுடன்
கைத்தொண்டு கலந்து கசிந்தனரே.
77

மெய்ம்மைப்பணி செய்த விருப்பதனால்
விண்ணோர்தனி நாயக னார்கழலில்
தம்மிச்சை நிரம்ப வரம்பெறும்அத்
தன்மைப்பதி மேவிய தாபதியார்
பொய்ம்மைச்சம யப்பிணி விட்டவர்முன்
போதும்பிணி விட்டரு ளிப்பொருளா
எம்மைப்பணி கொள்கரு ணைத்திறமிங்
கியார்பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
78

இன்ன தன்மையில் இவர்சிவ
நெறியினை யெய்தி
மன்னு பேரருள் பெற்றிடர்
நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி
புத்திர நகரில்
புன்மை யேபுரி அமணர்தாம்
கேட்டது பொறாராய்.
79

தரும சேனர்க்கு வந்தஅத்
தடுப்பருஞ் சூலை
ஒருவ ராலும்இங் கொழிந்திடா
மையின்அவர் உயப்போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்துதம்
பிணியொழித் துய்ந்தார்
மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந்
ததுவென மருள்வார்.
80
Go to top

மலையும் பல்சம யங்களும்
வென்றுமற் றவரால்
நிலையும் பெற்றஇந் நெறிஇனி
அழிந்ததென் றழுங்கிக்
கொலையும் பொய்ம்மையும் இலமென்று
கொடுந்தொழில் புரிவோர்
தலையும் பீலியும் தாழவந்
தொருசிறை சார்ந்தார்.
81

இவ்வ கைப்பல அமணர்கள்
துயருடன் ஈண்டி
மெய்வ கைத்திறம் அறிந்திடில்
வேந்தனும் வெகுண்டு
சைவ னாகிநம் விருத்தியும்
தவிர்க்கும்மற் றினிநாம்
செய்வ தென்னென வஞ்சனை
தெரிந்துசித் திரிப்பார்.
82

தவ்வை சைவத்து நிற்றலின்
தருமசே னருந்தாம்
பொய்வ குத்ததோர் சூலைதீர்ந்
திலதெனப் போயிங்
கெவ்வ மாகஅங் கெய்திநஞ்
சமயலங் கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர்
எனச்சொலத் தெளிந்தார்.
83

சொன்ன வண்ணமே செய்வது
துணிந்ததுன் மதியோர்
முன்னம் நாஞ்சென்று முறைப்படு
வோமென முயன்றே
இன்ன தன்மையில் இருட்குழாஞ்
செல்வது போல
மன்ன னாகிய பல்லவன்
நகரில்வந் தணைந்தார்.
84

உடையொ ழிந்தொரு பேச்சிடை
யின்றிநின் றுண்போர்
கடைய ணைந்தவன் வாயில்கா
வலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்
கறிவியும் என்ன
இடைய றிந்துபுக் கவருந்தம்
இறைவனுக் கிசைப்பார்.
85
Go to top

அடிகண்மார் எல்லாரும்,
ஆகுலமாய் மிகவழிந்து
கொடிநுடங்கு திருவாயில்
புறத்தணைந்தார் எனக்கூற
வடிநெடுவேல் மன்னவனும்
மற்றவர்சார் பாதலினால்
கடிதணைவான் அவர்க்குற்ற
தென்கொல்எனக் கவன்றுரைத்தான்.
86

கடைகாவல் உடையார்கள்
புகுதவிடக் காவலன்பால்
நடையாடுந் தொழிலுடையார்
நண்ணித்தாம் எண்ணியவா
றுடையாரா கியதரும
சேனர்பிணி யுற்றாராய்ச்
சடையானுக் காளாய்நின்
சமயம்அழித் தாரென்றார்.
87

விரையலங்கல் பல்லவனும்
அதுகேட்டு வெகுண்டெழுந்து
புரையுடைய மனத்தினராய்ப்
போவதற்குப் பொய்ப்பிணிகொண்
டுரைசிறந்த சமயத்தை
அழித்தொழியப் பெறுவதே
கரையில்தவத் தீர்இதனுக்
கென்செய்வ தெனக்கனன்றான்.
88

தலைநெறியா கியசமயந்
தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில்
நெறியழித்த பொறியிலியை
அலைபுரிவாய் எனப்பரவி
வாயால்அஞ் சாதுரைத்தார்
கொலைபுரியா நிலைகொண்டு
பொய்யொழுகும் அமண்குண்டர்.
89

அருள்கொண்ட உணர்வின்றி
நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும்
மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன
தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாதென்பால்
கொடுவாரும் எனப்புகன்றான்.
90
Go to top

அரசனது பணிதலைநின்
றமைச்சர்களும் அந்நிலையே
முரசதிருந் தானையொடு
முன்சென்று முகில்சூழ்ந்து
விரைசெறியுஞ் சோலைசூழ்
திருவதிகை தனைமேவிப்
பரசமயப் பற்றறுத்த
பான்மையினார் பாற்சென்றார்.
91

சென்றணைந்த அமைச்சருடன்
சேனைவீ ரருஞ்சூழ்ந்து
மின்தயங்கு புரிவேணி
வேதியனார் அடியவரை
இன்றுநுமை அரசன்அழைத்
தெமைவிடுத்தான் போதுமென
நின்றவரை நேர்நோக்கி
நிறைதவத்தோர் உரைசெய்வார்.
92

நாமார்க்குங் குடியல்லோம்
என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன்
குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின்
செழுந்திருத்தாண் டகம்பாடி
ஆமாறு நீரழைக்கும்
அடைவிலமென் றருள்செய்தார்.
93

ஆண்டஅர சருள்செய்யக்
கேட்டவரும் அடிவணங்கி
வேண்டியவர்க் கொண்டேக
விடையுகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டுவரும் வினைகளுக்கெம்
பிரானுளனென் றிசைந்திருந்தார்
மூண்டசினப் போர்மன்னன்
முன்னணைந்தங் கறிவித்தார்.
94

பல்லவனும் அதுகேட்டுப்
பாங்கிருந்த பாயுடுக்கை
வல்அமணர் தமைநோக்கி
மற்றவனைச் செய்வதினிச்
சொல்லுமென அறந்துறந்து
தமக்குறுதி அறியாத
புல்லறிவோர் அஞ்சாது
நீற்றறையில் இடப்புகன்றார்.
95
Go to top

அருகணைந்தார் தமைநோக்கி
அவ்வண்ணஞ் செய்கவெனப்
பெருகுசினக் கொடுங்கோலான்
மொழிந்திடலும் பெருந்தகையை
உருகுபெருந் தழல்வெம்மை
நீற்றறையின் உள்ளிருத்தித்
திருகுகருந் தாட்கொளுவிச்
சேமங்கள் செய்தமைத்தார்.
96

ஆண்டஅர சதனகத்துள்
அணைந்தபொழு தம்பலத்துத்
தாண்டவமுன் புரிந்தருளுந்
தாள்நிழலைத் தலைக்கொண்டே
ஈண்டுவருந் துயருளவோ
ஈசனடி யார்க்கென்று
மூண்டமனம் நேர்நோக்கி
முதல்வனையே தொழுதிருந்தார்.
97

வெய்யநீற் றறையதுதான்
வீங்கிளவே னிற்பருவந்
தைவருதண் தென்றல்அணை
தண்கழுநீர்த் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவலர்ந்து
முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல்
அருளாகிக் குளிர்ந்ததே.
98

மாசில்மதி நீடுபுனல்
மன்னிவளர் சென்னியனைப்
பேசஇனி யானையுல
காளுடைய பிஞ்ஞகனை
ஈசனைஎம் பெருமானை
எவ்வுயிருந் தருவானை
ஆசையில்ஆ ராவமுதை
அடிவணங்கி இனிதிருந்தார்.
99

ஓரெழுநாள் கழிந்ததற்பின்
உணர்வில்அம ணரையழைத்துப்
பாருமினி நீற்றறையை
எனவுரைத்தான் பல்லவனுங்
காரிருண்ட குழாம்போலும்
உருவுடைய காரமணர்
தேருநிலை இல்லாதார்
நீற்றறையைத் திறந்தார்கள்.
100
Go to top

ஆனந்த வெள்ளத்தின்
இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி
உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனந்தங் கியதிலதாம்
என்னஅதி சயம்என்றார்.
101

அதிசயம்அன் றிதுமுன்னை
அமண்சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருந்தான்
எனவேந்தற் குரைசெய்து
மதிசெய்வ தினிக்கொடிய
வல்விடம்ஊட் டுவதென்று
முதிரவரும் பாதகத்தோர்
முடைவாயால் மொழிந்தார்கள்.
102

ஆங்கதுகேட் டலுங்கொடிய
அமண்சார்பாற் கெடுமன்னன்
ஓங்குபெரு மையலினால்
நஞ்சூட்டும் எனவுரைப்பத்
தேங்காதார் திருநாவுக்
கரசரைஅத் தீயவிடப்
பாங்குடைய பாலடிசில்
அமுதுசெயப் பண்ணினார்.
103

நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.
104

பொடியார்க்குந் திருமேனிப்
புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்குந் துயர்நீங்க
முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய
பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுதம்
ஆவதுதான் அற்புதமோ.
105
Go to top

அவ்விடத்தை ஆண்டஅர
சமுதுசெய்து முன்னிருப்ப
வெவ்விடமும் அமுதாயிற்
றெனஅமணர் வெருக்கொண்டே
இவ்விடத்தில் இவன்பிழைக்கில்
எமக்கெல்லாம் இறுதியெனத்
தெவ்விடத்துச் செயல்புரியுங்
காவலற்குச் செப்புவார்.
106

நஞ்சுகலந் தூட்டிடவும்
நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தால்
சாதியா வகைதடுத்தான்
எஞ்சும்வகை அவற்கிலதேல்
எம்முயிரும் நின்முறையும்
துஞ்சுவது திடமென்றார்
சூழ்வினையின் துறைநின்றார்.
107

மற்றவர்தம் மொழிகேட்டு
மதிகெட்ட மன்னவனும்
செற்றவனை இனிக்கடியும்
திறமெவ்வா றெனச்செப்ப
உற்றவரு மந்திரசா தகநாங்கள்
ஒழித்திடநின்
கொற்றவயக் களிறெதிரே
விடுவதெனக் கூறினார்.

108

மாபாவிக் கடைஅமணர்
வாகீசத் திருவடியாங்
காபாலி அடியவர்பாற்
கடக்களிற்றை விடுகென்னப்
பூபாலர் செயன்மேற்கொள்
புலைத்தொழிலோன் அவர்தம்மேற்
கோபாதி சயமான
கொலைக்களிற்றை விடச்சொன்னான்.
109

கூடத்தைக் குத்தியொரு
குன்றமெனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு
மண்டபங்கள் எடுத்தெற்றித்
தாடத்திற் பரிக்காரர்
தலையிடறிக் கடக்களிற்றின்
வேடத்தால் வருங்கூற்றின்
மிக்கதொரு விறல்வேழம்.
110
Go to top

பாசத்தொடை நிகளத்தொடர்
பறியத்தறி முறியா
மீசுற்றிய பறவைக்குலம்
வெருவத்துணி விலகா
ஊசற்கரம் எதிர்சுற்றிட
உரறிப்பரி உழறா
வாசக்கட மழைமுற்பட
மதவெற்பெதிர் வருமால்.
111

இடியுற்றெழும் ஒலியில்திசை
இபமுட்கிட அடியில்
படிபுக்குற நெளியப்படர்
பவனக்கதி விசையில்
கடிதுற்றடு செயலிற்கிளர்
கடலிற்படு கடையின்
முடிவிற்கனல் எனமுற்சினம்
முடுகிக்கடு கியதே.
112

மாடுற்றணை இவுளிக்குலம்
மறியச்செறி வயிரக்
கோடுற்றிரு பிளவிட்டறு
குறைகைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில்தெற்றிகள்
சரியப்புடை அணிசெற்
றாடுற்றகல் வெளியுற்றதவ்
வடர்கைக்குல வரையே.
113

பாவக்கொடு வினைமுற்றிய
படிறுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிர்முற்கொடு
நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செறு பொருகைக்கரி
யினையுய்த்திட வெருளார்
சேவிற்றிகழ் பவர்பொற்கழல்
தெளிவுற்றனர் பெரியோர்.
114

அண்ணல் அருந்தவ வேந்தர்
ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை
விடையுகந் தேறும் பிரானைச்
சுண்ணவெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய வெடுத்து
மகிழ்வுட னேபாடு கின்றார்.
115
Go to top

வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி அறைந்தார்.
116

தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.
117

ஆண்ட அரசை வணங்கி
அஞ்சிஅவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர்
தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர்மேல்
மிறைசெய்து காட்டிட வீசி
ஈண்டவர் தங்களை யேகொன்
றமணர்மேல் ஓடிற் றெதிர்ந்தே.
118

ஓடி அருகர்கள் தம்மை
உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையுங் கொன்று
நகரங் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும்
நெடுமந் தரகிரி போல
ஆடியல் யானைஅம் மன்னற்
காகுலம் ஆக்கிய தன்றே.
119

யானையின் கையிற் பிழைத்த
வினைஅமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி
வருந்திய சிந்தைய ராகித்
தானை நிலமன்னன் தாளில்
தனித்தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறிவிட்ட வேந்தன்
வெகுண்டினிச் செய்வதென் என்றான்.
120
Go to top

நங்கள் சமயத்தின் நின்றே
நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிரே றழிய
யானையால் இவ்வண்ணம் நின்சீர்
பங்கப் படுத்தவன் போகப்
பரிபவந் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன்பின்
புகையகன் றாலென என்றார்.
121

அல்லிருள் அன்னவர் கூற
அரும்பெரும் பாவத் தவன்பின்
தொல்லைச் சமயம் அழித்துத்
துயரம் விளைத்தவன் தன்னைச்
சொல்லும் இனிச்செய்வ தென்னச்
சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக்
கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்.
122

ஆங்கது கேட்ட அரசன்
அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச்
சேமம் உறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லில் அணைத்துப்
பாசம் பிணித்தோர் படகில்
வீங்கொலி வேலையில் எற்றி
வீழ்த்துமின் என்று விடுத்தான்.
123

அவ்வினை செய்திடப் போகும்
அவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று
மேவிட நாவுக் கரசர்
செவ்விய தம்திரு உள்ளஞ்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தின் மன்னவன் சொன்ன
படிமுடித் தார்அப் பதகர்.
124

அப்பரி சவ்வினை முற்றி
அவர்அகன் றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க
உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரி சாயினு மாக
ஏத்துவன் எந்தையை யென்று
செப்பிய வண்டமிழ் தன்னால்
சிவன்அஞ் செழுத்துந் துதிப்பார்.
125
Go to top

சொற்றுணை வேதியன்
என்னுந் தூமொழி
நற்றமிழ் மாலையா
நமச்சி வாயவென்
றற்றமுன் காக்கும்அஞ்
செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால்
பதிகம் பாடினார்.
126

பெருகிய அன்பினர்
பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முதல்
அமரர் வாழ்த்துதற்
கரியஅஞ் செழுத்தையும்
அரசு போற்றிடக்
கருநெடுங் கடலினுட்
கல்மி தந்ததே.
127

அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.
128

இருவினைப் பாசமும்
மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில்வீழ்
மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத்
தரசை இக்கடல்
ஒருகல்மேல் ஏற்றிடல்
உரைக்க வேண்டுமோ.
129

அருள்நயந் தஞ்செழுத்
தேத்தப் பெற்றஅக்
கருணைநா வரசினைத்
திரைக்க ரங்களால்
தெருள்நெறி நீர்மையின்
சிரத்தில் தாங்கிட
வருணனுஞ் செய்தனன்
முன்பு மாதவம்.
130
Go to top

வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.


131

அத்திருப் பதியினில்
அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம்
மேவி ஆர்த்தெழ
எத்திசை யினும்அர
வென்னும் ஓசைபோல்
தத்துநீர்ப் பெருங்கடல்
தானும் ஆர்த்ததே.
132

தொழுந்தகை நாவினுக்
கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையரைக்
கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி
விளங்கப் பாடுவார்.
133

ஈன்றாளு மாய்எனக் கெந்தையு
மாகி யெனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்அடி யோங்கட்கென்று
வான்தாழ் புனல்கங்கை வாழ்சடை
யானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ்
மாலைகள் சாத்தினரே.
134

மற்றும் இனையன வண்டமிழ்
மாலைகள் பாடிவைகி
வெற்றி மழவிடை வீரட்டர்
பாதம்மிக நினைவில்
உற்றதொர் காதலின் அங்குநின்
றேகிஒன் னார்புரங்கள்
செற்றவர் வாழுந் திருவதி
கைப்பதி சென்றடைவார்.
135
Go to top

தேவர் பிரான்திரு மாணி
குழியுந் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய
சொன்மலர் கொண்டிறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி
புல்லப் பொருள்மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி
லத்தைக் கடந்தணைந்தார்.
136

வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த
தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய இன்றமிழ்
ஈசர் எழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதி
கைப்பதி வாணர்எல்லாந்
தஞ்செயல் பொங்கத் தழங்கொலி
மங்கலஞ் சாற்றலுற்றார்.
137

மணிநெடுந் தோரணம் வண்குலைப்
பூகம் மடற்கதலி
இணையுற நாட்டி எழுநிலைக்
கோபுரந் தெற்றியெங்குந்
தணிவில் பெருகொளித் தாமங்கள்
நாற்றிச்செஞ் சாந்துநீவி
அணிநகர் முன்னை அணிமேல்
அணிசெய் தலங்கரித்தார்.
138

மன்னிய அன்பின் வளநகர்
மாந்தர் வயங்கிழையார்
இன்னிய நாதமும் ஏழிசை
ஓசையும் எங்கும்விம்மப்
பொன்னியல் சுண்ணமும் பூவும்
பொரிகளுந் தூவியெங்குந்
தொன்னக ரின்புறஞ் சூழ்ந்தெதிர்
கொண்டனர் தொண்டரையே.
139

தூயவெண் ணீறு துதைந்தபொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ்
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயும் உடையார்
புகுந்தனர் வீதியுள்ளே.
140
Go to top

கண்டார்கள் கைதலை மேற்குவித்
திந்தக் கருணைகண்டால்
மிண்டாய செய்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச்செற்றம்
உண்டா யினவண்ணம் எவ்வண்ணம்
என்றுரைப் பார்கள்பின்னுந்
தொண்டாண்டு கொண்ட பிரானைத்
தொழுது துதித்தனரே.
141

இவ்வண்ணம் போல எனைப்பல
மாக்கள் இயம்பியேத்த
மெய்வண்ண நீற்றொளி மேவும்
குழாங்கள் விரவிச்செல்ல
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும்
வந்தெய்தி அம்பவளச்
செவ்வண்ணர் கோயில் திருவீரட்
டானத்தைச் சேர்ந்தனரே.
142

உம்பர்தங் கோனை உடைய
பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு
காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன்
நான்பண் டிகழ்ந்ததென்று
தம்பரி வால்திருத் தாண்டகச்
செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
143

அரிஅயனுக் கரியானை
அடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை
வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தன்மைத்
திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப்
பலபாடிப் பணிசெயுநாள்.
144

புல்லறிவிற் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய
பழவினைப்பா சம்பறிய
அல்லல்ஒழிந் தங்கெய்தி
ஆண்டஅர சினைப்பணிந்து
வல்அமணர் தமைநீத்து
மழவிடையோன் தாளடைந்தான்.
145
Go to top

வீடறியாச் சமணர்மொழி
பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை
நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில்அமண்
பள்ளியொடு பாழிகளுங்
கூடஇடித் துக்கொணர்ந்து
குணபரவீச் சரம்எடுத்தான்.
146

இந்நாளில் திருப்பணிகள்
செய்கின்ற இன்றமிழ்க்கு
மன்னான வாகீசத்
திருமுனியும் மதிச்சடைமேல்
பன்னாகம் அணிந்தவர்தம்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ்புனைந்து
தொண்டுசெய்வான் தொடர்ந்தெழுவார்.
147

திருவதிகைப் பதிமருங்கு
திருவெண்ணெய் நல்லூரும்
அருளுதிரு ஆமாத்தூர்
திருக்கோவ லூர்முதலா
மருவுதிருப் பதிபிறவும்
வணங்கிவளத் தமிழ்பாடிப்
பெருகுவிருப் புடன்விடையார்
மகிழ்பெண்ணா கடம்அணைந்தார்.
148

கார்வளரும் மாடங்கள்
கலந்தமறை ஒலிவளர்க்குஞ்
சீருடைஅந் தணர்வாழுஞ்
செழும்பதியின் அகத்தெய்தி
வார்சடையார் மன்னுதிருத்
தூங்கானை மாடத்தைப்
பார்பரவுந் திருமுனிவர்
பணிந்தேத்திப் பரவினார்.
149

புன்னெறியாம் அமண்சமயத்
தொடக்குண்டு போந்தவுடல்
தன்னுடனே உயிர்வாழத்
தரியேன்நான் தரிப்பதனுக்
கென்னுடைய நாயகநின்
இலச்சினையிட் டருளென்று
பன்னுசெழுந் தமிழ்மாலை
முன்னின்று பாடுவார்.
150
Go to top

பொன்னார்ந்த திருவடிக்கென்
விண்ணப்பம் என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும்
முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங்
கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம்
நலஞ்சிறக்கப் பாடுதலும்.
151

நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.
152

ஆங்கவர்தந் திருத்தோளில்
ஆர்ந்ததிரு இலச்சினையைத்
தாங்கண்டு மனங்களித்துத்
தம்பெருமான் அருள்நினைந்து
தூங்கருவி கண்பொழியத்
தொழுதுவிழுந் தார்வத்தால்
ஓங்கியசிந் தையராகி
உய்ந்தொழிந்தேன் எனவெழுந்தார்.
153

தூங்கானை மாடத்துச்
சுடர்க்கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத்தொண்டு
செய்துபயின் றமருநாள்
பூங்கானம் மணங்கமழும்
பொருவில்திரு அரத்துறையுந்
தேங்காவின் முகிலுறங்குந்
திருமுதுகுன் றமும்பணிந்து.
154

வண்டமிழ்மென் மலர்மாலை
புனைந்தருளி மருங்குள்ள
தண்டுறைநீர்ப் பதிகளிலுந்
தனிவிடையார் மேவியிடங்
கொண்டருளுந் தானங்கள்
கும்பிட்டுக் குணதிசைமேல்
புண்டரிகத் தடஞ்சூழ்ந்த
நிவாக்கரையே போதுவார்.
155
Go to top

ஆனாத சீர்த்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடைபரக்கும்
மலர்ச்சடையார் அடிவணங்கி
ஊனாலும் உயிராலும்
உள்ளபயன் கொளநினைந்து
தேனாரும் மலர்ச்சோலைத்
திருப்புலியூர் மருங்கணைந்தார்.
156

நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்
நடமா டியதிரு எல்லைப்பால்
மேவித் தலமுற மெய்யில் தொழுதபின்
மேன்மேல் எழுதரும் விழைவோடுங்
காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதிர்
ஆடக் கடிகமழ் கமலஞ்சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழிவந்தார்.
157

முருகிற் செறியிதழ் முளரிப் படுகரில்
முதுமே திகள்புது மலர்மேயும்
அருகிற் செறிவன மெனமிக் குயர்கழை
அளவிற் பெருகிட வளரிக்குப்
பெருகிப் புடைமுதிர் தரளஞ் சொரிவன
பெரியோர் அவர்திரு வடிவைக்கண்
டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன
எனமுன் புளவள வயலெங்கும்.
158

அறிவிற் பெரியவர் அயல்நெற் பணைவயல்
அவைபிற் படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகைநெறி விடுவீர் இருவினை
பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற் றிடஅணை யுமின்என் றிருபுடை
பயில்சூழ் சினைமிசை குயில்கூவுஞ்
செறிவிற் பலதரு நிலையிற் பொலிவுறு
திருநந் தனவனம் எதிர்கண்டார்.
159

அவர்முன் பணிவொடு தொழுதங் கணைவுற
அணிகொம் பரின்மிசை அருகெங்கும்
தவமுன் புரிதலில் வருதொண் டெனுநிலை
தலைநின் றுயர்தமிழ் இறையோராம்
இவர்தந் திருவடி வதுகண் டதிசயம்
எனவந் தெதிர்அர கரவென்றே
சிவமுன் பயில்மொழி பகர்கின் றனவளர்
சிறைமென் கிளியொடு சிறுபூவை.
160
Go to top

அஞ்சொல் திருமறை யவர்முன் பகர்தலும்
அவருந் தொழுதுமுன் அருள்கூரும்
நெஞ்சிற் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறைஅன் பொடும்உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழிஅந் தணர்பயில்
தில்லைத் திருநகர் எல்லைப்பால்
மஞ்சிற் பொலிநெடு மதில்சூழ் குடதிசை
மணிவா யிற்புறம் வந்துற்றார்.
161

அல்லல் பவம்அற அருளுந் தவமுதல்
அடியார்எதிர்கொள அவரோடும்
மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின்
வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார்
கல்வித் துறைபல வருமா மறைமுதல்
கரைகண் டுடையவர் கழல்பேணுஞ்
செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர்
சிவமே நிலவிய திருவீதி.
162

நவமின் சுடர்மணி நெடுமா லையுநறு
மலர்மா லையுநிறை திருவீதிப்
புவனங் களின்முதல் இமையோர் தடமுடி
பொருதுந் தியமணி போகட்டிப்
பவனன் பணிசெய வருணன் புனல்கொடு
பணிமா றவுமவை பழுதாமென்
றெவருந் தொழுதெழும் அடியார் திருவல
கிடுவார் குளிர்புனல் விடுவார்கள்.
163

மேலம் பரதலம் நிரையுங் கொடிகளில்
விரிவெங் கதிர்நுழை வரிதாகுங்
கோலம் பெருகிய திருவீ தியைமுறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலந் திகழ்திரு மறையின் பெருகொலி
நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலையேழ் கோபுரம்
உறமெய் கொடுதொழு துள்புக்கார்.
164

வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும்
அன்பின் கடல்நிறை உடலெங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி
பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.
165
Go to top

நீடுந் திருவுடன் நிகழும் பெருகொளி
நிறைஅம் பலம்நினை வுறநேரே
கூடும் படிவரும் அன்பால் இன்புறு
குணமுன் பெறவரு நிலைகூடத்
தேடும் பிரமனும் மாலுந் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவொன்றா
ஆடுங் கழல்புரி அமுதத் திருநடம்
ஆரா வகைதொழு தார்கின்றார்.
166

கையுந் தலைமிசை புனைஅஞ் சலியன
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.
167

இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ
என்றெய் தினையென மன்றாடும்
அத்தன் திருவருள் பொழியுங் கருணையின்
அருள்பெற் றிடவரும் ஆனந்தம்
மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி
பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திருநே ரிசைமொழி பகர்கின்றார்.
168

பத்தனாய்ப் பாட மாட்டேன்
என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
அத்தாஉன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறென்
றித்திறம் போற்றி நின்றே
இன்தமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யுங்
காதலிற் பணிந்து போந்தார்.
169

நீடிய மணியின் சோதி
நிறைதிரு முன்றின் மாடும்
ஆடுயர் கொடிசூழ் பொற்றேர்
அணிதிரு வீதி யுள்ளுங்
கூடிய பணிகள் செய்து
கும்பிடுந் தொழில ராகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார்.
170
Go to top

அருட்பெரு மகிழ்ச்சி பொங்க
அன்னம்பா லிக்கும் என்னும்
திருக்குறுந் தொகைகள் பாடித்
திருவுழ வாரங் கொண்டு
பெருத்தெழு காத லோடும்
பெருந்திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
வெண்ணீற்று வண்டல் ஆட.
171

மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
சென்றுமுன் வணங்கிப் பாடிக்
காவியங் கண்டர் மன்னுந்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக் கரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ.

172

சினவிடைஏ றுகைத்தேறும் மணவாள
நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
தானவனே என்கின் றாள்என்
றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்
டமிழ்பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப்
புலியூரை நினைந்து மீள்வார்.
173

மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங்
கழிப்பாலை மருங்கு நீங்கி
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு
வழிக்கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும்
அம்பலத்து நிருத்த னாரைத்
தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ
எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
174

அரியானை என்றெடுத்தே அடியவருக்
கெளியானை அவர்தஞ் சிந்தை
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் பிறங்கு சோதி
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்
அம்பலத்து மேவி ஆடல்
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி
ழாற்பின்னும் போற்றல் செய்வார்.
175
Go to top

செஞ்சடைக் கற்றைமுற்றத் திளநிலா
எறிக்குமெனுஞ் சிறந்த வாய்மை
அஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம்
படிபாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும்
பரவியசொல் நிறைந்த வாயும்
தஞ்செயலியன் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில்.
176

கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்
கழுமலத்தின் இருந்த செங்கண்
விடையுகைத்தார் திருவருளால் வெற்பரையன்
பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங்
குழைத்தூட்ட அமுது செய்த
உடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
177

ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண் டமிழ்மாலை இவன்எம்மான்
எனக்காட்டி இயம்ப வல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே
அதிசயமாங் காதல் கூர
வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு
மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப.
178

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி
புரண்டுவலங் கொண்டு போந்தே
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச் செல்வார்.
179

தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத்
தொடுநீறு துதைந்த கோலங்
கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங்
கருணைபுறம் பொழிந்து காட்டத்
தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறுந்
திருநாவுக் கரசர் தாமும்
வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான்
திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
180
Go to top

நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை
மடுத்தருளி நேரே முன்னாள்
ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி
ஆளுடைய பிள்ளை யாருங்
காண்தகைய பெருவிருப்புக் கைம்மிக்க
திருவுள்ளக் கருத்தி னோடு
மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ
எழுந்தருளி முன்னே வந்தார்.
181

தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்
தொண்டர் குழாத் திடையே சென்று
பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி
விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
எனஅவரும் அடியேன் என்றார்.
182

அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா
னங்கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்
கரசரெனச் சிறந்த சீர்த்தி
எம்பெருமக் களும்இயைந்த கூட்டத்தில்
அரனடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகும்
ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
183

பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்
றரசுவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமைவணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளநிறை காதலினால் ஒருவர்ஒரு
வரிற்கலந்த உண்மை யோடும்
வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
184

அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனம் உய்ய
இருட்கடுவுண் டவர்அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித்
தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று
செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே.
185
Go to top

பண்பயில்வண் டறைசோலை சூழுங் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானந் தன்னை
வலங்கொண்டு தொழுதுவிழுந் தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரா னாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி.
186

பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது
பேணிவீற் றிருந்தருளும் பிரான்முன் நின்று
பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தி யோடும்
பார்கொண்டு மூடியெனும் பதிகம் போற்றி
அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம்
திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல்
வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.
187

அத்தன்மை யினில்அரசும் பிள்ளை யாரும்
அளவளா வியமகிழ்ச்சி அளவி லாத
சித்தநெகிழ்ச் சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக் கரசர்திரு வுள்ளந் தன்னில்
மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு
மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு
விளம்புதலும் அவரும்அது மேவி நேர்வார்.
188

ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவை
அவரோடும் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டருளி னார்அவரும் விடைகொண் டிப்பால்
வேதநா யகர்விரும்பும் பதிக ளான
நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர்
நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.
189

மேவுபுனற் பொன்னிஇரு கரையும் சார்ந்து
விடையுயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
காவுயரு மயிலாடு துறைநீள் பொன்னிக்
கரைத்துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி
பாவுறு செந் தமிழ்மாலை பாடிப் போற்றிப்
பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே
ஆவுறும்அஞ் சாடுவார் கோடி காவில்
அணைந்துபணிந் தாவடுதண் டுறையைச் சார்ந்தார்.
190
Go to top

ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்என்
றளவில் திருத் தாண்டகமுன் அருளிச் செய்து
மேவுதிருக் குறுந்தொகைநே ரிசையும் சந்த
விருத்தங்க ளானவையும் வேறு வேறு
பாவலர்செந் தமிழ்த்தொடையால் பள்ளித் தாமம்
பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும்
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப்
புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.
191

எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு
மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி
வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப்
பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றியருந் தமிழ்மாலை புனைந்து போந்து
செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித்
திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.
192

சென்று சேர்ந்து திருச்சத்தி
முற்றத் திருந்த சிவக்கொழுந்தைக்
குன்ற மகள்தன் மனக்காதல்
குலவும் பூசை கொண்டருளும்
என்றும் இனிய பெருமானை
இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்துதமிழ்
மொழிமா லைகளும் சாத்துவார்.
193

கோவாய் முடுகி என்றெடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவார் அடிகள் என்தலைமேற்
பொறித்து வைப்பாய் எனப்புகன்று
நாவார் பதிகம் பாடுதலும்
நாதன் தானும் நல்லூரில்
வாவா என்றே அருள்செய்ய
வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
194

நன்மைபெரு கருள்நெறியே
வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார்
வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிக்கின்றோம் என்றவர்தம்
சென்னிமிசைப் பாதமலர்
சூட்டினான் சிவபெருமான்.
195
Go to top

நனைந்தனைய திருவடிஎன்
தலைமேல்வைத் தார்என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால்
போற்றிசைத்துப் புனிதர்அருள்
நினைந்துருகி விழுந்தெழுந்து
நிறைந்துமலர்ந் தொழியாத
தனம்பெரிதும் பெற்றுவந்த
வறியோன்போல் மனம்தழைத்தார்.
196

நாவுக்கு மன்னர்திரு
நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள்
மேவுறநா ளும்செய்து
பாவுற்ற தமிழ்மாலை
பலபாடிப் பணிந்தேத்தித்
தேவுற்ற திருத்தொண்டு
செய்தொழுகிச் செல்லுநாள்.
197

கருகாவூர் முதலாகக்
கண்ணுதலோன் அமர்ந்தருளும்
திருவாவூர் திருப்பாலைத்
துறைபிறவும் சென்றிறைஞ்சிப்
பெருகார்வத் திருத்தொண்டு
செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே
உள்ளுருகிப் பணிகின்றார்.
198

ஆளுடைய நாயகன்தன்
அருள்பெற்றங் ககன்றுபோய்
வாளைபாய் புனற்பழனத்
திருப்பழன மருங்கணைந்து
காளவிடம் உண்டிருண்ட
கண்டர்பணிக் கலன்பூண்டு
நீள்இரவில் ஆடுவார்
கழல்வணங்க நேர்பெற்றார்.
199

அப்பதியைச் சூழ்ந்ததிருப்
பதியில்அர னார்மகிழும்
ஒப்பரிய தானங்கள்
உள்ளுருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர்
நாவினுக்கு வேந்தர்தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளூர் திங்களூர்.
200
Go to top

அந்தணரின் மேம்பட்ட
அப்பூதி அடிகளார்
தந்தனய ருடன்சாலை
கூவல்குளந் தருதண்ணீர்ப்
பந்தர்பல ஆண்டஅர
செனும்பெயரால் பண்ணினமை
வந்தணைந்த வாகீசர்
கேட்டவர்தம் மனைநண்ண.
201

மற்றவரும் மனமகிழ்ந்து
மனைவியார் மைந்தர்பெருஞ்
சுற்றமுடன் களிகூரத்
தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக்
கொற்றவரை அமுதுசெயக்
குறைகொள்வார் இறைகொள்ளப்
பெற்றபெருந் தவத்தொண்டர்
திருவுள்ளம் பெறப்பெற்றார்.
202

காண்டகைமை இன்றியும்முன்
கலந்தபெருங் கேண்மையினார்
பூண்டபெருங் காதலுடன்
போனகமுங் கறியமுதும்
வேண்டுவன வெவ்வேறு
விதங்கள்பெற விருப்பினால்
ஆண்டஅர சமுதுசெயத்
திருவமுதாம் படிஅமைத்து.
203

திருநாவுக் கரசமுது
செய்தருள மற்றவர்தம்
பெருநாமஞ் சாத்தியஅப்
பிள்ளைதனை அழைத்தன்பு
தருஞானத் திருமறையோர்
தண்டலையின் வண்கதலிக்
குருநாளக் குருத்தரிந்து
கொண்டுவரத் தனிவிட்டார்.
204

ஆங்கவனும் விரைந்தெய்தி
அம்மருங்கு தாழாதே
பூங்கதலிக் குருத்தரியப்
புகும்அளவில் ஒருநாகம்
தீங்கிழைக்க அதுபேணான்
திருவமுது செய்தருள
ஓங்குகத லிக்குருத்துக்
கொண்டொல்லை வந்தணைந்தான்.
205
Go to top

தீயவிடந் தலைக்கொள்ளத்
தெருமந்து செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினில்நீட்டித்
தளர்ந்துதனைத் தழல்நாகம்
மேயபடி உரைசெய்யான்
விழக்கண்டு கெட்டொழிந்தேம்
தூயவரிங் கமுதுசெயத்
தொடங்கார்என் றதுஒளித்தார்.
206

தம்புதல்வன் சவம்மறைத்துத்
தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய
வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர்பிரான் திருத்தொண்டர்
உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர்திரு வருளாலே
அறிந்தருளி நவைதீர்ப்பார்.
207

அன்றவர்கள் மறைத்ததனுக்
களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தங்
கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம் எனப்பதிகம்
எடுத்துடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப்
பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.
208

அருந்தனயன் உயிர்பெற்ற
அதுகண்டும் அமுதுசெயா
திருந்ததற்குத் தளர்வெய்தி
இடருழந்தார் துயர்நீங்க
வருந்துமவர் மனைப்புகுந்து
வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி
விருப்பினுடன் மேவுநாள்.
209

திங்களூர் தனில்நின்றும்
திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகர்
திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெருங் காதலொடுந்
தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கியஅன் பொடுவணங்கி
முன்னின்று போற்றிசைப்பார்.
210
Go to top

புடைமாலை மதிக்கண்ணிப்
புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை
அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து
நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச்
சொல்மாலை பாடினார்.
211

எழும்பணியும் இளம்பிறையும்
அணிந்தவரை எம்மருங்குந்
தொழும்பணிமேற் கொண்டருளித்
திருச்சோற்றுத் துறைமுதலாத்
தழும்புறுகேண் மையில்நண்ணித்
தானங்கள் பலபாடிச்
செழும்பழனத் திறைகோயில்
திருத்தொண்டு செய்திருந்தார்.
212

சாலநாள் அங்கமர்ந்து
தந்தலைமேல் தாள்வைத்த
ஆலமார் மணிமிடற்றார்
அணிமலர்ச்சே வடிநினைந்து
சேலுலாம் புனற்பொன்னித்
தென்கரையே றிச்சென்று
கோலநீள் மணிமாடத்
திருநல்லூர் குறுகினார்.
213

அங்கணைந்து தம்பெருமான்
அடிவணங்கி ஆராது
பொங்கியஅன் பொடுதிளைத்துப்
போற்றிசைத்துப் பணிசெயுநாள்
தங்குபெருங் காதலினால்
தாமரைமேல் விரிஞ்சனொடு
செங்கண்மால் அறிவரியார்
திருவாரூர் தொழநினைந்தார்.
214

நல்லூரில் நம்பரருள்
பெற்றுப்போய்ப் பழையாறை
பல்லூர்வெண் தலைக்கரத்தார்
பயிலுமிடம் பலபணிந்து
சொல்லூர்வண் டமிழ்பாடி
வலஞ்சுழியைத் தொழுதேத்தி
அல்லூர்வெண் பிறையணிந்தார்
திருக்குடமூக் கணைந்திறைஞ்சி.
215
Go to top

நாலூர்தென் திருச்சேறை
குடவாயில் நறையூர்சேர்
பாலூரும் இன்மொழியாள்
பாகனார் கழல்பரவி
மேலூர்தி விடைக்கொடியார்
மேவுமிடம் பலபாடிச்
சேலூர்தண் பணைசூழ்ந்த
தென்திருவாஞ் சியம்அணைந்தார்.
216

பெருவாச மலர்ச்சோலைப்
பெருவேளூர் பணிந்தேத்தி
முருகாரும் மலர்க்கொன்றை
முதல்வனார் பதிபிறவும்
திருவாரும் விளமருடன்
சென்றிறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர்தந்
திருவாரூர் வந்தடைந்தார்.
217

ஆண்டஅர செழுந்தருள
ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால்
நிறைந்தஅருள் பெற்றுடையார்
காண்டகுமா ளிகைமாடங்
கவின்சிறந்தோங் கிடஎங்குஞ்
சேண்திகழ்வீ திகள்பொலியத்
திருமலிமங் கலஞ்செய்தார்.
218

வல்அமண் குண்டர்தம் மாயை
கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர்
வந்தார் எனுங்களிப்பால்
எல்லையில் தொண்டர் எயிற்புறஞ்
சென்றெதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித்
தொழுதுரை செய்தணைவார்.
219

பற்றொன் றிலாவரும் பாதகர்
ஆகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந்
தேன்பெற லாவதொன்றே
புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமென்
றற்ற உணர்வொடும் ஆரூர்த்
திருவீதி உள்ளணைந்தார்.
220
Go to top

சூழுந் திருத்தொண்டர் தம்முடன்
தோரண வாயில்நண்ணி
வாழி திருநெடுந் தேவா
சிரியன்முன் வந்திறைஞ்சி
ஆழி வரைத்திரு மாளிகை
வாயில் அவைபுகுந்து
நீள்சுடர் மாமணிப் புற்றுகந்
தாரைநேர் கண்டுகொண்டார்.
221

கண்டு தொழுது விழுந்து
கரசர ணாதிஅங்கங்
கொண்ட புளகங்க ளாக
எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத்
திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித்
திருத்தாண் டகம்புனைந்து.
222

காண்ட லேகருத் தாய்நினைந்
தென்னுங் கலைப்பதிகம்
தூண்டா விளக்கன்ன சோதிமுன்
நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ
வலஞ்செய் திறைஞ்சியன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு
வாயிற் புறத்தணைந்தார்.
223

செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின்
முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேன்என்
றெய்தரிய கையறவாந் திருப்பதிகம்
அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
224

மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந்
திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகுந் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளுஞ் செம்பொற் றாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.
225
Go to top

நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப்
புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து
கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடிளம்பூ தத்தினான் எனும்பதிகம்
முதலான பலவும் பாடி
நாடியஆர் வம்பெருக நைந்துமனங்
கரைந்துருகி நயந்து செல்வார்.
226

நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி
அடிகள்திருத் தொண்டின் நன்மைப்
பான்மைநிலை யால்அவரைப் பரமர்திரு
விருத்தத்துள் வைத்துப் பாடித்
தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர்
அரனெறியில் திகழுந் தன்மை
ஆனதிற மும்போற்றி அணிவீதிப்
பணிசெய்தங் கமரும் நாளில்.
227

நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து சென்று
வாராரு முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக்
காராருங் கறைக்கண்டர் கீழ்வேளூர்
கன்றாப்பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர்
தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.
228

மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங்
கப்பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள்முன் சேவிக்கும்
அடியார்க ளுடன்சே வித்து
மூவுலகுங் களிகூர வரும்பெருமை
முறைமையெலாங் கண்டு போற்றி
நாவினுக்குத் தனியரசர் நயக்குநாள்
நம்பர்திரு அருளி னாலே.
229

திருப்புகலூர் அமர்ந்தருளுஞ் சிவபெருமான்
சேவடிகள் கும்பிட் டேத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவியெழுங்
காதல்புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு
தொழுதகன்றங் குள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர்
பதிபிறவும் பணிந்து போந்தார்.
230
Go to top

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார்
திருப்புகலி அதன்கண் நின்றும்
பன்னாகப் பூணணிவார் பயின்றதிருப்
பதிபலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணங்கமழும் பூம்புகலூர்
வந்திறைஞ்சிப் பொருவில் சீர்த்தி
மின்னாரும் புரிமுந்நூல் முருகனார்
திருமடத்தில் மேவுங் காலை.
231

ஆண்டஅர செழுந்தருளி அணியாரூர்
மணிப்புற்றில் அமர்ந்து வாழும்
நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு
நீடுதிருப் புகலூர் நோக்கி
மீண்டருளி னாரென்று கேட்டருளி
எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டுபெருந் தொண்டர்குழாம் புடைசூழ
வெழுந்தருளி எதிரே சென்றார்.
232

கரண்டமலி தடம்பொய்கைக் காழியர்கோன்
எதிரணையுங் காதல் கேட்டு
வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும்
வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாம்
இருதிறமுஞ் சேர்ந்த போதில்
இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி
அணைந்தனபோல் இசைந்த அன்றே.
233

திருநாவுக் கரசரெதிர் சென்றிறைஞ்சத்
சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்
பெருஞான சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி அப்ப ரேநீர்
வருநாளில் திருவாரூர் நிகழ்பெருமை
வகுத்துரைப்பீர் என்று கூற
அருநாமத் தஞ்செழுத்தும் பயில்வாய்மை
அவரு மெதிர் அருளிச் செய்வார்.
234

சித்தம் நிலாவுந் தென்திரு
வாரூர் நகராளும்
மைத்தழை கண்டர் ஆதிரை
நாளின் மகிழ்செல்வம்
இத்தகை மைத்தென் றென்மொழி
கேனென் றுரைசெய்தார்
முத்து விதான மணிப்பொற்
கவரி மொழிமாலை.
235
Go to top

அம்மொழி மாலைச் செந்தமிழ்
கேளா அணிசண்பை
மைம்மலி கண்டத் தண்டர்
பிரானார் மகனாரும்
கொய்ம்மலர் வாவித் தென்திரு
வாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்திங் குடன்அமர்
வேன்என் றுரைசெய்தார்.
236

மாமதில் ஆரூர் மன்னரை
அங்கு வணங்கச்செந்
தாமரை யோடைச் சண்பையர்
நாதன் தான்ஏக
நாமரு சொல்லின் நாதரும்
ஆர்வத் தொடுபுக்கார்
பூமலர் வாசத் தண்பணை
சூழும் புகலூரில்.
237

அத்திரு மூதூர் மேவிய
நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு
தெவிட்டுந் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி
நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண்அணி
வாரைப் பணிவுற்றார்.
238

தேவர் பிரானைத் தென்புக
லூர்மன் னியதேனைப்
பாவியல் மாலைச் செந்தமிழ்
பாடிப் பரிவோடும்
மேவிய காலந் தோறும்
விருப்பிற் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி
செய்தங் குறைகின்றார்.

239

சீர்தரு செங்காட் டங்குடி
நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு
சாந்தை அயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு
பாகன் திருமருகல்
ஏர்தரும் அன்பால் சென்று
வணங்கி இன்புற்றார்.

240
Go to top

அப்படிச் சின்னாள் சென்றபின்
ஆரூர் நகராளும்
துப்புறழ் வேணிக் கண்ணுத
லாரைத் தொழுதிப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர்
வேணு புரத்தெங்கள்
பொற்புரி முந்நூல் மார்பரும்
வந்தார் புகலூரில்.
241

பிள்ளையார் எழுந்தருளப்
பெருவிருப்பால் வாகீசர்
உள்ளம்மகிழ்ந் தெதிர்கொண்டங்
குடனுறையு நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர்
மற்றவர்பால் எழுந்தருள
எள்ளருஞ்சீர் நீலநக்கர்
தாமும்எழுந் தருளினார்.
242

ஆங்கணையும் அவர்களுடன்
அப்பதியில் அந்தணராம்
ஓங்குபுகழ் முருகனார்
திருமடத்தில் உடனாகப்
பாங்கில்வரும் சீரடியார்
பலருமுடன் பயில்கேண்மை
நீங்கரிய திருத்தொண்டின்
நிலையுணர்ந்து நிகழ்கின்றார்.
243

திருப்பதிகச் செழுந்தமிழின்
திறம்போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை
இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர்
பெருமையினை விரித்துரைத்தங்
கொருப்படுசிந் தையினார்கள்
உடனுறைவின் பயன்பெற்றார்.

244

அந்நாளில் தமக்கேற்ற
திருத்தொண்டின் நெறியாற்ற
மின்னார்செஞ் சடைஅண்ணல்
மேவுபதி எனைப்பலவும்
முன்னாகச் சென்றேத்தி
முதல்வன்தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணிமாடப்
பூம்புகலூர் தொழுதகன்றார்.
245
Go to top

திருநீல நக்கடிகள்
சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள்
பிறரும்விடை கொண்டேக
ஒருநீர்மை மனத்துடைய
பிள்ளையா ருடன்அரசும்
வருநீர்செஞ் சடைக்கரந்தார்
திருஅம்பர் வணங்கினார்.
246

செங்குமுத மலர்வாவித்
திருக்கடவூர் அணைந்தருளிப்
பொங்கியவெங் கூற்றடர்த்த
பொன்னடிகள் தொழுதேத்திக்
குங்குலியக் கலயனார்
திருமடத்தில் குறைவறுப்ப
அங்கவர்பால் சிவனடியா
ருடன்அமுது செய்தார்கள்.
247

சீர்மன்னுந் திருக்கடவூர்த்
திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும் இன்னிசைப்பாப்
பலபாடி இனிதமர்ந்து
கார்மன்னுங் கறைக்கண்டர்
கழலிணைகள் தொழுதகன்று
தேர்மன்னும் மணிவீதித்
திருவாக்கூர் சென்றணைந்தார்.

248

சார்ந்தார்தம் புகலிடத்தைத்
தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்தார்வம் உறப்பணிந்து
கோதில்தமிழ்த் தொடைபுனைந்து
வார்ந்தாடுஞ் சடையார்தம்
பதிபலவும் வணங்கியுடன்
சேர்ந்தார்கள் தம்பெருமான்
திருவீழி மிழலையினை.
249

வீழி மிழலை வந்தணைய
மேவு நாவுக் கரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும்
கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத
அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு
வணங்க வணங்கி உள்புக்கார்.
250
Go to top

மாட வீதி அலங்கரித்து
மறையோர் வாயின் மணிவிளக்கு
நீடு கதலி தழைப்பூகம்
நிரைத்து நிறைபொற் குடமெடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளை யாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண்ணிழிந்த
கோயில் வாயில் சென்றணைந்தார்.
251

சென்றுள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் வலமா வந்துதிரு
முன்றில் வணங்கி முன்னெய்தி
முக்கட் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார்.
252

கைகள் குவித்துக் கழல்போற்றிக்
கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி
விரவப் பரவுஞ் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார்
தீங்கு நெறிசேர் கின்றார்என்
றுய்யு நெறித்தாண் டகம்மொழிந்தங்
கொழியாக் காதல் சிறந்தோங்க.
253

முன்னாள் அயனுந் திருமாலும்
முடியும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணிவெற்பைப்
பூநீர் மிழலை யினில்போற்றிப்
பன்னாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட் டிருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
254

சீரின் விளங்குந் திருத்தொண்டர்
இருந்து சிலநாள் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி
நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
படர்கூர் வறுமை பரந்ததால்.
255
Go to top

வையம் எங்கும் வற்கடமாய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக் கரசருக்கும்
கையில் மானும் மழுவுமுடன்
காணக் கனவில் எழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி
மிழலை உடையார் அருள்செய்வார்.
256

கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறீர்எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின் றோம்என்று
கோலங் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்.
257

விண்ணின் றிழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்டகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறுங்காசு
படிவைத் தருள நானிலத்தில்
எண்ணில் அடியா ருடன்அமுது
செய்தங் கிருந்தார் இருவர்களும்.
258

அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.
259

ஈசர் மிழலை இறையவர்பால்
இமையப் பாவை திருமுலைப்பால்
தேசம் உய்ய உண்டவர்தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசி யுடன்பெற்றார்
கைத்தொண் டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி
பெற்று வந்தார் வாகீசர்.
260
Go to top

ஆறு சடைமேல் அணிந்தருளும்
அண்ணல் வைத்த படிக்காசால்
ஈறி லாத பொருளுடைய
இருவ ருடைய திருமடங்கள்
சோறு நாளுந் தொண்டர்மகிழ்ந்
துண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவிபோற்ற
இன்புற் றிருக்கும் அந்நாளில்.
261

காலந் தவறு தீர்ந்தெங்கும்
கலிவான் பொழிந்து புனல்கலந்து
ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி
உணவு பெருகி நலஞ்சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
மொழிமா லைகளும் பலசாத்தி
நீல கண்டர் உறைபதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார்.
262

வாய்ந்த மிழலை மாமணியை
வணங்கிப் பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பி னாலிறைஞ்சி
இசைவண் டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்கா
டெல்லை இல்லாச் சீர்த்தியினார்.
263

மன்றல் விரவு மலர்ப்புன்னை
மணஞ்சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறுஞ் சிறுமடவார்
முத்தங் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக்
கோவும் அரசுந் திருமுன்பு.
264

பரவை ஓதக் கழிக்கானற்
பாங்கு நெருங்கும் அப்பதியில்
அரவச் சடைஅந் தணனாரை
அகில மறைகள் அர்ச்சனைசெய்
துரவக் கதவந் திருக்காப்புச்
செய்த அந்நாள் முதல்இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
மணிநீள் வாயில் வணங்குவார்.
265
Go to top

தொல்லை வேதந் திருக்காப்புச்
செய்த வாயில் தொடர்வகற்ற
வல்ல அன்பர் அணையாமை
மருங்கோர் வாயில் வழியெய்தி
அல்லல் தீர்ப்பார் தமையருச்சிப்
பார்கள் தொழுவா ராம்படிகண்
டெல்லை யில்லாப் பெரும்புகழார்
இதனை அங்குக் கேட்டறிந்தார்.
266

ஆங்கப் பரிசை அறிந்தருளி
ஆழித் தோணி புரத்தரசர்
ஓங்கு வேதம் அருச்சனைசெய்
உம்பர் பிரானை உள்புக்குத்
தேங்கா திருவோம் நேர்இறைஞ்சத்
திருமுன் கதவந் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பரென
நீடுந் திருநா வுக்கரசர்.
267

உண்ணீர் மையினால் பிள்ளையார்
உரைசெய் தருள அதனாலே
பண்ணி னேரு மொழியாள்என்
றெடுத்துப் பாடப் பயன்துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு
நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப்
பெண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும்.
268

வேத வனத்தின் மெய்ப்பொருளின்
அருளால் விளங்கு மணிக்கதவங்
காதல் அன்பர் முன்புதிருக்
காப்பு நீங்கக் கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கெழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறையொலியும்.
269

அன்பர் ஈட்டங் களிசிறப்ப
ஆண்ட அரசும் சிவக்கன்றும்
இன்ப வெள்ளத் திடைமூழ்கி
எழுந்துள் புகுந்து தம்பெருமான்
முன்பு பணிந்து போற்றிசைத்துப்
பரவி மொழிமா லைகள்பாடி
என்பு கரைய உள்ளுருகி
இறைஞ்சி அரிதிற் புறத்தணைந்தார்.
270
Go to top

புறம்பு நின்ற வாகீசர்
புனிதர் அருளால் இக்கதவந்
திறந்தும் அடைத்துஞ் செல்லுநெறி
திருந்த மலையாள் திருமுலையிற்
கறந்த ஞானங் குழைத்தமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும்வகை
நீரும் பாடி அருளுமென.
271

சண்பை ஆளுந் தமிழ்விரகர்
தாமும் திருநா வுக்கரசர்
பண்பின் மொழிந்த உரைகொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண்பொற் பமைந்த நுதற்காள
கண்டர் அருளால் கடிதுடனே
திண்பொற் கதவந் திருக்காப்புச்
செய்த தெடுத்த திருப்பாட்டில்.

272

அதுகண் டுடைய பிள்ளையார்
தாமும் ஆண்ட அரசும்மகிழ்ந்
திதுநம் பெருமான் அருள்செய்யப்
பெற்றோம் என்றங் கிறைஞ்சியபின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார்
பாடித் தொழுது பணிவுற்றார்
எதிர்பொற் றிருவா யிலின்வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியதால்.
273

அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்
டடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திடமெய்
பொழியுங் கண்ணீர் பாய்ந்திழிய
எங்கும் நிகரொன் றில்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெருந்தகையும்
அரசும் மடத்தில் நண்ணியபின்.

274

அரிதில் திறக்கத் தாம்பாட
அடைக்க அவர்பா டியஎளிமை
கருதி நம்பர் திருவுள்ளம்
அறியா தயர்ந்தேன் எனக்கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
ஒருபால் அணைந்து பேழ்கணித்து
மருவும் உணர்வில் துயில்கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர்.
275
Go to top

மன்னுஞ் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண்
உமையோர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு
புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி அவர்க்கு வாய்மூரில்
இருப்போந் தொடர வாவென்றார்.
276

போதம் நிகழ வாஎன்று
போனார் என்கொல் எனப்பாடி
ஈதெம் பெருமான் அருளாகில்
யானும் போவேன் என்றெழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
விரைந்து போக அவர்முன்னே
ஆதி மூர்த்தி முன்காட்டும்
அவ்வே டத்தால் எழுந்தருள.
277

சீரார் பதியி னின்றெழுந்து
செல்லுந் திருநா வுக்கரசர்
ஆரா அன்பில் ஆரமுதம்
உண்ண எய்தா வாறேபோல்
நீரார் சடையார் எழுந்தருள
நெடிது பின்பு செல்லுமவர்
பேரா ளரைமுன் தொடர்ந்தணையப்
பெறுவார் எய்தப் பெற்றிலரால்.
278

அன்ன வண்ணம் எழுந்தருளி
அணித்தே காட்சி கொடுப்பார்போல்
பொன்னின் கோயில் ஒன்றெதிரே
காட்டி அதனுட் புக்கருளத்
துன்னுந் தொண்டர் அம்மருங்கு
விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார்
தாமுங் கேட்டு வந்தணைந்தார்.

279

அழைத்துக் கொடுபோந் தணியார்போல்
காட்டி மறைந்தார் எனஅயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக் கேயல்லால்
உழைத்தா மொளித்தால் கதவந்தொண்
டுறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார்
தாமிங் கெப்பால் மறைவதென.
280
Go to top

மாட நீடு திருப்புகலி
மன்னர் அவர்க்கு மாலயனும்
நேடி இன்னங் காணாதார்
நேரே காட்சி கொடுத்தருள
ஆடல் கண்டு பணிந்தேத்தி
அரசுங் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்றெடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார்.

281

பாடுந் தமிழ்மா லைகள்கொண்டு
பரமர் தாமும் எழுந்தருள
நீடுந் திருவாய் மூரடைந்து
நிலவுங் கோயில் வலஞ்செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர்
தொழுது போற்றித் துதிசெய்து
நாடுங் காதல் வளர்ந்தோங்க
நயந்தந் நகரில் உடனுறைந்தார்.
282

ஆண்ட அரசும் பிள்ளையார்
உடனே அங்கண் இனிதமர்ந்து
பூண்ட காதல் பொங்கியெழ
வாய்மூர் அடிகள் அடிபோற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காட்
டெய்தி விமலர் தாள்பணிந்தார்.
283

ஆதி முதல்வர் தமைப்பணிந்தங்
கான பணிசெய் தமருநாள்
சீத மதிவெண் குடைவளவர்
மகளார் தென்னன் தேவியார்
கோதில் குணத்துப் பாண்டிமா
தேவி யார்முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர்வந்தார்
புகலி வேந்தர் தமைக்காண.
284

வந்து சிவனார் திருமறைக்கா
டெய்தி மன்னு வேணுபுரி
அந்த ணாளர் தமக்கறிவித்
தவர்பால் எய்தி அடிவணங்கச்
சிந்தை மகிழ்ந்து தீதின்மை
வினவத் தீங்கும் முளவாமோ
இந்த உலகம் உயவந்தீர்
இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.
285
Go to top

சைவ நெறிவை திகம்நிற்கச்
சழக்கு நெறியைத் தவமென்னும்
பொய்வல் அமணர் செயல்தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக்கேட்டே
அவ்வன் தொழிலோர் செயல்மாற்றி
ஆதி சைவ நெறிவிளங்கத்
தெய்வ நீறு நினைந்தெழுந்தார்
சீர்கொள் சண்பைத் திருமறையோர்.
286

ஆய பொழுது திருநாவுக்
கரசு புகலி ஆண்டகைக்குக்
காய மாசு பெருக்கியுழல்
கலதி அமணர் கடுவினைசெய்
மாயை சாலம் மிகவல்லார்
அவர்மற் றென்னை முன்செய்த
தீய தொழிலும் பலகெட்டேன்
செல்ல இசையேன் யான்என்றார்.
287

என்று கூற எல்லையிலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்துடையேன்
அங்குத் தீங்கு புரிஅமணர்
நின்ற நிலைமை அழிவித்துச்
சைவ நெறிபா ரித்தன்றி
ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம
தென்றார் உடைய பிள்ளையார்.
288

போமா துணிந்து நீர்அங்குப்
போதப் போதா அவ்வமணர்
தீமா யையினை யானேபோய்ச்
சிதைத்து வருகின் றேன்என்ன
ஆமா றெல்லாம் உரைத்தவரை
மறுக்க மாட்டா தரசிருப்பத்
தாமா தரவால் தமிழ்நாட்டில்
போனார் ஞானத் தலைவனார்.
289

வேணு புரக்கோன் எழுந்தருள
விடைகொண் டிருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில்
புனிதர் தம்மைப் போற்றிசைத்துப்
பேணி இருந்தங் குறையுநாள்
பெயர்வார் வீழி மிழலையமர்
தாணு வின்தன் செய்யகழல்
மீண்டுஞ் சார நினைக்கின்றார்.
290
Go to top

சோலை மறைக்காட் டமர்ந்தருளுஞ்
சோதி அருள்பெற் றகன்றுபோய்
வேலை விடமுண் டவர்வீழி
மிழலை மீண்டுஞ் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா
ரோணம் பிறவுந் தாம்பணிந்து
சாலு மொழிவண் டமிழ்பாடித்
தலைவர் மிழலை வந்தடைந்தார்.
291

வீழி மிழலை தனைப்பணிந்து
வேத முதல்வர் தாமிருப்ப
ஆழி வலமேந் தியஅரியால்
ஆகா சத்தின் நின்றிழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளைப் போற்றிசைத்துத்
தாழும் நாளிற் பிறபதியும்
பணியுங் காதல் தலைநிற்பார்.
292

பூவிற் பொலியும் புனற்பொன்னிக்
கரைபோய்ப் பணிவார் பொற்பமைந்த
ஆவுக் கருளும் ஆவடுதண்
டுறையார் பாதம் அணைந்திறைஞ்சி
நாவுக் கரசர் ஞானபோ
னகர்க்குச் செம்பொன் ஆயிரமும்
பாவுக் களித்த திறம்போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார்.
293

செய்ய சடையார் பழையாறை
எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்தவட
தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக்
கண்ட வாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.
294

அந்த விமானந் தனக்கருகா
ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக்
கந்த மலருங் கடிக்கொன்றை
முடியார் செய்ய கழலுன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தங் கொண்ட குண்டர்திறம்
பாற்றும் என்று பணிந்திருப்பார்.
295
Go to top

வண்ணங் கண்டு நான்உம்மை
வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார்.
296

அறிவில் அமணர் நமைமறைப்ப
இருந்தோம் என்றங் கடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமையழித்து
நீக்கிப் போக்கென் றருள்புரியச்
செறிவில் அறிவுற் றெழுந்தவனுஞ்
செங்கை தலைமேற் குவித்திறைஞ்சி.
297

கண்ட வியப்பு மந்திரிகட்
கியம்பிக் கூடக் கடிதெய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த
அடையா ளத்தின் வழிகண்டு
குண்டர் செய்த வஞ்சனையைக்
குறித்து வேந்தன் குலவுபெருந்
தொண்டர் தம்மை அடிவணங்கித்
தொக்க அமணர் தூர்அறுத்தான்.
298

ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு
விமான மாக்கி விளக்கியபின்
ஆன வழிபாட் டர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச
ஞான அரசும் புக்கிறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார்.
299

தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலையி லாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணு மோஎன்னும்
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே
இலைகொள் சூலப் படையார்சேர்
இடங்கள் பிறவுந் தொழஅணைவார்.
300
Go to top

பொங்கு புனலார் பொன்னியினில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித்
தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
காவின் மருங்கு சென்றணைந்தார்.
301

சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச்
செஞ்சொல் மாலை பலபாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதி திருச்சிராப்
பள்ளி மலையுங் கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
துறையுந் தொழுவான் நண்ணினார்.
302

மற்றப் பதிகள் முதலான
மருங்குள் ளனவுங் கைதொழுது
பொற்புற் றமைந்த திருப்பணிகள்
செய்து பதிகங் கொடுபோற்றி
உற்ற அருளால் காவிரியை
ஏறி ஒன்னார் புரமெரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
லியினைச் சென்று சேர்கின்றார்.
303

வழிபோம் பொழுது மிகஇளைத்து
வருத்தம் உறநீர் வேட்கையொடும்
அழிவாம் பசிவந் தணைந்திடவும்
அதற்குச் சித்தம் அலையாதே
மொழிவேந் தருமுன் எழுந்தருள
முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந் தியநெற் றியினார்தந்
தொண்டர் வருத்தம் மீட்பாராய்.
304

காவுங் குளமும் முன்சமைத்துக்
காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய்
விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் தனிமன் னவர்க்கெதிரே
நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்குந்
தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.
305
Go to top

அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.
306

நண்ணுந் திருநா வுக்கரசர்
நம்பர் அருள்என் றறிந்தார்போல்
உண்ணும் என்று திருமறையோர்
உரைத்துப் பொதிசோ றளித்தலுமே
எண்ண நினையா தெதிர்வாங்கி
இனிதா அமுது செய்தினிய
தண்ணீர் அமுது செய்தருளித்
தூய்மை செய்து தளர்வொழிந்தார்.
307

எய்ப்பு நீங்கி நின்றவரை
நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர்போவ
தென்றார் அரசும் அவர்க்கெதிரே
செப்பு வார்யான் திருப்பைஞ்ஞீ
லிக்குப் போவ தென்றுரைப்ப
ஒப்பி லாரும் யான்அங்குப்
போகின் றேன்என் றுடன்போந்தார்.
308

கூட வந்து மறையவனார்
திருப்பைஞ் ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே
மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப்
பொருளா அளித்த கருணைஎனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து
கண்ணீர் மாரி பயில்வித்தார்.
309

பைஞ்ஞீ லியினில் அமர்ந்தருளும்
பரமர் கோயில் சென்றெய்தி
மைஞ்ஞீ லத்து மணிகண்டர்
தம்மை வணங்கி மகிழ்சிறந்து
மெய்ஞ்ஞீர் மையினில் அன்புருக
விரும்புந் தமிழ்மா லைகள்பாடிக்
கைஞ்ஞீ டியதந் திருத்தொண்டு
செய்து காதல் உடனிருந்தார்.
310
Go to top

நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.
311

செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.
312

அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.
313

பணியார் வேணிச் சிவபெருமான்
பாதம் போற்றிப் பணிசெயுநாள்
மணியார் கண்டத் தெம்பெருமான்
மண்மேல் மகிழும் இடமெங்கும்
தணியாக் காதல் உடன்சென்று
வணங்கித் தக்க பணிசெய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில்
அருளால் அணைவார் ஆயினார்.
314

காதல் செய்யுங் கருத்தினுடன்
காடும் மலையும் கான்யாறும்
சூத மலிதண் பணைப்பதிகள்
பலவுங் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெருந்தொண்டை
நன்னாட் டெய்தி முன்னாகச்
சீத மலர்மென் சோலைசூழ்
திருவோத் தூரில் சென்றடைந்தார்.
315
Go to top

செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த்
தேவர் பிரானார் தங்கோயில்
புக்கு வலங்கொண் டெதிர்இறைஞ்சிப்
போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித்
திருத்தாண் டகங்கள் முதலாகத்
தக்க மொழிமா லைகள்சாத்திச்
சார்ந்து பணிசெய் தொழுகுவார்.
316

செய்ய ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளும்அவர்
உறையும் பதிகள் பலவணங்கித்
தையல் தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப் பதியென்று
வையம் முழுதும் தொழுதேத்தும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

317

ஞாலம் உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர் அருளினால்
சூலை மடுத்து முன்னாண்ட
தொண்டர் வரப்பெற் றோமென்று
காலை மலருங் கமலம்போற்
காஞ்சி வாணர் முகமெல்லாம்
சால மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார்.
318

மாட வீதி மருங்கெல்லாம்
மணிவா யில்களில் தோரணங்கள்
நீடு கதலி யுடன்கமுகு
நிரைத்து நிறைபொற் குடந்தீபம்
தோடு குலவு மலர்மாலை
சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியு முடனெடுத்தங்
கணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.
319

தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள
எழுந்து சொல்லுக் கரசர்பால்
கொண்ட வேட்கைப் பொலிவினொடுங்
குலவும் வீதிப் பணிசெய்யும்
அண்டர் அறிதற் கரியதிரு
அலகு முதலாம் அவையேந்தி
இண்டை புனைந்த சடைமுடியார்க்
கன்பர் தம்மை எதிர்கொண்டார்.
320
Go to top

எதிர்கொண் டிறைஞ்சுஞ் சீரடியார்
தம்மை இறைஞ்சி எழுந்தருளி
மதில்கொண் டணிந்த காஞ்சிநகர்
மறுகுட் போந்து வானநதி
குதிகொண் டிழுந்த சடைக்கம்பர்
செம்பொற் கோயில் குறுகினார்
அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றார்
ஆண்ட திருநா வுக்கரசர்.
321

திருவா யிலினைப் பணிந்தெழுந்து
செல்வத் திருமுன் றிலைஅணைந்து
கருவார் கச்சி ஏகம்பர்
கனக மணிமா ளிகைசூழ்ந்து
வருவார் செம்பொன் மலைவல்லி
தழுவக் குழைந்த மணிமேனிப்
பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப்
பேரா அன்பு பெருகினார்.
322

வார்ந்து சொரிந்த கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து
நீடும் பதிகம் பாடுவார்.
323

கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானை என்றெடுத்துப்
பரவாய சொல்மாலைத்
திருப்பதிகம் பாடியபின்
விரவார்தம் புரம்எரித்த
விடையவனார் வெள்ளெயிற்றின்
அரவாரம் புனைந்தவர்தந்
திருமுன்றிற் புறத்தணைந்தார்.
324

கையார்ந்த திருத்தொண்டு
கழியமிகுங் காதலொடும்
செய்யாநின் றேஎல்லாச்
செந்தமிழ்மா லையும்பாடி
மையார்ந்த மிடற்றர்திரு
மயானத்தை வலங்கொண்டு
மெய்யார்வ முறத்தொழுது
விருப்பினொடு மேவுநாள்.
325
Go to top

சீர்வளரு மதில்கச்சி
நகர்த்திருமேற் றளிமுதலா
நீர்வளருஞ் சடைமுடியார்
நிலவியுறை ஆலயங்கள்
ஆர்வமுறப் பணிந்தேத்தி
ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தித்
தகுந்தொண்டு செய்திருந்தார்.
326

அந்நகரில் அவ்வண்ணம்
அமர்ந்துறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு
வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத்
தொடர்ந்தபெருங் காதலினால்.
327

ஏகம்பன் காண்அவனென்
எண்ணத்தான் எனப்போற்றிப்
பாகம்பெண் ணுருவானைப்
பைங்கண்விடை உயர்த்தானை
நாகம்பூண் உகந்தானை
நலம்பெருகுந் திருநீற்றின்
ஆகந்தோய் அணியானை
அணைந்துபணிந் தின்புற்றார்.
328

திருக்கச்சி ஏகம்பம்
பணிந்தேத்தித் திங்களார்
நெருக்கச்செஞ் சடைக்கணிந்தார்
நீடுபதி தொழநினைவார்
வருக்கைச்செஞ் சுளைபொழிதேன்
வயல்விளைக்கும் நாட்டிடைப்போய்ப்
பருக்கைத்திண் களிற்றுரியார்
கழுக்குன்றின் பாங்கணைந்தார்.
329

நீடுதிருக் கழுக்குன்றில்
நிருத்தனார் கழல்வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து
பாங்குபல பதிகளிலுஞ்
சூடுமிளம் பிறைமுடியார்
தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த
வான்மியூர் வந்தணைந்தார்.
330
Go to top

திருவான்மி யூர்மருந்தைச்
சேர்ந்துபணிந் தன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி
அம்மருங்கு பிறப்பறுத்துத்
தருவார்தங் கோயில்பல
சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர்
மருவாரும் மலர்ச்சோலை
மயிலாப்பூர் வந்தடைந்தார்.
331

வரைவளர்மா மயிலென்ன
மாடமிசை மஞ்சாடும்
தரைவளர்சீர்த் திருமயிலைச்
சங்கரனார் தாள்வணங்கி
உரைவளர்மா லைகள்அணிவித்
துழவாரப் படையாளி
திரைவளர்வே லைக்கரைபோய்த்
திருவொற்றி யூர்சேர்ந்தார்.
332

ஒற்றியூர் வளநகரத்
தொளிமணிவீ திகள்விளக்கி
நற்கொடிமா லைகள்பூகம்
நறுங்கதலி நிரைநாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள்
தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர்கொண்டு
கொடுபுக்கார் வழித்தொண்டர்.
333

திருநாவுக் கரசரும்அத்
திருவொற்றி யூர்அமர்ந்த
பெருநாகத் திண்சிலையார்
கோபுரத்தை இறைஞ்சிப்புக்
கொருஞானத் தொண்டருடன்
உருகிவலங் கொண்டடியார்
கருநாமந் தவிர்ப்பாரைக்
கைதொழுது முன்வீழ்ந்தார்.
334

எழுதாத மறைஅளித்த
எழுத்தறியும் பெருமானைத்
தொழுதார்வ முறநிலத்தில்
தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின்
முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க
விழுதாரை கண்பொழிய
விதிர்ப்புற்று விம்மினார்.
335
Go to top

வண்டோங்கு செங்கமலம்
எனஎடுத்து மனமுருகப்
பண்தோய்ந்த சொற்றிருத்தாண்
டகம்பாடிப் பரவுவார்
விண்தோய்ந்த புனற்கங்கை
வேணியார் திருவுருவங்
கண்டோங்கு களிசிறப்பக்
கைதொழுது புறத்தணைந்தார்.
336

விளங்குபெருந் திருமுன்றில்
மேவுதிருப் பணிசெய்தே
உளங்கொள்திரு விருத்தங்கள்
ஓங்குதிருக் குறுந்தொகைகள்
களங்கொள்திரு நேரிசைகள்
பலபாடிக் கைதொழுது
வளங்கொள்திருப் பதியதனில்
பலநாள்கள் வைகினார்.
337

அங்குறையு நாளின்கண்
அருகுளவாம் சிவாலயங்கள்
எங்குஞ்சென் றினிதிறைஞ்சி
ஏத்துமவர் இறையருளால்
பொங்குபுனல் திருவொற்றி
யூர்தொழுது போந்துமையாள்
பங்குடையார் அமர்ந்ததிருப்
பாசூராம் பதியணைந்தார்.
338

திருப்பாசூர் நகரெய்திச்
சிந்தையினில் வந்தூறும்
விருப்பார்வம் மேற்கொள்ள
வேயிடங்கொண் டுலகுய்ய
இருப்பாரைப் புரமூன்றும்
எரித்தருள எடுத்ததனிப்
பொருப்பார்வெஞ் சிலையாரைத்
தொழுதெழுந்து போற்றுவார்.

339

முந்திமூ வெயில்எய்த
முதல்வனார் எனவெடுத்துச்
சிந்தைகரைந் துருகுதிருக்
குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தநிறை நேரிசையும்
முதலான தமிழ்பாடி
எந்தையார் திருவருள்பெற்
றேகுவார் வாகீசர்.
340
Go to top

அம்மலர்சீர்ப் பதியைஅகன்
றயல்உளவாம் பதிஅனைத்தின்
மைம்மருவுங் களத்தாரை
வணங்கிமகிழ் வொடும்போற்றி
மெய்ம்மைநிலை வழுவாத
வேளாள விழுக்குடிமைச்
செம்மையினார் பழையனூர்த்
திருஆல வனம்பணிந்தார்.
341

திருவாலங் காடுறையுஞ்
செல்வர்தாம் எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண்
டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை
பலபாடிப் பிறபதியும்
மருவார்வம் பெறவணங்கி
வடதிசைமேல் வழிக்கொள்வார்.
342

பல்பதியும் நெடுங்கிரியும்
படர்வனமுஞ் சென்றடைவார்
செல்கதிமுன் அளிப்பவர்தந்
திருக்காரிக் கரைபணிந்து
தொல்கலையின் பெருவேந்தர்
தொண்டர்கள்பின் உம்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி
மாமலைவந் தெய்தினார்.
343

பொன்முகலித் திருநதியின்
புனிதநெடுந் தீர்த்தத்தில்
முன்முழுகிக் காளத்தி
மொய்வரையின் தாழ்வரையில்
சென்னியுறப் பணிந்தெழுந்து
செங்கண்விடைத் தனிப்பாகர்
மன்னுமலை மிசையேறி
வலங்கொண்டு வணங்குவார்.
344

காதணிவெண் குழையானைக்
காளத்தி மலைக்கொழுந்தை
வேதமொழி மூலத்தை
விழுந்திறைஞ்சி எழுந்துபெருங்
காதல்புரி மனங்களிப்பக்
கண்களிப்பப் பரவசமாய்
நாதனைஎன் கண்ணுளான்
எனுந்திருத்தாண் டகம்நவின்றார்.
345
Go to top

மலைச்சிகரச் சிகாமணியின்
மருங்குறமுன் னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர்
திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழுங் கண்ணருவி
ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த்
தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.
346

சேணிலவு திருமலையில்
திருப்பணியா யினசெய்து
தாணுவினை அம்மலைமேல்
தாள்பணிந்த குறிப்பினால்
பேணுதிருக் கயிலைமலை
வீற்றிருந்த பெருங்கோலம்
காணுமது காதலித்தார்
கலைவாய்மைக் காவலனார்.
347

அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.
348

மான விஞ்சையர் வான நாடர்கள்
வான்இ யக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்ன காதிபர்
காம சாரிக ளேமுதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை
வந்தி றைஞ்சி நலம்பெறுந்
தான மான திருச்சி லம்பை
வணங்கி வண்டமிழ் சாற்றினார்.
349

அம்ம ருங்குக டந்து போமவர்
ஆர்கொள் சூல அயிற்படைச்
செம்மல் வெண்கயி லைப்பொ ருப்பைநி
னைந்தெ ழுந்ததொர் சிந்தையால்
எம்ம ருங்குமொர் காத லின்றி
இரண்டு பாலும் வியந்துளோர்
கைம்ம ருங்கணை யுந்தெ லுங்கு
கடந்து கன்னடம் எய்தினார்.
350
Go to top

கருந டங்கழி வாகஏகிய
பின்க லந்தவ னங்களும்
திருந தித்துறை யாவை
யும்பயில் சேண்நெ டுங்கிரி
வட்டையும் பெருந லங்கிளர்
நாடும் எண்ணில பிற்ப
டச்செறி பொற்பினால் வருநெ
டுங்கதிர் கோலு சோலைய
மாள வத்தினை நண்ணினார்.
351

அங்கு முற்றிஅ கன்று போகி
அருஞ்சு ரங்கள் இகந்துசென்
றெங்கு மிக்க அறங்கள் நீடும்
இலாட பூமி யிகந்துபோய்
மங்குல் சுற்றிய வெற்பி னோடு
வனங்கள் யாறு கடந்தயற்
பங்க யப்பழ னத்து மத்திம
பைதி ரத்தினை எய்தினார்.
352

அன்ன நாடுக டந்து கங்கை
அணைந்து சென்று வலங்கொளும்
மின்னு வேணியர் வார ணாசி
விருப்பி னோடு பணிந்துடன்
பின்ன ணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்துபோய்
மன்னு காதல்செய் நாவின் மன்னவர்
வந்து கற்சுரம் முந்தினார்.

353

மாக மீதுவ ளர்ந்த கானக
மாகி எங்கும் மனித்தரால்
போக லாநெறி யன்றி யும்புரி
கின்ற காதல் பொலிந்தெழச்
சாக மூலப லங்கள் துய்ப்பன
வுந்த விர்ந்து தனித்துநேர்
ஏகி னாரிர வும்பெ ருங்கயி
லைக்கு லக்கிரி எய்துவார்.
354

ஆய வாரிரு ளின்கண் ஏகுமவ்
அன்பர் தம்மைஅ ணைந்துமுன்
தீய வாயவி லங்கு வன்தொழில்
செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாகம ணிப்ப ணங்கொள்வி
ளக்கெ டுத்தன வந்துகால்
தோய வானவ ராயி னுந்தனி
துன்ன ருஞ்சுரம் முன்னினார்.
355
Go to top

வெங்க திர்ப்பக லக்க டத்திடை
வெய்ய வன்கதிர் கைபரந்
தெங்கு மிக்கபி ளப்பி னாகர்தம்
எல்லை புக்கெரி கின்றன
பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல்
புக்க சூழல் புகும்பகல்
செங்க திர்க்கனல் போலும் அத்திசை
திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
356

இங்ங னம்இர வும்ப கற்பொழு
தும்ம ருஞ்சுரம் எய்துவார்
பங்க யம்புரை தாள்ப ரட்டள
வும்ப சைத்தசை தேயவும்
மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை
வைத்த சிந்தை மறப்பரோ
தங்க ரங்க ளிரண்டு மேகொடு
தாவி ஏகுதல் மேவினார்.
357

கைக ளும்மணி பந்த சைந்துற
வேக ரைந்து சிதைந்தபின்
மெய்க லந்தெழு சிந்தை அன்பின்
விருப்பு மீமிசை பொங்கிட
மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை
மூளு மத்த முயங்கியே
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல
வருந்தி உந்தினர் மார்பினால்.
358

மார்ப முந்தசை நைந்து சிந்தி
வரிந்த என்பு முரிந்திட
நேர்வ ருங்குறி நின்ற சிந்தையின்
நேசம் ஈசனை நேடுநீடு
ஆர்வம் அங்குயிர் கொண்டு கைக்கும்
உடம்ப டங்கவும் ஊன்கெடச்
சேர்வ ரும்பழு வம்பு ரண்டு
புரண்டு சென்றனர் செம்மையோர்.
359

அப்பு றம்புரள் கின்ற நீளிடை
அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப ருங்கயி லைச்சி லம்படி
சிந்தை சென்றுறு மாதலால்
மெய்ப்பு றத்தில் உறுப்ப ழிந்தபின்
மெல்ல உந்து முயற்சியுந்
தப்பு றச்செய லின்றி அந்நெறி
தங்கி னார்தமி ழாளியார்.
360
Go to top

அன்ன தன்மையர் கயிலையை
அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற்
பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனல் தடமும்ஒன்
றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர்
முனிவராம் படியால்.
361

வந்து மற்றவர் மருங்குற
அணைந்துநேர் நின்று
நொந்து நோக்கிமற் றவர்எதிர்
நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ்வுறுப் பழிந்திட
வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய
தென்என இசைத்தார்.
362

மாசில் வற்கலை ஆடையும்
மார்பில்முந் நூலுந்
தேசு டைச்சடை மவுலியும்
நீறும்மெய் திகழ
ஆசின் மெய்த்தவ ராகிநின்
றவர்தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வுற
விளம்புவார் பெரியோர்.
363

வண்டு லாங்குழல் மலைமக
ளுடன்வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும்அப்
பரிசவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடுங்
காதலின் அடைந்தேன்
கொண்ட என்குறிப் பிதுமுனி
யேஎனக் கூற.
364

கயிலை மால்வரை யாவது
காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர்
அடைவதற் கெளிதோ
அயில்கொள் வேற்படை அமரரும்
அணுகுதற் கரிதால்
வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர்
வந்தென விளம்பி.

365
Go to top

மீளும் அத்தனை உமக்கினிக்
கடன்என விளங்கும்
தோளும் ஆகமும் துவளுமுந்
நூல்முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில்
இருக்கைகண் டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டுமீ
ளேன்என மறுத்தார்.
366

ஆங்கு மற்றவர் துணிவறிந்
தவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக்
கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக் கரசனே
எழுந்திர்என் றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கைகொண்
டெழுந்தொளி திகழ்வார்.
367

அண்ண லேஎனை ஆண்டுகொண்
டருளிய அமுதே
விண்ணி லேமறைந் தருள்புரி
வேதநா யகனே
கண்ணி னால்திருக் கயிலையில்
இருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ நயந்தருள்
புரிஎனப் பணிந்தார்.
368

தொழுதெ ழுந்தநற் றொண்டரை
நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால்
இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில்
இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற்
காண்எனப் பணித்தார்.
369

ஏற்றி னார்அருள் தலைமிசைக்
கொண்டெழுந் திறைஞ்சி
வேற்று மாகிவிண் ணாகிநின்
றார்மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார்
அஞ்செழுத் தோதிப்
பாற்ற டம்புனற் பொய்கையில்
மூழ்கினார் பணியால்.
370
Go to top

ஆதி தேவர்தந் திருவருள்
பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப்
பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்ஐ
யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தனர்
உலகெலாம் வியப்ப.

371

வம்பு லாமலர் வாவியின்
கரையில்வந் தேறி
உம்பர் நாயகர் திருவருட்
பெருமையை உணர்வார்
எம்பி ரான்தருங் கருணைகொல்
இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியிற்
படிந்தெழும் படியார்.
372

மிடையும் நீள்கொடி வீதிகள்
விளங்கிய ஐயா
றுடைய நாயகர் சேவடி
பணியவந் துறுவார்
அடைய அப்பதி நிற்பவுஞ்
சரிப்பவு மான
புடைஅ மர்ந்ததந் துணையொடும்
பொலிவன கண்டார்.
373

பொன்ம லைக்கொடி யுடன்அமர்
வெள்ளியம் பொருப்பில்
தன்மை யாம்படி சத்தியுஞ்
சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும்
பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான்
கோயில்முன் வந்தார்.
374

காணும் அப்பெருங் கோயிலுங்
கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன்
முதற்பெருந் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்
தெழும்ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையுந்
தனித்தனி முழங்க.

375
Go to top

தேவர் தானவர் சித்தர்விச்
சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள்
புடையெலாம் மிடையக்
காவி வாள்விழி அரம்பையர்
கானமும் முழவும்
தாவில் ஏழ்கடல் முழக்கினும்
பெருகொலி தழைப்ப.
376

கங்கை யேமுதல் தீர்த்தமாங்
கடவுள்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந்
தடங்கொடு வணங்க
எங்கும் நீடிய பெருங்கண
நாதர்கள் இறைஞ்சப்
பொங்கி யங்களால் பூதவே
தாளங்கள் போற்ற.
377

அந்தண் வெள்ளிமால் வரையிரண்
டாம்என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால்
விடைஎதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்பெறு
முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவிடை
யாடிமுன் நணுக.
378

வெள்ளி வெற்பின்மேல் மரகதக்
கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற்
பெனஇடப் பாகம்
கொள்ளு மாமலை யாளுடன்
கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர்
வாக்கின்மன் னவனார்.

379

கண்ட ஆனந்தக் கடலினைக்
கண்களால் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந்
தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார்
பாடினார் அழுதார்
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன
யார்சொல வல்லார்.
380
Go to top

முன்பு கண்டுகொண் டருளின்ஆர்
அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவிலா
ஆர்வம்முன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப்
போற்றுதாண் டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்
எல்லையில் தவத்தோர்.
381

ஆய வாறுமற் றவர்மனங்
களிப்புறக் கயிலை
மேய நாதர்தந் துணையொடும்
வீற்றிருந் தருளித்
தூய தொண்டனார் தொழுதெதிர்
நிற்கஅக் கோலம்
சேய தாக்கினார் திருவையா
றமர்ந்தமை திகழ.
382

ஐயர் கோலம்அங் களித்தகன்
றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுளம் மகிழ்ந்திட
வருந்திமற் றிங்குச்
செய்ய வேணியர் அருளிது
வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை
பாடுவார் மகிழ்ந்து.

383

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்டமிழ்ச் சொல்லால்
குலவு திருப்பதி கங்கள்
வேத முதல்வர்ஐ யாற்றில்
விரவுஞ் சராசரம் எல்லாங்
காதல் துணையொடுங் கூடக்
கண்டேன் எனப்பாடி நின்றார்.
384

கண்டு தொழுது வணங்கிக்
கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள்
குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி
வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்திரு வையா
றமர்ந்தனர் நாவுக் கரசர்.

385
Go to top

நீடிய அப்பதி நின்று
நெய்த்தான மேமுத லாக
மாடுயர் தானம் பணிந்து
மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை
பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார்
திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

386

சேர்ந்து விருப்பொடும் புக்குத்
திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலங்கொண் டிறைஞ்சித்
தம்பெரு மான்திரு முன்பு
நேர்ந்த பரிவொடுந் தாழ்ந்து
நிறைந்தொழி யாஅன்பு பொங்க
ஆர்ந்தகண் ணீர்மழை தூங்க
அயர்வுறுந் தன்மைய ரானார்.
387

திருப்பூந் துருத்தி அமர்ந்த
செஞ்சடை யானைஆன் ஏற்றுப்
பொருப்பூர்ந் தருளும் பிரானைப்
பொய்யிலி யைக்கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத் தோடு
மேவிய காதல் விளைப்ப
இருப்போந் திருவடிக் கீழ்நாம்
என்னுங் குறுந்தொகை பாடி.
388

அங்குறை யுந்தன்மை வேண்டி
நாமடி போற்றுவ தென்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம்
போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத்தொண்டு செய்வார்
தம்பிரா னார்அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் அங்கொன்று செய்தார்.
389

பல்வகைத் தாண்டகத் தோடும்
பரவுந் தனித்தாண் டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்
தடைவு திருத்தாண் டகமும்
செல்கதி காட்டிடப் போற்றுந்
திருஅங்க மாலையும் உள்ளிட்
டெல்லையில் பன்மைத் தொகையும்
இயம்பினர் ஏத்தி இருந்தார்.
390
Go to top

பொன்னிவலங் கொண்டதிருப்
பூந்துருத்தி அவர்இருப்பக்
கன்மனத்து வல்அமணர்
தமைவாதில் கட்டழித்துத்
தென்னவன்கூன் நிமிர்த்தருளித்
திருநீற்றின் ஒளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர்
மறையவனார் வருகின்றார்.

391

தீந்தமிழ்நாட் டிடைநின்றும்
எழுந்தருளிச் செழும்பொன்னி
வாய்ந்தவளந் தருநாட்டு
வந்தணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர்இருந் தமைகேட்டு
விரைந்தவர்பால் செல்வன்எனப்
பூந்துருத்தி வளம்பதியின்
புறம்பணையில் வந்தணைந்தார்.

392

சண்பைவருந் தமிழ்விரகர்
எழுந்தருளத் தாங்கேட்டு
மண்பரவும் பெருங்கீர்த்தி
வாகீசர் மனமகிழ்ந்து
கண்பெருகுங் களிகொள்ளக்
கண்டிறைஞ்சுங் காதலினால்
எண்பெருகும் விருப்பெய்த
எழுந்தருளி எதிர்சென்றார்.

393

காழியர்கோன் வரும்எல்லை
கலந்தெய்திக் காதலித்தார்
சூழுமிடைந் திடுநெருக்கிற்
காணாமே தொழுதருளி
வாழியவர் தமைத்தாங்கும்
மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும்உடல் இதுகொண்டு
தாங்குவன்யான் எனத்தரித்தார்.
394

வந்தொருவர் அறியாமே
மறைத்தவடி வொடும்புகலி
அந்தணனார் ஏறியெழுந்
தருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத்
தாங்குவா ருடன்தாங்கிச்
சிந்தைகளிப் புறவருவார்
தமையாருந் தெளிந்திலரால்.
395
Go to top

திருஞான மாமுனிவர்
அரசிருந்த பூந்துருத்திக்
கருகாக எழுந்தருளி
எங்குற்றார் அப்பர்என
உருகாநின் றுஉம்அடியேன்
உம்அடிகள் தாங்கிவரும்
பெருவாழ்வு வந்தெய்தப்
பெற்றிங்குற் றேன்என்றார்.
396

பிள்ளையார் அதுகேளாப்
பெருகுவிரை வுடன்இழிந்தே
உள்ளமிகு பதைப்பெய்தி
உடையஅர சினைவணங்க
வள்ளலார் வாகீசர்
அவர்வணங்கா முன்வணங்கத்
துள்ளுமான் மறிக்கரத்தார்
தொண்டரெலாந் தொழுதார்த்தார்.
397

கழுமலக்கோன் திருநாவுக்
கரசருடன் கலந்தருளிச்
செழுமதியந் தவழ்சோலைப்
பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான்ஏந்து
திருக்கரத்தார் மலர்த்தாள்கள்
தொழுதுருகி இன்புற்றுத்
துதிசெய்தங் குடனிருந்தார்.
398

வல்அமணர் தமைவாதில்
வென்றதுவும் வழுதிபால்
புல்லியகூன் நிமிர்த்ததுவும்
தண்பொருந்தப் புனல்நாட்டில்
எல்லையிலாத் திருநீறு
வளர்த்ததுவும் இருந்தவத்தோர்
சொல்லஅது கேட்டுவந்தார்
தூயபுகழ் வாகீசர்.
399

பண்புடைய பாண்டிமா
தேவியார் தம்பரிவும்
நண்புடைய குலச்சிறையார்
பெருமையும்ஞா னத்தலைவர்
எண்பெருக வுரைத்தருள
எல்லையில்சீர் வாகீசர்
மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்.

400
Go to top

பிரமபுரத் திருமுனிவர்
பெருந்தொண்டை நன்னாட்டில்
அரனுறையுந் தானங்கள்
அணைந்திறைஞ்சிப் பாடுவதற்
குரனுடைய திருநாவுக்
கரசர் உரை செய்தருளப்
புரமெரித்தார் திருமகனார்
பூந்துருத்தி தொழுதகன்றார்.
401

ஆண்டஅர சங்கணர்சீர்
அருள்பெற்றப் பதிநின்றும்
பாண்டிநாட் டெழுந்தருளும்
பான்மையராய்த் தென்திசைபோய்க்
காண்டகைய திருப்புத்தூர்
பணிந்தேத்திக் கதிர்மதியம்
தீண்டுகொடி மதில்மதுரைத்
திருவால வாய்சேர்ந்தார்.
402

சென்றணைந்து மதுரையினில்
திருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந்
தருளியஅங் கணர்கோயில்
முன்றிலினை வலங்கொண்டு
முன்னிறைஞ்சி உள்புக்கு
வன்றனிமால் விடையாரை
வணங்கிமகிழ் வொடுந்திளைத்தார்.
403

எய்தியபே ரானந்த
இன்பத்தின் இடைஅழுந்தி
மொய்திகழுஞ் சடையானை
முளைத்தானை என்றெடுத்துச்
செய்தவத்தோர் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் புறத்தணைவார்
கைதொழுது பணிந்தேத்தித்
திருவுள்ளங் களிசிறந்தார்.
404

சீர்திகழும் பாண்டிமா
தேவியார் திருநீற்றின்
சார்வடைய கூன்நிமிர்ந்த
தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார்
வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதல்மிக
அடிபோற்ற அங்கிருந்தார்.
405
Go to top

திருவால வாய்அமர்ந்த
செஞ்சுடரைச் செழும்பொருள்நூல்
தருவானை நேரிசையும்
தாண்டகமும் முதலான
பெருவாய்மைத் தமிழ்பாடிப்
பேணுதிருப் பணிசெய்து
மருவார்தம் புரம்எரித்தார்
பூவணத்தை வந்தடைந்தார்.
406

கொடிமாடம் நிலவுதிருப்
பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக் கறிவரியார்
நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத்
தாண்டகத்தால் வழுத்திப்போய்ப்
பொடிநீடு திருமேனிப்
புனிதர்பதி பிறபணிவார்.
407

தென்னிலங்கை இராவணன்தன்
சிரம்ஈரைந் துந்துணித்த
மன்னவனாம் இராமனுக்கு
வரும்பெரும்பா தகந்தீர்த்த
பிஞ்ஞகனைத் தொழுவதற்கு
நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி
துன்னிமனங் கரைந்துருகத்
தொழுதெழுந்தார் சொல்லரசர்.
408

தேவர்தொழுந் தனிமுதலைத்
திருவிரா மேச்சுரத்து
மேவியசங் கரனைஎதிர்
நின்றுவிருப் புறுமொழியால்
பாவுதிரு நேரிசைகள்
முதலான தமிழ்பாடி
நாவரசர் திருத்தொண்டு
நலம்பெருகச் செய்தமர்ந்தார்.
409

அங்குறைந்து கண்ணுதலார்
அருள்சூடி அகன்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப்
புறம்பணைசூழ் நெல்வேலி
செங்கண்விடை யார்மன்னுந்
திருக்கானப் பேர்முதலா
எங்குநிகழ் தானங்கள்
எல்லாம்புக் கிறைஞ்சுவார்.
410
Go to top

தொழுதுபல வகையாலும்
சொற்றொடைவண் டமிழ்பாடி
வழுவில்திருப் பணிசெய்து
மனங்கசிவுற் றெப்பொழுதும்
ஒழுகியகண் பொழிபுனலும்
ஓவாது சிவன்தாள்கள்
தழுவியசிந் தையில்உணர்வுந்
தங்கியநீர் மையிற்சரித்தார்.
411

தேம்பொழில்சூழ் செந்தமிழ்நாட்
டினில்எங்குஞ் சென்றிறைஞ்சிப்
பாம்பணிவார் தமைப்பணிவார்
பொன்னிநா டதுஅணைந்து
வாம்புனல்சூழ் வளநகர்கள்
பின்னும்போய் வணங்கியே
பூம்புகலூர் வந்தடைந்தார்
பொய்ப்பாசம் போக்குவார்.
412

பொய்கைசூழ் பூம்புகலூர்ப்
புனிதர்மலர்த் தாள்வணங்கி
நையுமனப் பரிவோடு
நாள்தோறுந் திருமுன்றில்
கைகலந்த திருத்தொண்டு
செய்துபெருங் காதலுடன்
வைகுநாள் எண்ணிறந்த
வண்டமிழ்மா லைகள்மொழிவார்.
413

நின்றதிருத் தாண்டகமும்
நீடுதனித் தாண்டகமும்
மன்றுறைவார் வாழ்பதிகள்
வழுத்துதிருத் தாண்டகமும்
கொன்றைமலர்ச் சடையார்பால்
குறைந்தடைந்த நேரிசையுந்
துன்றுதனி நேரிசையும்
முதலான தொடுத்துரைத்தார்.
414

ஆருயிரின் திருவிருத்தம்
தசபுரா ணத்தடைவும்
பார்பரவும் பாவநா
சப்பதிகம் பன்முறையும்
நேர்படநின் றறைகூவுந்
திருப்பதிகம் முதற்பிறவும்
பேரருளின் கடல்அளிக்கும்
பெருமானைப் பாடினார்.
415
Go to top

அந்நிலைமை தனில்ஆண்ட
அரசுபணி செய்யஅவர்
நன்னிலைமை காட்டுவார்
நம்பர்திரு மணிமுன்றில்
தன்னில்வரும் உழவாரம்
நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள்
பொலிந்திலங்க அருள்செய்தார்.

416

செம்பொன்னும் நவமணியும்
சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில்
உருள்பருக்கை யுடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர்
உழவாரத் தினில்ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல
வாவியினில் புகஎறிந்தார்.
417

புல்லோடும் கல்லோடும்
பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபா
டிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்முன் திருப்புகலூர்
நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதல்மடவார்
விசும்பூடு வந்திழிந்தார்.
418

வானகமின் னுக்கொடிகள்
வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில்
தகும்அலங்கா ரத்தன்மை
கானஅமு தம்பரப்பும்
கனிவாயில் ஒளிபரப்பப்
பானல்நெடுங் கண்கள்வெளி
பரப்பிஇசை பாடுவார்.
419

கற்பகப்பூந் தளிரடிபோங்
காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட்
டணையோடுங் கைபெயரப்
பொற்புறும்அக் கையின்வழி
பொருகயற்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிநுடங்கி
ஆடுவபோல் ஆடுவார்.
420
Go to top

ஆடுவார் பாடுவார்
அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்றணைவார்
குழல்அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே
ளுடன்மீள்வர் ஒளிபெருக
நீடுவார் துகிலசைய
நிற்பாரும் ஆயினார்.
421

இத்தன்மை அரம்பையர்கள்
எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ்
நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய
விழுத்தவத்து மேலோர்தம்
சித்தநிலை திரியாது
செய்பணியின் தலைநின்றார்.
422

இம்மாயப் பவத்தொடக்காம்
இருவினைகள் தமைநோக்கி
உம்மால்இங் கென்னகுறை
உடையேன்யான் திருவாரூர்
அம்மானுக் காளானேன்
அலையேன்மின் நீர்என்று
பொய்ம்மாயப் பெருங்கடலுள்
எனுந்திருத்தாண் டகம்புகன்றார்.
423

மாதரவர் மருங்கணைய
வந்தெய்தி மதனவசக்
காதலவர் புரிந்தொழுகுங்
கைதவங்கள் செய்திடவும்
பேதமிலா ஓருணர்விற்
பெரியவரைப் பெயர்விக்க
யாதும்ஒரு செயலில்லா
மையில்இறைஞ்சி எதிரகன்றார்.
424

இந்நிலைமை உலகேழும்
எய்தஅறிந் தியல்பேத்த
மன்னியஅன் புறுபத்தி
வடிவான வாகீசர்
மின்னிலவும் சடையார்தம்
மெய்ப்பொருள்தான் எய்தவரும்
அந்நிலைமை அணித்தாகச்
சிலநாள்அங் கமர்ந்திருந்தார்.
425
Go to top

மன்னியஅந் தக்கரணம்
மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரணான
தமியேனைப் புகலூரன்
என்னையினிச் சேவடிக்கீழ்
இருத்திடும்என் றெழுகின்ற
முன்னுணர்வின் முயற்சியினால்
திருவிருத்தம் பலமொழிந்தார்.
426

மண்முதலாம் உலகேத்த
மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே
போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த
ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ்
ஆண்டஅர சமர்ந்திருந்தார்.

427

வானவர்கள் மலர்மாரி
மண்நிறைய விண்ணுலகின்
மேனிறைந்த ஐந்துபே
ரியவொலியும் விரிஞ்சன்முதல்
யோனிகளா யினஎல்லாம்
உளநிறைந்த பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற்
சதயமாந் திருநாளில்.

428

அடியனேன் ஆதரவால்
ஆண்டஅர சின்சரிதப்
படியையான் அறிந்தபடி
பகர்ந்தேன்அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள்
கைதொழுது குலச்சிறையார்
முடிவில்புகழ்த் திருத்தொண்டின்
முயற்சியினை மொழிகின்றேன்.
429

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp