சூத நெருங்கு குலைத்தெங்கு
பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி
விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய்
நிலவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்கும் தொன்மையது
மிழலை நாட்டுப் பெருமிழலை.
|
1
|
அன்ன தொன்மைத் திருப்பதிக்கண்
அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர்தம்
அடியார்க் கான செய்பணிகள்
இன்ன வண்ணம் என்றவர்தாம்
உரையா முன்னம் எதிரேற்று
முன்னம் உவந்து செய்வாராய்
முதிரும் அறிவின் பயன்கொள்வார்.
|
2
|
தொண்டர் பலரும் வந்தீண்டி
உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம்
முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவுங் குழலுமையாள்
கேள்வன் செய்ய தாளென்னும்
புண்ட ரீகம் அகமலரில்
வைத்துப் போற்றும் பொற்பினார்.
|
3
|
இத்தன் மையராய் நிகழுநாள்
எல்லை இல்லாத் திருத்தொண்டின்
மெய்த்தன் மையினை உலகறிய
விதியால் வணங்கி மெய்யடியார்
சித்தம் நிலவுந் திருத்தொண்டத்
தொகைபா டியநம் பியைப்பணிந்து
நித்தன் அருள்பெற் றவர்பாதம்
நினைக்கும் நியமத் தலைநின்றார்.
|
4
|
மையார் தடங்கண் பரவையார்
மணவா ளன்தன் மலர்க்கழல்கள்
கையால் தொழுது வாய்வாழ்த்தி
மனத்தால் நினைக்குங் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும்
அறியாச் செம்பொன் தாளிணைக்கீழ்
உய்வான் சேர உற்றநெறி
இதுவே என்றன் பினில்உய்த்தார்.
|
5
|
| Go to top |
நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தி யான அணைந்ததற்பின்
மூளும் காத லுடன்பெருக
முதல்வர் நாமத் தஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
|
6
|
இன்ன வாறே இவர்ஒழுக
ஏறு கொடிமேல் உயர்த்தவர்தாம்
பொன்னின் கழல்கள் மண்ணின்மேல்
பொருந்த வந்து வழக்குரைத்து
மன்னும் ஓலை அவைமுன்பு
காட்டி ஆண்ட வன்றொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி
கொடுங்கோள் ஊரைச் சேர்வுற்றார்.
|
7
|
அஞ்சைக் களத்து நஞ்சுண்ட
அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ்மா லைகள்மொழியத்
தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப்
பொருப்பில் எய்த வரும்வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்குணந்தார்
நீடு மிழலைக் குறும்பனார்.
|
8
|
மண்ணில் திகழும் திருநாவல்
ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை
நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய
வாழ்வார் போல வாழேன்என்
றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென்
றடைவன் யோகத் தாலென்பார்.
|
9
|
நாலு கரணங் களும்ஒன்றாய்
நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக்
கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏல வேமுன் பயின்றநெறி
எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அடைவார் கயிலை முன்னடைந்தார்.
|
10
|
| Go to top |
பயிலச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடியடைந்த மிழலைக் குறும்பர் கழல்வணங்கி
மயிலைப் புறங்கொள் மென்சாயல் மகளிர் கிளவி யாழினொடுங்
குயிலைப் பொருவுங் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.
|
11
|