சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.240   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

மானமிகு தருமத்தின்
வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர்
குடிதுவன்றி ஓங்குபதி
கூனல்வளை திரைசுமந்து
கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம்
பெருகுதிருக் காரைக்கால்.
1

வங்கமலி கடற்காரைக்
காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
புனிதவதி யார்பிறந்தார்.
2

வணிகர்பெருங் குலம்விளங்க
வந்துபிறந் தருளியபின்
அணிகிளர்மெல் லடிதளர்வுற்று
அசையுநடைப் பருவத்தே
பணியணிவார் கழற்கடிமை
பழகிவரும் பாங்குபெறத்
தணிவில்பெரு மனக்காதல்
ததும்பவரும் மொழிபயின்றார்.
3

பல்பெருநற் கிளைஉவப்பப்
பயில்பருவச் சிறப்பெல்லாம்
செல்வமிகு தந்தையார்
திருப்பெருகுஞ் செயல்புரிய
மல்குபெரும் பாராட்டின்
வளர்கின்றார் விடையவர்பால்
அல்கியஅன் புடன்அழகின்
கொழுந்தெழுவ தெனவளர்வார்.
4

வண்டல்பயில் வனஎல்லாம்
வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை
அணையவரு வனபயின்று
தொண்டர்வரின் தொழுதுதா
தியர்போற்றத் துணைமுலைகள்
கொண்டுநுசுப் பொதுங்குபதங்
கொள்கையினிற் குறுகினார்.
5
Go to top

நல்லவென உறுப்புநூ
லவர்உரைக்கும் நலம்நிரம்பி
மல்குபெரு வனப்புமீக்
கூரவரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில்
இவர்கள்மர பினுக்கேற்குந்
தொல்குலத்து வணிகர்மகள்
பேசுதற்குத் தொடங்குவார்.
6

நீடியசீர்க் கடல்நாகை
நிதிபதியென் றுலகின்கண்
பாடுபெறு புகழ்வணிகன்
பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபில்
சேயிழையை மகட்பேச
மாடமலி காரைக்கால்
வள நகரின் வரவிட்டார்.
7

வந்தமூ தறிவோர்கள்
மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
முறைமைமணம் புரிகென்றார்.
8

மற்றவனும் முறைமையினால்
மணம்இசைந்து செலவிடச் சென்
றுற்றவர்கள் உரைகேட்ட
நிதிபதியும் உயர்சிறப்புப்
பெற்றனன் போல் உவந்துதனிப்
பெருமகற்குத் திருமலியுஞ்
சுற்றமுடன் களிகூர்ந்து
வதுவைவினைத் தொழில்பூண்டான்.
9

மணமிசைந்த நாளோலை
செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள்
ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும்
மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக்
காரைக்கால் பதிபுகுந்தார்.
10
Go to top

அளிமிடைதார்த் தனதத்தன்
அணிமாடத் துள்புகுந்து
தெளிதருநூல் விதிவழியே
செயல்முறைமை செய்தமைத்துத்
தளிரடிமென் நகைமயிலைத்
தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ்சுற் றம்போற்றக்
கலியாணஞ் செய்தார்கள்.
11

மங்கலமா மணவினைகள்
முடித்தியல்பின் வைகுநாள்
தங்கள்குடிக் கொருபுதல்வி
ஆதலினால் தனதத்தன்
பொங்கொலிநீர் நாகையினிற்
போகாமே கணவனுடன்
அங்கண்அமர்ந் தினிதிருக்க
அணிமாடம் மருங்கமைத்தான்.
12

மகட்கொடையின் மகிழ்சிறக்கும்
வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்
நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால்
தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில்
மேம்படுதல் மேவினான்.
13

ஆங்கவன்தன் இல்வாழ்க்கை
அருந்துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர்தாமும்
பொருவிடையார் திருவடிக்கீழ்
ஓங்கியஅன் புறுகாதல்
ஒழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில்வரு மனையறத்தின்
பண்புவழா மையில்பயில்வார்.
14

நம்பரடி யார்அணைந்தால்
நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியுஞ்
செழுந்துகிலும் முதலான
தம்பரிவி னாலவர்க்குத்
தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ்
உணர்வுமிக ஒழுகுநாள்.
15
Go to top

பாங்குடைய நெறியின்கண்
பயில்பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு
வந்தணைந்தார் சிலர்கொடுப்ப
ஆங்கவைதான் முன்வாங்கி
அவர்வேண்டுங் குறையளித்தே
ஈங்கிவற்றை இல்லத்துக்
கொடுக்கவென இயம்பினான்.
16

கணவன்தான் வரவிடுத்த
கனியிரண்டுங் கைக்கொண்டு
மணமலியும் மலர்க்கூந்தல்
மாதரார் வைத்ததற்பின்
பணஅரவம் புனைந்தருளும்
பரமனார் திருத்தொண்டர்
உணவின்மிகு வேட்கையினால்
ஒருவர்மனை உட்புகுந்தார்.
17

வேதங்கள் மொழிந்தபிரான்
மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப்
பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர்
முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா
இன்னடிசில் ஊட்டுவார்.
18

கறிஅமுதங் குதவாதே
திருஅமுது கைகூட
வெறிமலர்மேல் திருவனையார்
விடையவன்தன் அடியாரே
பெறலரிய விருந்தானால்
பேறிதன்மேல் இல்லையெனும்
அறிவினராய் அவரமுது
செய்வதனுக் காதரிப்பார்.
19

இல்லாளன் வைக்கவெனத்
தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
தமையமுது செய்வித்தார்.
20
Go to top

மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயலுவந்து போயினார்.
21

மற்றவர்தாம் போயினபின்
மனைப்பதியா கியவணிகன்
உற்றபெரும் பகலின்கண்
ஓங்கியபேர் இல்எய்திப்
பொற்புறமுன் நீராடிப்
புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மனையாருங்
கடப்பாட்டில் ஊட்டுவார்.
22

இன்னடிசில் கறிகளுடன்
எய்துமுறை இட்டதற்பின்
மன்னியசீர்க் கணவன்தான்
மனையிடைமுன் வைப்பித்த
நன்மதுர மாங்கனியில்
இருந்ததனை நறுங்கூந்தல்
அன்னமனை யார்தாமும்
கொடுவந்து கலத்தளித்தார்.
23

மனைவியார் தாம்படைத்த
மதுரமிக வாய்ந்தகனி
தனைநுகர்ந்த இனியசுவை
ஆராமைத் தார்வணிகன்
இனையதொரு பழம்இன்னும்
உளததனை இடுகவென
அனையதுதாங் கொண்டுவர
அணைவார்போல் அங்ககன்றார்.
24

அம்மருங்கு நின்றயர்வார்
அருங்கனிக்கங் கென்செய்வார்
மெய்ம்மறந்து நினைந்துற்ற
விடத்துதவும் விடையவர்தாள்
தம்மனங்கொண் டுணர்தலுமே
அவரருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த
ததிமதுரக் கனியொன்று.
25
Go to top

மற்றதனைக் கொடுவந்து
மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
பெய்வளையார் தமைக்கேட்டான்.
26

அவ்வுரைகேட் டலும்மடவார்
அருளுடையார் அளித்தருளும்
செவ்வியபேர் அருள்விளம்புந்
திறமன்றென் றுரைசெய்யார்
கைவருகற் புடைநெறியால்
கணவன்உரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல்
விடமாட்டார் விதிர்ப்புறுவார்.
27

செய்தபடி சொல்லுவதே
கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனைமொழிந்தார்.
28

ஈசனருள் எனக்கேட்ட
இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்.
29

பாங்ககன்று மனைவியார்
பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல்
என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந்
தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே
அதிசயித்து வாங்கினான்.
30
Go to top

வணிகனுந் தன்கைப் புக்க
மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள
உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர்
அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான்
தொடர்வின்றி ஒழுகு நாளில்.
31

விடுவதே எண்ண மாக மேவிய
முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர்கலங்
கொண்டு போகி
நெடுநிதி கொணர்வேன் என்ன
நிரந்தபல் கிளைஞ ராகும்
வடுவில்சீர் வணிக மாக்கள்
மரக்கலஞ் சமைப்பித் தார்கள்.
32

கலஞ்சமைத் ததற்கு வேண்டும்
கம்மிய ருடனே செல்லும்
புலங்களில் விரும்பும் பண்டம்
பொருந்துவ நிரம்ப ஏற்றிச்
சலந்தரு கடவுட் போற்றித்
தலைமையாம் நாய்கன் தானும்
நலந்தரு நாளில் ஏறி
நளிர்திரைக் கடல்மேற் போனான்.
33

கடல்மிசை வங்கம் ஓட்டிக்
கருதிய தேயந் தன்னில்
அடைவுறச் சென்று சேர்ந்தங்
களவில்பல் வளங்கள் முற்றி
இடைசில நாள்கள் நீங்க
மீண்டும்அக் கலத்தில் ஏறிப்
படர்புனற் கன்னி நாட்டோர்
பட்டினம் மருங்கு சார்ந்தான்.
34

அப்பதி தன்னில் எய்தி
அலகில்பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில்மா நிதியம் எல்லாம்
ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர்
விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத்
திருமலி வதுவை செய்தான்.
35
Go to top

பெறலருந் திருவி னாளைப்
பெருமணம் புணர்ந்து முன்னை
அறலியல் நறுமென் கூந்தல்
அணங்கனார் திறத்தில் அற்றம்
புறமொரு வெளியு றாமற்
பொதிந்தசிந் தனையி னோடு
முறைமையின் வழாமை வைகி
முகமலர்ந் தொழுகு நாளில்.
36

முருகலர் சோலை மூதூர்
அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன
எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும்
புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர்
பெண்கொடி அரிதிற் பெற்றான்.
37

மடமகள் தன்னைப் பெற்று
மங்கலம் பேணித் தான்முன்
புடனுறை வஞ்சி நீத்த
ஒருபெரு மனைவி யாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத்
தொழுகுலம் என்றே கொண்டு
கடனமைத் தவர்தம் நாமங்
காதல்செய் மகவை இட்டான்.
38

இன்னிலை இவன்இங் கெய்தி
இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக்
காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத்
தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு
மனையறம் புரிந்து வைக.
39

விளைவளம் பெருக்க வங்க
மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர்
மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி
அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார்
கிளைஞர்தாங் கேட்டா ரன்றே.
40
Go to top

அம்மொழி கேட்ட போதே
அணங்கனார் சுற்றத் தாரும்
தம்முறு கிளைஞர்ப் போக்கி
அவன்நிலை தாமும் கேட்டு
மம்மர்கொள் மனத்த ராகி
மற்றவன் இருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையி னாளைக்
கொண்டுபோய் விடுவ தென்றார்.
41

மாமணிச் சிவிகை தன்னில்
மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந்
தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக்
காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச்
சேணிடைக் கழிந்து சென்றார்.
42

சிலபகல் கடந்து சென்று
செந்தமிழ்த் திருநா டெய்தி
மலர்புகழ்ப் பரம தத்தன்
மாநகர் மருங்கு வந்து
குலமுதல் மனைவி யாரைக்
கொண்டுவந் தணைந்த தன்மை
தொலைவில்சீர்க் கணவ னுக்குச்
சொல்லிமுன் செல்ல விட்டார்.
43

வந்தவர் அணைந்த மாற்றங்
கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
மொய்குழ லவர்பால் வந்தான்.
44

தானும்அம் மனைவி யோடும்
தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற
மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன்
இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்
என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்.
45
Go to top

கணவன்தான் வணங்கக் கண்ட
காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால்
அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி
உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ
வணங்குவ தென்கொல் என்றார்.
46

மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு

பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்.

47

என்றபின் சுற்றத் தாரும்
இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும்
வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங்
குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க
உணர்வுகொண் டுரைசெய் கின்றார்.

48

ஈங்கிவன் குறித்த கொள்கை
இதுஇனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற
தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று
பரமர்தாள் பரவி நின்றார்.
49

ஆனஅப் பொழுது மன்றுள்
ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர
வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம்
உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்குபேய் வடிவ மானார்.
50
Go to top

மலர்மழை பொழிந்த தெங்கும்
வானதுந் துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம
உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம்
குணலையிட் டனமுன் னின்ற
தொலைவில்பல் சுற்றத் தாருந்
தொழுதஞ்சி அகன்று போனார்.
51

உற்பவித் தெழுந்த ஞானத்
தொருமையின் உமைகோன் தன்னை
அற்புதத் திருவந் தாதி
அப்பொழு தருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத
புண்டரீ கங்கள் போற்றும்
நற்கணத் தினில்ஒன் றானேன்
நான்என்று நயந்து பாடி.
52

ஆய்ந்தசீர் இரட்டை மாலை
அந்தாதி யெடுத்துப் பாடி
ஏய்ந்தபேர் உணர்வு பொங்க
எயிலொரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக்
கைலைமால் வரையை நண்ண
வாய்ந்தபேர் அருள்முன் கூர
வழிபடும் வழியால் வந்தார்.
53

கண்டவர் வியப்புற் றஞ்சிக்
கையகன் றோடு வார்கள்
கொண்டதோர் வேடத் தன்மை
உள்ளவா கூறக் கேட்டே
அண்டர்நா யகனார் என்னை
அறிவரேல் அறியா வாய்மை
எண்டிசை மாக்க ளுக்கியான்
எவ்வுரு வாயென் என்பார்.
54

வடதிசைத் தேசம் எல்லாம்
மனத்தினும் கடிதிற் சென்று
தொடையவிழ் இதழி மாலைச்
சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கயிலை வெற்பிற்
பாங்கணைந் தாங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து பார்மேல்
தலையினால் நடந்து சென்றார்.
55
Go to top

தலையினால் நடந்து சென்று
சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
திருக்கண்நோக் குற்ற தன்றே.

56

அம்பிகை திருவுள் ளத்தின்
அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
நாயகன் அருளிச் செய்வான்.
57

வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்.
58

அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம்
பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா
மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்.
59

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
60
Go to top

கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்.
61

அப்பரி சருளப் பெற்ற
அம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை
விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால்
திகழ்திரு வாலங் காடாம்
நற்பதி தலையி னாலே
நடந்துபுக் கடைந்தார் அன்றே.
62

ஆலங்கா டதனில் அண்ட
முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது கொங்கை
திரங்கிஎன் றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை
மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்றும்
நடம்போற்றி நண்ணு நாளில்.
63

மட்டவிழ்கொன் றையினார்தந்
திருக்கூத்து முன்வணங்கும்
இட்டமிகு பெருங்காதல்
எழுந்தோங்க வியப்பெய்தி
எட்டிஇல வம்ஈகை
எனஎடுத்துத் திருப்பதிகங்
கொட்டமுழ வங்குழகன்
ஆடுமெனப் பாடினார்.
64

மடுத்தபுனல் வேணியினார்
அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ்
என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல்
ஆரளவா யினதம்மா.
65
Go to top

ஆதியோ டந்த மில்லான்
அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
திருத்தொண்டு புகலல் உற்றேன்.
66

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000