சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.029   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்குருகாவூர் வெள்ளடை - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு காவியங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வெள்ளிடையப்பர் திருவடிகள் போற்றி
பின்பு சீகாழிப் பதியைப் புறத்தே வலம் வந்து வணங்கித் திருஞானசம்பந்தர் திருவடிகளைப் போற்றிப் பரவிக் குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கிச் செல்வராயினார். வழியிடையே வன்றொண்டர் பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்தினார். அதனை உணர்ந்த இறைவன், மறையவர் வடிவில் தண்ணிரும் பொதிசோறும் கொண்டுவந்து வேனில் வெம்மை நீங்க நிழல் தரும் பந்தரையும் உண்டாக்கி நம்பியாரூரரின் வருகையை எதிர்பார்த்திருந்தார். சுந்தரர் அடியார் கூட்டத்துடன் அங்கு வந்து திருவைந்தெழுத்தோதி அமர்ந்தார். மறையவர் சுந்தரரை நோக்கி, நீர்மிகவும் பசியுடையவராகக் காணப்படுகின்றீர், யாம் கொண்டு வந்த இப்பொதி சோற்றை உண்டு இளைப்பாறுவீராக எனக் கூறி, சுந்தரரும் அடியார்களுடன் தாமும் உண்டு உணவளித்துபசரித்த மறையவரைப் பாராட்டி, அடியார்களுடன் இளைப்பாறித் துயில்கொண்டார். மறையவராய் வந்த இறைவன் பந்தருடன் மறைந்தார். துயிலுணர்ந் தெழுந்த சுந்தரர் மறையவரைக் காணாது அதிசயித்து, இவ்வாறருள் புரிந்தவர் குருகாவூர் இறைவனேயெனத் தெளிந்து இத்தனையா மாற்றை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டே திருக்கோயில் சென்று உணவளித்து உண்வித்த பெருமானைப் போற்றினார்.
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=sRZ1DTO-oc0   Add audio link Add Audio

இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!
பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்;
முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த
வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .

1

ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;
வாவியில் கயல் பாய, குளத்து இடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

2

பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும்
வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

3

வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்;
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை,
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

4

வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்;
சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

5
Go to top

பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்!
கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்!
மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

6

போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து, என்னை
நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்;
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

7

மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து இடை மால் தீர்ப்பாய்;
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக்
கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே,
விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

8

படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே;
தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே!
கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே
விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

9

வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை,
இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்-
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்குருகாவூர் வெள்ளடை
3.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்
Tune - அந்தாளிக்குறிஞ்சி   (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
7.029   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;
Tune - நட்டராகம்   (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000