வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும்
மயக்கம் பூண மோதிய துரம் ஈதே
மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே
உனது இரு தாளே பெறத் தந்து ஆளவே
உயர்ச் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே
இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா
இசைக்கும் தாள மேளமே தனத்தந் தான தானன எனத் திண் கூளி கோடிகள் புடை சூழ
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெரு வாழ்வே
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு
திருச்செங்கோடு மேவிய பெருமாளே.
வருத்தம் உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும் மயக்கம் கொள்ளும்படி அவர்களோடு உறவாடும் சுமையே இவ்வுடலாகும். துன்பங்களோடு கூடிப் பொருந்திய, உயிர்கள் (நற்கதி காணாது) கேடு அடையச் செய்யும், சாகப்போகும் மக்களுடைய உறவை நான் மேற்கொள்ளாமல், பெருத்து வளரும் பாவம் மிக்க (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் கொடுமை கூடிய பிறப்பு ஒழியவே, உனது திருவடிகளைப் பெறுமாறு எனக்குத் தந்து, என்னை ஆண்டருள்வாயாக. மேலான சுவர்க்கத்தை நான் சேர்வதற்காக நீ அருள் புரியும் சக்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுக. இரத்தம் பெருகிப் பாய உடலிலும் மார்பிலும் தாக்கி, வேலைக் கொண்டு எதிர்த்தும் அசுரர்கள் இறந்து பட போர் புரிந்த வேலனே, ஒலிக்கின்ற தாளமும் மேளமும் தனத்தந் தான தானன என்ற ஒலியை எழுப்ப, வலிய கோடிக் கணக்கான பூத கணங்கள் பக்கங்களில் சூழ, மிகவும் அன்புடன் ஒப்பற்ற மயிலை விரும்பி, புகழ் ஓங்கி வளர்ந்து அன்பே உருவாக விளங்கும் பெருஞ் செல்வமே, திரண்ட சங்குகளும், நீர் நிலைகளும், குளங்களும் மிகுத்து, கருங் குவளை மலர்கள் சூழ்ந்து மலரும் திருச் செங்கோடு என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் ... வருத்தம் உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே ... மயக்கம் கொள்ளும்படி அவர்களோடு உறவாடும் சுமையே இவ்வுடலாகும். மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே ... துன்பங்களோடு கூடிப் பொருந்திய, உயிர்கள் (நற்கதி காணாது) கேடு அடையச் செய்யும், சாகப்போகும் மக்களுடைய உறவை நான் மேற்கொள்ளாமல், பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே ... பெருத்து வளரும் பாவம் மிக்க (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் கொடுமை கூடிய பிறப்பு ஒழியவே, உனது இரு தாளே பெறத் தந்து ஆளவே ... உனது திருவடிகளைப் பெறுமாறு எனக்குத் தந்து, என்னை ஆண்டருள்வாயாக. உயர்ச் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே ... மேலான சுவர்க்கத்தை நான் சேர்வதற்காக நீ அருள் புரியும் சக்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுக. இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா ... இரத்தம் பெருகிப் பாய உடலிலும் மார்பிலும் தாக்கி, வேலைக் கொண்டு எதிர்த்தும் அசுரர்கள் இறந்து பட போர் புரிந்த வேலனே, இசைக்கும் தாள மேளமே தனத்தந் தான தானன எனத் திண் கூளி கோடிகள் புடை சூழ ... ஒலிக்கின்ற தாளமும் மேளமும் தனத்தந் தான தானன என்ற ஒலியை எழுப்ப, வலிய கோடிக் கணக்கான பூத கணங்கள் பக்கங்களில் சூழ, திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெரு வாழ்வே ... மிகவும் அன்புடன் ஒப்பற்ற மயிலை விரும்பி, புகழ் ஓங்கி வளர்ந்து அன்பே உருவாக விளங்கும் பெருஞ் செல்வமே, திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு ... திரண்ட சங்குகளும், நீர் நிலைகளும், குளங்களும் மிகுத்து, கருங் குவளை மலர்கள் சூழ்ந்து மலரும் திருச்செங்கோடு மேவிய பெருமாளே. ... திருச் செங்கோடு என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.