சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
காரிநாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.490  
கறைக் கண்டன் சருக்கம்
 
மறையவர் மிக்கு வாழ்கின்ற திருக்கடவூரில் வந்து தோன்றி, வளம் பலவும் நிறைந்த தமிழின் இனிய துறைகளின் பயனைத் தெரிந்து, சொல் விளங்க அதன் உட்கிடையான பொருளா னது மறைந்து நிற்குமாறு, குறைவற்ற தமிழ்க் கோவையைத் தம் பெயரால் விளங்குமாறு முறைப்படத் தொகுத்து இயற்றித் தமிழ்கூறும் நல்லுலகத்தவரான மூவேந்தரிடத்தும் பழகிய நட்பினராய், *** தமிழில் உள்ள துறைகள் பலவேனும் அவை அகம் புறம் எனும் இரண்டினுள் அடங்கும். கோவை என்பது அகப்பொருள் பற்றியதாகும். இந்நூல் இன்று கிடைத்திலது.
தம் பெயரால் கோவையை இயற்றினார் என்ற ஆசிரியர், அவர் பெயர் காரி என்பதை ஐந்தாம் பாடலிலேயே குறித் தருளுகின்றார். காரி - கருமை நிறம் பொருந்தி நஞ்சு. அதனை உண்டமையால் சிவபெருமான் காரி என்றும் அழைக்கப் பெற்றார். 'காரி உண்டிக் கடவுள திருக்கையும்' (மலைபடு. - 83) என வருவதால் இவ்வுண்மை அறியலாம். இதனால் இப்பெயர் இறைவரின் பெய ரென அறியலாம். காரி - மேகம் எனப் பொருள் கொண்டு, இந்நாயனார் அடியவர்களுக்கு வேண்டியவாறு கொடுத்தும், திருக்கோயில் திருப்பணிகள் பல செய்தும், கோவை எனும் அரிய நூலை வழங்கியும் உலகிற்கு உதவியமை பற்றி இப்பெயர் பெற்றார் என்றலும் ஒன்று.

அம்மூவேந்தர்களிடத்தும் மனம் மகிழுமாறு தாங்கருதிய பொருட்கு ஏற்ற சொற்களை நயம் பெறக் கூறி, நறுமணம் மிக்க பூமாலைகளை அணிந்திருக்கும் மன்னர்களிடம் பெற்ற செல்வக் குவியலைக் கொண்டு, கொடிய கண்ணையுடைய பாம்புடனே இயைந்து விளங்கும் பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய சிவபெருமான் இனிதாக வீற்றிருக்கும் திருக்கோயில்கள் பலவற்றை அமைத்தார். *** இவர் அமைத்த திருக்கோயில்கள் பற்றிய விவரம் ஏதும் இது பொழுது தெரிந்திலது.
யாவர்க்கும் மனம் மகிழும் படியான இன்பம் தரும் சொற்பயன்களையே கூறித், தேவர்களுக்கெல்லாம் தேவரான சிவ பெருமானின் சிறப்புடைய அடியார்கள் எல்லார்க்கும் அவர் விரும்புமாறு பெரும் பொருள்களை மிகவும் அளித்து, ஆனேற்று ஊர்தியையுடைய இறைவரின் சோலைகளையுடைய திருக்கயிலா யத்தை எப்போதும் மறவாத எண்ணமுடையவராகி, *** இம் மூன்று பாடல்களாலும் நாயனார் புலவர்க்குப் புலவராயும், தொண்டர்க்குத் தொண்டராயும், திருப்பணிச் செல்வர்க் குத் திருப்பணிச் செல்வராயும் இருந்தமை விளங்குகின்றது.
பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் தம் புகழினை நிலை நிறுத்தி, ஆராய்ந்து தெளிந்த உணர்விலே இடையறாத அன்பு உடையவராய் இருந்து, அழகிய கங்கையாறு பொருந்திய நீண்ட சடையையுடைய இறைவரின் அருளைப் பெற்ற தொடர்பினால், அப்பெருமானைப் பொருந்திய மனத்தால் சேர்ந்தது போலவே, உடலாலும் வடகயிலை மலையைச் சேர்ந்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
தேன் பொருந்திய மலர்க்கொன்றையை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவடியைப் பேணும் காரி நாயனா ரின் அடிகளை வணங்கிக் கடல் போல் நிறைந்து வழியும் மதம் பொருந்திய யானைப் படையையுடைய பாண்டியர்களுக்குரிய சந்திர மரபில் தோன்றிய 'நின்றசீர் நெடுமாற நாயனாரின்' திருத்தொண்டி னைக் கூறுவாம். *** வேரி - தேன். காரி நாயனார் புராணம் முற்றிற்று.

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history