சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை pann திருநேரிசை:காந்தாரம்
4.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AZ_kpWQFf_Q
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=61iq2NzFuUI
4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.054   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருப்புகலூர் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[1]
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக்
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்;
ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம்
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

[2]
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,
அப்பர் போல் ஐவர் வந்து(வ்), அது தருக, இது விடு! என்று(வ்)
ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்-
செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே!

[3]
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி,
நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும்
அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும்
செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[4]
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி,
களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[5]
இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[6]
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்;
வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்-
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!

[7]
நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி,
ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்),
ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற,
தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே.

[8]
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால;
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

[9]
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.056   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[1]
மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்;
குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்;
கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[2]
உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்;
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்;
கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[3]
மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்;
எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்;
தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[4]
பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்;
கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்;
வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே.

[5]
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்;
துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்;
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[6]
விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்;
படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

[7]
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த;
நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப;
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே.

[8]
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும்,
தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்,
தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்;
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே.

[9]
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.058   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[1]
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[2]
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[3]
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[4]
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.

[5]
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.

[6]
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.

[7]
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.

[8]
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.

[9]
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000