சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
11.017   நக்கீரதேவ நாயனார்   திருமுருகாற்றுப்படை   திருமுருகாற்றுப்படை
பண் -   (ஆறுபடை வீடு )

Back to Top
நக்கீரதேவ நாயனார்   திருமுருகாற்றுப்படை  
11.017   திருமுருகாற்றுப்படை  
பண் -   (திருத்தலம் ஆறுபடை வீடு ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை 5
மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் உள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் 10
துருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில் 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25
துவர முடித்த துகள்அறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35
வேங்கை நுண்தா தப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40
சூர்அர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் 45
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட் 50
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத் 60
தெய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்

இரவலன் நிலைசேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்
செவ்வநீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்நசை வாய்ப்ப 65
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே

திருப்பரங்குன்றம்செருப்புகன் றெடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70
மாடம்மலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன்
அதாஅன்று.

திருச்சீரலைவாய்வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஒடையொடு துயல்வரப் 80
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண்
டைவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 85
மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் 90
மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம் 95
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் 100
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் 105
செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை
உக்கம் சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை 110
அசைஇய தொருகை
அங்குசம் கடாவ ஒருகை இருகை
ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப
ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாரொடு பொலிய ஒருகை 115
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப
ஒருகை பாடின் படுமணி இரட்ட
ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய
ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கப் 120
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல
உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ 125
விசும் பாறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே
அதாஅன்று

திருஆவினன்குடிசீரை தைஇய உடுக்கையர் சீரொடு 130
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசற விளங்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு 135
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவனர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் 140
துனியில் காட்சி முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் 145
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல் 150
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பலவரிக் கொழுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு 155
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் 160
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் 165
பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இகலில் காட்சி 170
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்த தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட 175
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி அசைதலும் உரியன் 180
அதா அன்று

திருஏரகம்இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை 185
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புல உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தற்புகழ்ந் 190
தாறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உரியன்
அதாஅன்று

குன்றுதோறாடல்பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் 195
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல் 200
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் 205
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 210
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம் 215
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி 220
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே
அதா அன்று

பழமுதிர்சோலைசிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ 225
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் 230
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி 235
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொ விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் 240
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி 245
இமிழிசை அருவியோ டின்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் 250
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே 255
ஆண்டாண் டாயினும் ஆக காண்தக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 260
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி 265
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே 270
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக 275
நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள
அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்ற டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெஎழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் 280
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு 285
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக்
குறித்தது மொழியா அளவையில் குறித்துடன்
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன் 290
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் 295
மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவுஇன்
றிருள்நிற முந்நீர் வளைஇய உலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய 300
பெறலரும் பரிசில் நல்கும்மதி பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்
தாரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த 305
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 310
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 315
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொ
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம்
பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட் 320
டாமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்
றிழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. 323

[1]
குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 1

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 2

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 3

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 5

அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 6

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 7

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 8

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும். 10

[2]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam lang tamil string value %E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88